ஆசியக் கிண்ணம் நெருங்கிய நிலையில் இந்திய அணிக்கு சிக்கல்

Asia Cup 2022

134

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ராஹுல் டிராவிட்டுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணத்துக்கு பயணிக்கவுள்ள இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான வழக்கமான கொவிட்-19 பரிசோதனை இன்றைய தினம் (23) மேற்கொள்ளப்பட்டபோதே, ராஹுல் டிராவிட்டுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாத்தில் மொஹமட் நயீம்

இதுதொடர்பில் இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஹுல் டிராவிட் தற்போது இந்திய கிரிக்கெட் சபை வைத்தியக்குழுவின் கண்கானிப்பில் இருப்பதாகவும், மற்றுமொரு கொவிட்-19 பரிசோதனையில் தொற்று இல்லையென உறுதிசெய்யப்பட்டால் ஆசியக் கிண்ணத்தக்கான அணியுடன் இணைந்துக்கொள்வார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஹுல் டிராவிட் இன்றைய தினம் டுபாய் நோக்கி புறப்படவிருந்த நிலையில், கொவிட்-19 தொற்று காரணமாக ஆரம்ப போட்டிகளை தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிராவிட் ஆரம்ப போட்டிகளில் இந்திய அணியுடன் இணையமுடியாத காரணத்தால், தேசிய கிரிக்கெட் அகடமியின் பணிப்பாளர் வி.விஎஸ். லக்ஷமன் தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வி.விஎஸ். லக்ஷமன் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடர் மற்றும் இறுதியாக நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர்களில் இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், ஜிம்பாப்வே தொடரை இந்திய அணி 3-0 எனவும் கைப்பற்றியிருந்தது.

ஆசியக்கிண்ணத்தொடர் இம்மாதம் 27ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், இந்திய அணியானது தங்களுடைய முதல் போட்டியில் எதிர்வரும் 28ம் திகதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<