இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதேவேளை, தங்களுடைய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.
டெஸ்ட் தொடரின் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான …
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட், முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். காலி டெஸ்ட் போட்டியில் விளையாடிய பதினொருவருடன் இங்கிலாந்து அணி களமிறங்கியிருந்தது. உபாதை காரணமாக வெளியேறிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஓய்வுபெற்ற ரங்கன ஹேரத் ஆகியோருக்கு பதிலாக ரொஷேன் சில்வா மற்றும் மலிந்த புஷ்பகுமார ஆகிய இரண்டு மாற்றங்களை இலங்கை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கை அணி
சுரங்க லக்மால் (தலைவர்), திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, தனன்ஜய டி சில்வா, குசால் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, அகில தனன்ஜய, மலிந்த புஸ்பகுமார
இங்கிலாந்து அணி
கீடொன் ஜென்னிங்ஸ், ரோய் பர்ன்ஸ், மொயீன் அலி, ஜோ ரூட் (தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், பென் போகஸ், ஆதில் ரஷீட், செம் கரன், ஜெக் லீச், ஜேம்ஸ் எண்டர்சன்
ஆரம்பத்தில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை சோதித்த இலங்கை அணி, மதிய போசன இடைவேளைக்கு முன்னர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது. காலி மைதானத்தில் சதம் கடந்த கீடொன் ஜென்னிங்ஸை ஒரு ஓட்டத்துடன் அணித் தலைவர் சுரங்க லக்மால் வெளியேற்ற, அடுத்துவந்த பென் ஸ்டோக்ஸை (19) டில்ருவான் பெரேரா ஆட்டமிழக்கச் செய்தார்.
இதே வேகத்தில் ஹேரத்துக்கு பதிலாக அணிக்குள் நுழைந்த மலிந்த புஷ்பகுமார, இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்டை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.
அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் நிதானமாக அரைச்சதத்தை நோக்கி துடுப்பெடுத்தாடினார். பின்னர், சுரங்க லக்மால் பந்து வீச்சு மாற்றத்தை ஏற்படுத்தி அகில தனன்ஜயவை அழைக்க, அவரது முதல் ஓவரில் ரோரி பேர்ன்ஸ் (43) ஆட்டமிழந்து, அரைச்சதத்தை தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து ஜோஸ் பட்லர் தனது வழமையான அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சவால் கொடுக்க, இங்கிலாந்து அணி மதிய போசன இடைவேளையில் 120 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
உணவு இடைவேளையை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் மேலும் நெருக்கடியை கொடுக்கத் தொடங்கினர். மொயீன் அலி 10 ஓட்டங்களுடன் மலிந்த புஷ்பகுமாரவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பென் போக்ஸ் டில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வேகமாக 63 ஓட்டங்களை பெற்றிருந்த ஜோஸ் பட்லர் வெளியேற, இங்கிலாந்து அணி 171 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழக்க நேரிட்டது.
எனினும், அணியை இக்கட்டிலிருந்து மீட்ட செம் கரன், ஆதில் ரஷீட் மற்றும் செம் கரன், ஜேம்ஸ் எண்டர்சன் ஆகியோரின் இணைப்பாட்டங்கள் இலங்கை அணிக்கு ஏமாற்றத்தை தந்தது. செம் கரன், ஆதில் ரஷீட் ஜோடி 45 ஓட்டங்களை இணைப்பாட்டமாகவும், இறுதி விக்கெட்டுக்காக செம் கரன் மற்றும் ஜேம்ஸ் எண்டர்சன் ஜோடி 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாகவும் பெற, இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 285 ஓட்டங்களை பதிவுசெய்தது.
அணி சார்பாக அதிக ஓட்டங்களை பெற்ற செம் கரன் 6 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 64 ஓட்டங்களையும், ஆதில் ரஷீட் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தனது இடத்தை பெறும் பந்து வீச்சாளருக்கு அறிவுரை வழங்கிய ரங்கன ஹேரத்
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன…
இலங்கை அணியின் பந்து வீச்சை பொருத்தவரை, முதல் விக்கெட்டை சுரங்க லக்மால் வீழ்த்தியிருந்த போதும், மிகுதி 9 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியிருந்தனர். டில்ருவான் பெரேரா 61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ரங்கன ஹேரத்துக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதேவேளை, எதிரணிக்கு 5.71 என்ற வேகத்தில் 80 ஓட்டங்களை வழங்கியிருந்த அகில தனன்ஜய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா 6 ஓட்டங்களுடன் ஜெக் லீச்சின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்ன 19 ஓட்டங்களுடனும், மலிந்த புஷ்பகுமார ஒரு ஓட்டத்துடனும் களத்தில் உள்ளனர்.
போட்டி சுருக்கம்




















