நான் இதுவரை கண்டிராத சிறந்த இன்னிங்ஸ்: பாபரை புகழ்ந்த சர்பராஸ்

552
©Getty image

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்றுக்கொண்ட வெற்றிக்கு பாபர் அசாமின் துடுப்பாட்டம் முக்கிய காரணமாக இருந்ததாகத் தெரிவித்த பாகிஸ்தான் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட், அவருடைய ஆட்டத்தை இதுவரை தான் கண்டிராத சிறந்த இன்னிங்ஸ் எனவும் புகழாரம் சூட்டினார். 

நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாகிஸ்தான்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 33……

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் பாபர் அசாம், ஹரிஸ் சொஹைல் இருவரின் அதிரடியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பையும் பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டது

முன்னதாக இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, அதன்பின்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று மீண்டு வந்தது

தற்போது 1992 உலகக் கிண்ணத்தைப் போல நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்து, அந்த வரலாற்றை பாகிஸ்தான் அணி மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இடம்பெற்ற பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்த பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட், பாபர் அசாமின் துடுப்பாட்டத்தினை பாராட்டியிருந்தார்.

இன்றைய போட்டியில் களத்தடுப்பானது முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டது. துரதிஷ்டவசமாக முந்தைய போட்டிகளில் நாங்கள் களத்தடுப்பில் சிறப்பாக செயல்படவில்லை. எனவே, அதற்காக நாங்கள் கடுமையாக பயிற்சிகளை செய்தோம். இன்று நாங்கள் விளையாடிய விதம், இது ஒரு சிறந்த கூட்டு முயற்சியாகும்

அத்துடன், அனைத்து பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர், இறுதியில் பாபர் மற்றும் ஹரிஸ் சொஹைல் ஆகிய இருவரும் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தனர். உண்மையில் இதுபோன்ற இன்னிங்ஸை நான் பார்த்தது கிடையாது என்றார்.  

நேற்றைய போட்டியின் பின்னர், இம்முறை உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு தெரிவாகும் அணியில் போட்டி அதிகரித்துள்ளது. குறிப்பாக, இதுவரை எந்தவித தோல்வியையும் சந்திக்காத நியுசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதைத் தொடர்ந்து, இம்முறை உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் சம்பியனாகும் என்றும் பலர் கருத்து வெளியிட்டனர். 

உலகக் கிண்ணத்தில் ஆர்ச்சர், வோர்னர், ஸ்டார்க் படைத்த சாதனை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ………

இது குறித்து கருத்து தெரிவித்த சர்பராஸ், ”இந்த ஆடுகளத்தில் 240 ஓட்டங்கள் என்பது எளிதான இலக்கு அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் 50 ஓவர்கள் துடுப்பாட விரும்பினோம். இந்த ஆடுகளத்தில் பாபர் மற்றும் ஹரிஸ் விளையாடிய விதம் பாராட்டத்தக்கது. 1992 உலகக் கிண்ணப் போட்டிகளில் நடந்ததைப் போலவே இம்முறை உலகக் கிண்ணத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என எமது ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனால் நாங்கள் அவ்வாறு சிந்திக்கவில்லை.  

உண்மையில் எமது அடுத்த இலக்கு ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் வெற்றி பெறுவதாகும். நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே, எஞ்சியுள்ள போட்டிகளிலும் நாங்கள் நன்றாக விளையாடுவோம் என்று அவர் தெரிவித்தார்.  

பாகிஸ்தான் அணி அடுத்த லீக் போட்டியில் 29ஆம் திகதி ஆப்கானிஸ்தானையும், ஜூலை 5ஆம் திகதி பங்களாதேஷையும் எதிர்கொள்கிறது. எனவே, இவ்விரண்டு அணிகளையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்து 1992 உலகக் கிண்ணத்தைப் போல பாகிஸ்தான் இம்முறையும் சாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<