தேசிய விளையாட்டு விழா மரதன், வேகநடை, சைக்கிளோட்டப் போட்டிகள் கதிர்காமத்தில்

120

கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கம் காரணமாக கடந்த வருடம் தடைப்பட்ட 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன், வேகநடை மற்றும் சைக்கிளோட்டப் போட்டிகள் இம்மாதம் 26, 27, 29ஆம் திகதிகளில் கதிர்காமத்தில் நடைபெறவுள்ளது.

இருபருபாலாருக்கும் நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளுக்கு நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் நெஸ்டமோல்ட் பிரதான அனுசரணை வழங்க முன்வந்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்டாலும் மரதன், வேகநடை மற்றும் சைக்கிளோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் இம்முறை அதிகளவான வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

கொரோனாவினால் தேசிய விளையாட்டு விழா மீண்டும் ஒத்திவைப்பு

இதன்படி, வேகநடைப் போட்டியில் பங்குபற்றுவதற்கு 113 வீரர்களும், 38 வீரங்கனைகளும் தங்களது பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதில் அதிகளவான வீரர்கள் (38 பேர்) தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அதேபோல, மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு 99 வீரர்களும், 38 வீரங்கனைகளும் தங்களது பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதில் அதிகளவான வீரர்கள் (34 பேர்) மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இதேநேரம், சைக்கிளோட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு 271 வீரர்களும், 36 வீரங்கனைகளும் தங்களது பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதில் அதிகளவான வீரர்கள் (180 பேர்) மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில், 26ஆம் திகதி ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டி காலை 5.30 மணிக்கு கதிர்காமம் பஸ் தரிப்பிடத்துக்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி 42.195 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்டதாக இருக்கும்.

வரலாற்றில் முதல்முறை 60 வீர, வீராங்கனைகள் விளையாட்டுத்துறை அமைச்சுடன் ஒப்பந்தம்

தொடர்ந்து 27ஆம் திகதி ஆண், பெண் இருபாலாருக்குமான 20 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட வேகநடைப் போட்டி காலை 10.00 மணிக்கும், 29ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆண்களுக்கான ரேஸிங் சைக்கிளோட்டமும், மாலை 4.00 மணிக்கு பெண்களுக்கான ரேஸிங் சைக்கிளோட்டடும் நடைபெறவுள்ளது.

அத்துடன், தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் இந்த மூன்று போட்டிகளிலும் வெற்றயீட்டும் வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற பணப்பரிசுத் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலிடத்துக்கு 50 ஆயிரம் ரூபாவும், இரண்டாவது இடத்துக்கு 40 ஆயிரம் ரூபாவும், மூன்றாமிடத்துக்கு 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. அத்துடன், 4ஆவது இடத்திலிருந்து 10ஆவது இடம் வரை 20 ஆயிரம் ரூபா முதல் 8 ஆயிரம் ரூபா வரை பணப்பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2021 இற்கான மெய்வல்லுனர் அட்டவணை வெளியீடு

இதற்குமுன் முதலிடத்தைப் பெற்றுக்கொள்கின்ற வீரருக்கு 25 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டு வந்ததுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இம்முறை பணப்பரிசு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஏற்பாடு மற்றும் நெஸ்டமோல்ட் நிறுவனத்தின் அனுசரணை தொடர்பில் ஊடகங்களைத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று (23) விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Photos: 46th National Sports Festival Marathon, Race Walking & Cycling Press Conference

இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், கொவிட் வைரஸ் காரணமாக தடைப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நெஸ்ட்லே நிறுவனம் வழங்கிவருகின்ற பங்களிப்பினை பாரட்டுகிறேன்.

அதேபோல, மரதன், வேகநடை மற்றும் சைக்கிளோட்டப் போட்டிகளில் சிறந்த வீரர்களை உருவாக்கி, அவர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.

இதன்படி, தேசிய மட்டத்திலான 3 சைக்கிளோட்டப் போட்டிகளையும், சர்வதேச வீரர்கள் பங்குபற்றுகின்ற சைக்கிளோட்டப் போட்டியொன்றையும் அடுத்த வருடம் முதல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<