ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை வீரர்களுக்கு பின்னடைவு

Asian Athletics Championships 2025

18

தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நேற்று (31) நிறைவுக்கு வந்த 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி, 3 வெண்கலப் பதக்கங்களை மாத்திரம் வென்று பதக்கப் பட்டியலில் 18ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றத்துடன் இந்த தொடரை நிறைவு செய்தது. 

ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் மற்றும் தென் கொரிய மெய்வல்லுனர் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமாகியது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர் 

எனவே, கடந்த 5 நாட்களாக நடைபெற்ற இப்போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 20 வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், இதில் இலங்கை அணி 3 வெண்கலப் பதக்கங்களை மாத்திரம் வென்றது 

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் காலிங்க குமாரகே வெண்கலப் பதக்கம் வென்றார். தனிநபர் போட்டி நிகழ்ச்சியில் இலங்கைக்கு கிடைத்த ஒரேயொரு பதக்கம் இதுவாகும். அதேபோல, 4×400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டி மற்றும் பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில், இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் கடைசி நாளாள இன்றைய தினம் (31) 3 இலங்கை வீரர்கள் பதக்க எதிர்பார்ப்புடன் களமிறங்கினர். இதில் இலங்கைக்கு ஒரு பதக்கமேனும் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட ருமேஷ் தரங்க மற்றும் சுமேத ரணிசிங்க ஆகிய இருவரும் முறையே 4ஆவது மற்றும் 7ஆவது இடங்களைப் பிடித்து ஏமாற்றம் அளித்தனர் 

இதில் ருமேஷ் தரங்க 83.27 மீற்றர் தூரத்தையும், சுமேத ரணசிங்க 79.81 மீற்றர் தூரத்தையும் எறிந்து திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். எவ்வாறாயினும், நேற்று முன்தினம் (30) நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் ருமேஷ் தரங்க ஒரே முயற்சியில் 83.34 மீற்றர் தூரத்தையும், சுமேத ரணசிங்க 81.33 மீற்றர் தூரத்தையும் பதிவுசெய்து இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்ற 12 வீரர்களில் முறையே 2ஆவது மற்றும் 4ஆவது இடங்களைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், 86.40 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, இந்தியாவின் சச்சின் யாதவ் (85.16 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், ஜப்பானின் யுட்டா சக்கியாமா (83.75 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர் 

இதனிடையே, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ரசாரா விஜேசூரிய 11ஆவது இடத்தைப் பிடித்தார். போட்டியை நிறைவுசெய்ய 16 நிமிடங்கள் 29.15 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட இவருக்கு 7ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. எவ்வாறாயினும், குறித்த போட்டியில் அவர் பதிவுசெய்த நேரப் பெறுமதியானது புதிய இலங்கை சாதனையாக பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

இதேவேளை, ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டம் தகுதிகாண் சுற்றில் பங்குபற்றி அரை இறுதிக்கு தகுதிபெற்ற காலிங்க குமாரகே, காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக குறித்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் 

400 மீற்றர், 4×400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டம் மற்றும் ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டம் ஆகிய போட்டிகளில் தொடர்ச்சியாக பங்குபற்றிய காலிங்க குமாரகே, ஆண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் போட்டியிலும் பங்குபற்றி அரை இறுதிக்கு தகுதிபெற்றார். எனவே, கடந்த நான்கு தினங்களாக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்குபற்றிவந்த காலிங்கவுக்கு கால் விரலில் ஏற்பட்ட காயத்தால் 200 மீற்றர் அரை இறுதிப் போட்டியிலிருந்து விலக வேண்டி ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது 

இதற்கிடையில், போட்டித் தொடரின் நான்காவது நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியின் தகுதிகாண் சுற்றில் கோல் பரிமாற்றத்தில் தவறு செய்த இலங்கை அணி, இறுதிப் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை இழந்தது. 

இலங்கை அணியில் இடம்பெற்ற சமோத் திசாநாயக்க, சமோத் யோதசிங்க, தினேத் இந்துவர ஆகிய மூவரும் மிகத் திறமையாக ஓடி கோல் பரிமற்றத்தை மேற்கொண்ட போதிலும், நான்காவது (இறுதி) கட்டத்தின் ஆரம்பத்தில், மூன்றாவது கட்டத்தை முடித்த தினெத் இந்துவரவிடமிருந்து கோலைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும்போது யுபுன் அபேகோன் கோலை தவறவிட்டார். இதனால் குறித்த போட்டியை இலங்கை அணியால் நிறைவுசெய்ய முடியாமல் போக, பதக்க வாய்ப்பும் தவறவிடப்பட்டது 

ஒட்டுமொத்தத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய யுபுன் அபேகோன், ஒரு மோசமான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு மீண்டும் இத்தாலிக்கு புறப்பட்டுச் செல்கிறார். ஆசிய சம்பியன்ஷிப்பில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஆகிய தனிநபர் போட்டி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காததும் கேள்விக்குறியாக இருந்தது. 

இந்த நிலையில், கடந்த 2023இல் பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 00.66 செக்கன்களில் ஓடிமுடித்து ஆசிய சாதனையுடன் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரட்ன தங்கப் பதக்கம் வென்றார். எவ்வாறாயினும், மேலதிக பயிற்சிகளுக்காக அமெரிக்காவிற்குச் சென்றுள்ள அவரால் இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குபற்ற முடியவில்லை. இதனிடையே, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள் 00.08 செக்கன்களில் ஓடிமுடித்து சீனாவின வு ஹாங்ஜியாவோ தருஷியின் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.   

ஏனவே, நேற்று (31) நிறைவடைந்த 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை மூன்று வெண்கலப் பதக்கங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இருப்பினும், 2 ஆண்டுகளுக்கு முன் பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தது. ஆனால் இம்முறை இலங்கை 18ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.   

மறுபுறத்தில் தெற்காசியாவை பொறுத்தமட்டில் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையின் வலிமையான போட்டியாளராக உள்ள இந்தியா, இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாக உருவெடுத்து, 8 தங்கப் பதக்கங்கள் உட்பட 10 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பதக்கப் பட்டியலில் வழக்கம்போல சீனா, 19 தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது. 

இதேவேளை, 27ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது 2027ஆம் ஆண்டு சீனாவின் சியாமெனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும்பலமெய்வல்லுனர்  செய்திகளைப்படிக்க <<