பெண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் 

Asian Athletics Championships 2025

13
Asian Athletics Championships 2025

தென் கொரியாவின் குமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 26ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 3ஆவது நாளான இன்றைய தினம் (29) நடைபெற்ற பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.

குறித்த போட்டியை நிறைவு செய்ய 3 நிமிடங்கள் 36.67 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக் கொண்டது. வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை அணியில் சயுரி மெண்டிஸ், நதீஷா ராமநாயக்க, ஜயேஷி உத்தரா மற்றும் நிஷேந்த்ரா ஹர்ஷனி பெர்னாண்டோ ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்னர் பாங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை சாதனையுடன் இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. எனினும், இம்முறை இலங்கை அணியால் வெண்கலப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது.

.அதேபோல, இன்று நடைபெற்ற பெண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 34.18 செக்கன்களில் நிறைவு செய்து இந்திய அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரிக்க, வியட்நாம் அணியினர் (3:34.77) வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இதில் சிறப்பம்சம் என்னவெனில் இறுதியாக 2023இல் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இதே வியட்நாம் அணி தங்கப் பதக்கத்தையும், இந்திய அணி வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, 2023ஆம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4×400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணிக்கு இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 5ஆவது இடத்தையே பெற்றுக்கொண்டது.

தடும் போட்டித்தன்மையை ஏற்படுத்திய ஆண்களுக்கான 4×ர400 அஞ்சலோட்டப் போட்டியை நிறைவுசெய்ய 3 நிமிடங்கள், 08.55 செக்கன்களை இலங்கை அணி எடுத்துக்கொண்டது. அருண தர்ஷன மற்றும் காலிங்க குமாரகே ஆகிய இருவரும் அனுபவ வீரர்களாக இப்போட்டியில் ஓடியிருந்த போதிலும், ஏனைய 2 வீரர்களினதும் அனுபவமின்மை மற்றும் மந்தமான ஓட்டம் ஆகியன இலங்கையின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

எனினும், இன்று முற்பகல் நடைபெற்ற 4×400 மீற்றர் அஞ்சலோட்ட இரண்டாவது தகுதிகாண் போட்டியை 3 நிமிடங்கள், 07.66 செக்கன்களில் நிறைவுசெய்த இலங்கை அணி முதலாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் கத்தார் அணி (3:03.52 செக்.) தங்கப் பதக்கத்தையும், இந்திய அணி (3:03.67 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தன. இதில் சிறப்பம்சம் என்னவெனில் இறுதியாக 2023இல் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இதே இந்திய அணி வெள்ளிப் பதக்கத்தையும், கத்தார் அணி வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை மெத்மி ரசாரா விஜேசூரிய புதிய இலங்கை சாதனை படைத்தார். குறித்த போட்டியை 33 நிமிடங்கள், 21.62 செக்கன்களில் நிறைவுசெய்து 7ஆவது இடத்தைப் பிடித்த ரசாரா, 33 நிமிடங்கள், 39.60 செக்கன்கள் என்ற தனது முந்தைய சொந்த இலங்கை சாதனையை முறியடித்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட லெசந்து அர்த்தவிது, 2.10 மீற்றர் உயரத்தைத் தாவி 8ஆவது இடத்தைப் பிடித்தார்.

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் மூன்றாவது நாள் போட்டி நிகழ்ச்சிகள் நிறைவடையும் போது இலங்கை இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, ஆசிய சம்பியன்ஷிப்பின் 4ஆவது நாளான நாளைய தினம் (30) ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிகாண் சுற்றில் சுமேத ரணசிங்க மற்றும் ஆண்களுக்கான 200 மீற்றர் தகுதிகாண் சுற்றில் காலிங்க குமாரகே ஆகியோர் போட்டியிடவுள்ளனர், அதே நேரத்தில் ஆண்களுக்கான 4×100மீற்றர் அஞ்சலோட்ட தகுதிகாண் சுற்றில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது.

இதற்கிடையில், ஆண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் உள்ளிட்ட தனிநபர் போட்டிகளில் பங்குபற்றுவதை தவிர்த்துக் கொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன், நாளை (30) நடைபெறவுள்ள ஆண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்ட தகுதிகாண் சுற்றில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கம் உறுதிப்படுத்தியது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<