சென்னையில் விளையாடுவாரா அஞ்சலோ மேத்யூஸ்?

137

8வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் 12 மைதானங்களில், எதிர்வரும் 8ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பிடித்து இருக்கும் இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாட பல்வேறு அமைப்புகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிக்கான சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படவில்லை.

இலங்கை வீரர்களுக்கான தடை இந்த ஆண்டும் நீடிக்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை  ஐபிஎல் நிர்வாக குழுவுக்கும் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே சென்னையில் நடைபெறும் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் யாரும் களம் காண முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.