இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 18 வீரர்கள்!

Sri Lanka Cricket

2373

இலங்கை கிரிக்கெட்டின் வருடாந்த வீரர்கள் ஒப்பந்தத்தில், அணியின் 18 வீரர்கள் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, இந்த ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதிவரை செல்லுப்படியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓமான் அணியுடன் T20 போட்டிகளில் ஆடவுள்ள இலங்கை

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கு முதல் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படப்பட்ட விடயங்களில், எந்தவித மாற்றங்களும் இல்லையென இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, தேர்வுக்குழுவினர் நான்கு பிரிவுகளாக வீரர்களுக்கான ஒப்பந்தத்தை வகுத்துள்ளனர். இதில் முக்கியமாக செயல்திறன், உடற்தகுதி, தலைமைத்துவம், அனுபவம், தொழில்முறை, நடத்தை மற்றும் எதிர்காலம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, பல வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பவில்லை. வகைப்படுத்தல் தொடர்பாக ஒவ்வொரு வீரருக்கும் எவ்வாறு புள்ளிகள் ஒதுக்கப்பட்டது என்பதில் சில வெளிப்படைத்தன்மை கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தில் கையழுத்திடவில்லை. எனினும், தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த இந்த ஒப்பந்தத்தில், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் இசுரு உதான ஆகியோர் இணைத்துக்கொள்ளப்படவில்லை. அஞ்செலோ மெதிவ்ஸ் கடந்த ஜூலை மாதத்தில் வீரர்கள் தேர்விலிருந்து விலகுவதாக குறிப்பிட்டார். எனவே, அவர் ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை. அதேநேரம், இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த மாதம் ஓய்வை அறிவித்திருந்தார்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையின் தடைக்கு முகங்கொடுத்திருக்கும் குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்பதுடன், வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை.

ஒப்பந்தம் பெற்றுள்ள 18 வீரர்கள்

தனன்ஜய டி சில்வா, குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமால், லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ, ஓசத பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, அஷேன் பண்டார, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<