இங்கிலாந்தின் 14 வீரர்களுக்கு திடீர் சுகயீனம் ; முதல் போட்டி நடக்குமா?

England tour of Pakistan 2022

296

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியின் பதினான்கு வீரர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி புறப்பட்டுச்சென்றுள்ளது.

ஜனவரியில் ஆரம்பமாகவுள்ள ILT20 தொடர்!

ராவல்பிண்டியில் நாளை வியாழக்கிழமை (01) முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், வீரர்கள் 14 பேருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. எனவே, முதல் டெஸ்ட் போட்டி சற்று ஒத்திக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகயீனம் ஏற்பட்டுள்ள வீரர்களில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஹெரி புரூக், ஜெக் கிரவ்லி, கீடன் ஜென்னிங்ஸ், ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். குறித்த இந்த வீரர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதலில் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக அணி நிர்வாகத்திடம் அறிவித்திருந்த ஜோ ரூட் குணமடைந்து பயிற்சிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு 14 வீரர்கள் சுகயீனத்துக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், முதல் டெஸ்ட் போட்டியை ஒத்திவைப்பதற்கான கலந்துரையாடல்களில் இரண்டு கிரிக்கெட் சபைகளும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுமார் 17 வருடங்களுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<