SAG பளுதூக்கல் முதல் நாளில் இலங்கைக்கு ஒரு தங்கம் உட்பட 5 பதக்கங்கள்

18

நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டு விழாவில் இன்று (05) ஆரம்பமாகிய பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஒரு தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாளான இன்றைய தினம் மெய்வல்லுனர், பளுதூக்கல் போட்டிகள் முக்கிய இடத்தை வகித்ததுடன், இலங்கை வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

SAG பளுதூக்கல் அணியில் இடம்பிடித்த முதல் தமிழ் வீராங்கனை ஆர்ஷிகா

நேபாளத்தின் கத்மண்டு மற்றும்….

இதன்படி, பளுதூக்கல் போட்டிகள் பொக்கராவில் ஆரம்பமாகியதுடன், இதில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை இசுரு குமார வென்றிருந்தார். 

ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இலங்கையின் இசுரு குமார தங்கப்பதக்கம் வென்றார்.

ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்குபற்றி அவர், மொத்தமாக 248 கிலோகிராம் எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். 

இவர் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக சிரேஷ்ட பிரிவில் களமிறங்கி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான 61 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட திலங்க பலகசிங்க வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெண்களுக்கான ஒருசில போட்டிகளும் இன்று நடைபெற்றது. இதில் 45 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஸ்ரீமாலி சமரகோன், ஸ்னெச் முறையில் 58 கிலோகிராம் மற்றும் கிலீன் என்ட் ஜேர்க் முறையில் 81 கிலோ கிராம் உள்ளடங்கலாக 139 கிலோகிராம் எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆசிய பளுதூக்கலில் வரலாற்று வெற்றியுடன் பதக்கம் வென்ற டிலங்க

சீனாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய…

இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜில்லி தலபெஹரா (151 கிலோகிராம் எடை) தங்கப் பதக்கத்தையும், நேபாளின் சங்கிதா ராய் (127 கிலோகிராம்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதேநேரம், பெண்களுக்கான 49 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கையின் தினூஷா ஹன்சனி கோமஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்னெச் முறையில் 71 கிலோகிராம் மற்றும் கிலீன் என்ட் ஜேர்க் முறையில் 84 கிலோ கிராம் உள்ளடங்கலாக 155 கிலோகிராம் எடையைத் தூக்கினார்.

குறித்த போட்டிப் பிரிவில் தேசிய சம்பியனான ஹன்சனி கோமஸ், கடந்த வருடம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 157 கிலோகிராம் எடையைத் தூக்கிய இந்தியாவின் ஸ்னேகா ஸ்வரென் குறித்த பிரிவில் தங்கப் பதக்கத்தை வெற்றி கொள்ள, பங்களாதேஷின் சாபிரா மொல்லா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நீச்சல் போட்டிகளில் மூன்று தங்கங்களை வென்ற இலங்கை

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய….

அத்துடன், பெண்களுக்கான 59 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட நதீஷானி ராஜபக்ஷ வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளை, பளுதூக்கல் போட்டியின் இரண்டாவது நாளான நாளைய தினம் இலங்கையின் அனுபவமிக்க வீரர்களான இந்திக திஸாநாயக்க, சின்தன கீதால் விதானகே மற்றும் சதுரங்க லக்மால் ஆகியோர் களமிறங்கவுள்ளதுடன், பெண்கள் பிரிவில் வடக்கின நட்சத்திர வீராங்கனையான ஆஷிக்கா விஜயபாஸ்கர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக செய்திகளைப் படிக்க<<