3 வருடங்களுக்குப் பிறகு தர்ஜினி சிவலிங்கத்துக்கு தேசிய அணியில் வாய்ப்பு

1314

வலைப்பந்தாட்ட உலகில் அதி சிறந்த சூட்டர் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரும் ஆசியாவிலேயே அதி உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம், சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு தேசிய வலைப்பந்தாட்ட குழாமில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 9ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் ஆரம்ப கட்ட குழாமுக்கான தெரிவுப் போட்டிகள் கடந்த வாரம் பண்டாரகம உள்ளக அரங்கில் இடம்பெற்றது. அதில் 30 வீராங்கனைகள் தேசிய வலைப்பந்து குழாமுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கான தேர்வு இந்த வாரம்

எனினும், குறித்த தெரிவுப் போட்டிகளுக்கு முன்னர் வீராங்களைகள் தம்மைப் பதிவு செய்து, மருத்துவ தேர்வில் சித்தி பெறவும் வேண்டும் என இலங்கை வலைப்பந்து சம்மேளனம் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்தே தேர்வுகள் இடம்பெற்றன.

2009ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை  பெற்றுக்கொடுக்க பெரும் தூணாக இருந்த 6 அடி 10 அங்குலம் உயரத்தைக் கொண்ட தர்ஜினி, 2009 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஆசியாவின் சிறந்த கோல்போடும் வீராங்கனையாகவும் (சூட்டர்) தெரிவானார். அதனைத் தொடர்ந்து தேசிய வலைப்பந்து அணியின் இணை தலைவியாக செயற்பட்ட தர்ஜினி, முன்னதாக 4 தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இறுதியாக 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் அபாரமாக விளையாடி இலங்கை அணியை இறுதிப் போட்டி  வரை அழைத்துச் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த தர்ஜினி, வலைப்பந்து நிர்வாகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் மற்றும் முரண்பாடுகள் காரணமாக கடந்த 2 வருடங்களாக எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடவில்லை.

எனினும், தேசிய வலைப்பந்தாட்ட அரங்கில் சுமார் 10 வருடங்களாக இலங்கை அணிக்காக ஆசிய மற்றும் உலக அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த தர்ஜினி சிவலிங்கம், முதற்தடவையாக அவுஸ்திரேலியாவின் வெஸ்ட் பெல்கன்ஸ் மற்றும் மெல்பேர்ன் சென்ட். எல்பன்ஸ் அணிகளுக்காக கடந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தர்ஜினியின் உதவியால் இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள புனித அல்பான்ஸ்

இதன்படி, வெளிநாடொன்றில் தொழில்சார் வலைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடுவதற்கு இலங்கையிலிருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட முதலாவது வீராங்கனை என்ற பெருமையையும் தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டார்.

தர்ஜினிக்கு கிடைத்த இந்த வாய்ப்பு இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனையும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளருமான திலகா ஜினதாஸ மற்றும் தர்ஜினியின் முகாமையாளர் எஸ். கோபினாத்தின் முயற்சியினால் கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, கடந்த வருடம் இரு கட்டங்களாக நடைபெற்ற லீக் போட்டிகளில் பலம்மிக்க 20இற்கும் அதிகமான அணிகளுடன் தர்ஜினி சிவலிங்கம் விளையாடியிருந்தார். இதில் விக்டோரியா வலைப்பந்தாட்ட லீக் போட்டிகளில் வெஸ்ட் பெல்கன்ஸ் அணிக்கு தலைமை வகித்திருந்த தர்ஜினி, 20 போட்டிகளில் 823 புள்ளிகளை பெற்றிருந்தார். அத்துடன், அவ்வணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்தி ஆண்டின் சிறந்த கோல்போடும் மற்றும் நேர்மையான வீராங்கனைக்கான விருதுகளையும் பெற்றுக்கொண்டார்.

எனவே, அண்மைக்காலமாக சர்வதேச அரங்கில் தொடர் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்ற இலங்கையின் வலைப்பந்தாட்டத்துக்கு தர்ஜினி சிவலிங்கத்தின் மீள்வருகையானது மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதேநேரம், தேசிய வலைப்பந்து அணியின் முன்னாள் தலைவிகளான மரீஷா பெர்னாந்து, கயனி திசாநாயக்க மற்றும் உப தலைவியான திசாலா அல்கம, துலங்கா தனஞ்சி, தர்ஷிகா அபேவிக்ரம, திலினி வத்தேகெதர, சுரேகா குமாரி கமகே, திவங்கா பெரேரா, ருவினி யடிகம்மன ஆகிய அனுபவமிக்க வீராங்கனைகளையும் தேசிய குழாமில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 13

எனினும், பண்டாரகமவில் நடைபெற்ற தெரிவுப் போட்டிகளில் கலந்துகொள்ளாத வீராங்கனைகளுக்கு மீண்டும் உடற்தகுதி பரிசோதனையில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேசிய குழாமில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய வலைப்பந்தாட்ட குழாமிற்கான 2ஆவது கட்ட தெரிவுப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம், 25ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. அதனையடுத்து 15 பேர் கொண்ட இறுதி குழாமை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் எதிர்வரும் ஜுலை மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட குழாம்

லக்மாலி பண்டார, துலங்கா தனஞ்சி, துலாங்கி வன்னிதிலக, ஒமேதா தில்ருக்ஷி, சேனானி பாலிகா, அகிலா சன்ஞி, ஷாமலி ரத்னாயக்க, ஹசிதா மெண்டிஸ், கயான்ஞலி அமரவங்ச, சச்சினி ரொட்ரிகோ, மதுமாலி சிங்ஹபாஹு, ஹேமமாலி தமயன்தி, எச். தேஷானி, தர்ஜினி சிவலிங்கம், தர்ஷிகா அபேவிக்ரம, திலினி வத்தேகெதர, சுரேகா குமாரி கமகே, கயான்தி கௌஷல்யா, சதுரங்கி ஜயசூரிய, ரெசுரி விஜேசுந்தர, எஸ்.பி.எல் சந்திரசிறி, துஷானி பண்டார, திவங்கா பெரேரா, கயனி திஸாநாயக்க, ருக்ஷலா ஹப்புஆரச்சி, ருவினி யடிகம்மன, என்.லக்மாலி, நௌசாலி ராஜபக்ஷ, விதானி மதுஷனா, டி.எம் சுதுசிங்ஹ