தேசிய நகர் வல ஓட்டம் : சம்பியனை வீழ்த்திய இளம் வீரர் வக்ஷான்

155

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறைத் திணைக்களம் இவ்வருடம் ஏற்பாடு செய்துள்ள 45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர் வல ஓட்டப் போட்டியில் தலவாக்கலையைச்சேர்ந்த விக்னராஜா வக்ஷான் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.

கடந்த வருடத்தைப் போல இம் முறையும் தேசிய நகர் வல ஓட்டப் போட்டிகள் நேற்று (03) நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது.

எனினும், கடந்த காலங்களைப் போன்று அல்லாமல் இம்முறை போட்டிகளில் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த வீரர்களும் பங்கேற்கும் வகையில் திறந்த மட்டப் போட்டிகளாக நடைபெற்றன.

10 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர் வல ஓட்டப் போட்டியில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எரந்த தென்னகோன் முதற் தடவையாக தங்கப் பதக்கம் வென்றார்.

போட்டியை நிறைவு செய்ய 33 நிமிடங்கள் 02.21 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். 36 வயதான இவர், கடந்த வருடம் நடைபெற்ற நகர் வல ஓட்டப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், மத்திய மாகாணம் தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜா வக்ஷான் போட்டியை 33 நிமிடங்கள் 21.96 செக்கன்களில் ஓடிமுடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அண்மைக் காலமாக தேசிய இளைஞர் விளையாட்டு விழாக்களில் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற விக்னராஜா வக்ஷான், கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆசிய தகுதிகாண் போட்டியில் சண்முகேஸ்வரன் மற்றும் சப்ரினுக்கு வெற்றி

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் ……..

அதன்பிறகு, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் அவர் முதல் தடவையாக களமிறங்கினார்.

குறித்த போட்டித் தொடரின் முதல் நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான  10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்ட வக்ஷான், போட்டியை 31 நிமிடங்கள் 03.78 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தையும் பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் தனது முதல் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, அதே மாகாணத்தைச் சேர்ந்தவரும், நடப்புச் சம்பியனுமான லயனல்சமரஜீவ போட்டியை 33 நிமிடங்கள் 55.38 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கலப் பதக்கத்மையும் பெற்றுக் கொண்டார்.

தேசிய நகர் வல ஓட்டப் போட்டியில் தொடர்ச்சியாக  4 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற லயனல், 5 சுற்றுக்களைக் கொண்ட இம் முறை போட்டிகளில் 4 சுற்றுக்கள் முடிவடையும்வரை முன்னிலை பெற்றிருந்தார்.

எனினும், போட்டி நிறைவடைய ஒருகி லோமீற்றர் தூரம் இருக்கும் போது அவருடைய காலில் திடீரென உபாதை ஏற்பட்டது. இதனால் பின்னடைவை சந்தித்த லயனல் சமரஜீவ மூன்றாவது இடத்துடன் ஆறுதல்அடைந்தார்.

இதேவேளை, பெண்கள் பிரிவில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நிமேஷா நந்தசேன போட்டித் தூரத்தை 41 நிமிடமும் 06 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இவர்கடந்த வருடமும்முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை மற்று மொரு சிறப்பம்சமாகும்.

தேசிய இளைஞர் மெய்வல்லுனர் இரண்டாம் நாள் முடிவுகள்

30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு …..

இதில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த அனூஷா லமாஹேவா போட்டியை 41 நிமிடமும் 18 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தையும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த லங்கா ஆரியதாச போட்டியை 41 நிமிடமும் 41 செக்கன்களில்நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இம் முறை தேசிய நகர் வல ஓட்டப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும், இரண்டாம்மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுக் கொண்ட வீரர்களுக்கு முறையே 40 ஆயிரம். 30 ஆயிரம் ரூபாவும் பணப் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, விளையாட்டுத் துறை பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

இதனிடையே, 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டிகள் இவ்வருட இறுதியில் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<