2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும், முதலாவது மகளிர் சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரை நடாத்தும் உரிமையை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>சேத்தனா, மிதாலி, சமரியின் அதிரடியில் இலங்கை மகளிருக்கு முதல் வெற்றி<<
அந்தவகையில் முதன் முறையாக இலங்கையில் ஒழுங்கு செய்யப்படவிருந்த ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் திட்டமிட்டபடி வேறொரு நாட்டில் நடாத்தப்படவுள்ளதாகவும், பெரும்பாலும் இந்தியாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் Cricinfo செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி.) நிர்வாகக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடு இந்த முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இலங்கை அரசினால், இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தினை தற்காலிகமாக முகாமை செய்ய கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு (Cricket Transformation Committee) நியமனம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக நியமிக்கப்படும் இடைக்கால நிர்வாகங்களை ஐ.சி.சி அங்கீகரிப்பதில்லை என்பதனால், இக்குழு அமைக்கப்பட்டதில் இருந்தே ஐ.சி.சி. இன் நிர்வாகக் கூட்டங்களில் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
அதேநேரம் கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை ஐ.சி.சி. இன் கிரிக்கெட் தொடர் ஒன்றை நடாத்தும் உரிமையை இழப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக இதே மாதிரியான காரணங்களுக்காக 2024ஆம் ஆண்டுக்கான ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடர் இலங்கையில் தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் மகளிர் சம்பியன்ஸ் கிண்ணம் மாற்றப்படும் முடிவானது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பெரும் பின்னடைவாக அமையக்கூடும். தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே இத்தொடரில் பங்கேற்க முடியும் என்ற நிலையில், போட்டியை நடாத்தும் நாடு என்ற சலுகையின் அடிப்படையிலேயே இலங்கை தகுதி பெற்றிருந்தது. இந்த நிலையில் இலங்கை தொடரை நடத்தும் உரிமையையும் இழந்தால் அதன் மூலம் தொடரில் பங்கெடுக்க கிடைத்த நேரடித் தகுதியினையும் இழக்கு நேரிட முடியும். அத்துடன் இதன் மூலம் மகளிர் ஒருநாள் அணிகள் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இத்தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
அதேவேளை இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பு வரைவினை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு தயாரித்துள்ளதாகவும், அது அடுத்த சில வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக சபைத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















