எதிர்வரும் 9ஆம், 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் 111ஆவது வடக்கின் பெரும் சமரில் கிண்ணத்தை தம் கல்லூரிக்கு கொண்டு செல்லும் ஒரே முனைப்பில் இருக்கின்றது யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி.

Visit the Schools Cricket Hub

சென் ஜோன்ஸ் கல்லூரி அணி, இம்முறை இடம்பெறவுள்ள மோதலுக்கு அணியில் 5 வருட காலம் விளையாடிய அனுபவம் கொண்ட வீரரான ஜெனி பிளமினின் தலைமையில் களமிறங்கவுள்ளது.

சிறந்த திட்டமிடலே கிரிக்கெட் வீரர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் : அக்சயன் ஆத்மநாதன்

பாடசாலைகளுக்கு இடையிலான பெரும் சமர் கிரிக்கெட் போட்டிகள் சூடுபிடித்துள்ள நிலையில்..

அண்மைய பதிவுகள்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத் தொடரில் பிரிவு 2இல் விளையாடி வரும் சென் ஜோன்ஸ் கல்லூரியினர், இந்த பருவகால ஆரம்பத்தில் சற்றுத் தடுமாறியிருந்தாலும், பின்னர் சிறப்பான பெறுதிகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

கல்லூரி அணியின் பதிவுகளை ஆராய்கையில், இதுவரை 18 போட்டிகளில் விளையாடியுள்ள இவ்வணி 3 போட்டிகளில் வெற்றியையும், 5 போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியையும், 8 போட்டிகளை சமநிலையிலும் நிறைவு செய்துள்ள அதேவேளை, 2 போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வியையும் பெற்றுள்ளது.

குறிப்பாக சமநிலையில் நிறைவடைந்த போட்டிகளான கொழும்பு றோயல் கல்லூரி, கல்கிசை புனித தோமியார் கல்லூரி, கண்டி திரித்துவக் கல்லூரி, அனுராதபுரம் மத்திய கல்லூரி ஆகிய பிரபல அணிகளுக்கெதிரான போட்டிகளில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய வீரர்கள்

சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக் குழாமை நோக்குகையில் மிகுந்த அனுபவம் பெற்ற அணியாகவே விளங்குகின்றது. கடந்த வருடம் வடக்கின் பெரும் சமரில் களங்கண்ட அணியிலிருந்து வெறுமனே மூன்று வீரர்கள் மாத்திரமே இவ்வருடம் வெளியேறியிருக்கின்றனர்.

இலங்கை கனிஷ்ட அணியின் முதல் 30 பேர் கொண்ட குழாமில் உள்வாங்கப்பட்டிருந்த ஜெனி பிளமின், கபில்ராஜ் ஆகிய வீரர்களும், வடக்கின் பெரும் போரில் தனது பந்து வீச்சால் சாதித்து வரும் சுழற்பந்து வீச்சாளர் யதுசனும் அணியின் முக்கிய புள்ளிகளாக உள்ளனர்.

அவர்கள் தவிர, டுபாய்க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முரளிக் கிண்ண தெரிவு அணியில் ஆடிய நிரோசன் மற்றும் மாகாண அணியில் ஆடிய தேவபிரசாந்த் ஆகியோர் அணியில் இருப்பது அனுபவ ரீதியாக பெருமளவு பலம் சேர்க்கின்றது.

துடுப்பாட்டத்தை நோக்குகையில் அணி மிக நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ளது. அதிலும், ஜனி பிளமின், யதுசன், கபில்ராஜ், துலக்சன், தேவபிரசாத் ஆகியோர் பருவகாலத்தில் சோபித்துக் கொண்டிருக்கின்ற முக்கிய வீரர்களாவர்.

பந்து வீச்சு வரிசையில் வேகப்பந்து வீச்சாளர்களான நிரோசன், கபில்ராஜ் ஆகியோருடன் இணைந்து சுழற்பந்து வீச்சாளர்களான யதுசன், கிசாந்துஜன் ஆகியோர் எதிரணிக்குச் சவாலாக அமைவார்கள் என்பதில் ஐயமில்லை.

அதிகமான வீரர்கள் துடுப்பாட்டம், பந்து வீச்சு என இரண்டிலும் சாதிக்கக்கூடிய சகலதுறை வீரர்களாக இருப்பது சென் ஜோன்ஸ் அணியின் நம்பிக்கையை மேலும் வலுவடையச் செய்கின்றது.

அணியின் பயிற்றுவிப்பாளர்

கடந்த பல வருடங்களான கல்லூரியின் கனிஷ்ட அணிகளுக்கு பயிற்சி அளித்து வந்த டேனியல் சுரேந்திரன் இம்முறை பிரதான அணியை தயார் செய்கின்றார். நீண்ட காலம் கனிஷ்ட அணியுடன் இருந்த இவர், கல்லூரி அணியின் வீரர்கள் குறித்த சாதக பாதகங்களை நன்கு அறிந்தவராக உள்ளார்.

இவரிடம் உள்ள வீரர்கள் குறித்த அனுபவம் மற்றும் பாடசாலை அணியின் பெரும் சமர் குறித்த நீண்ட கால நோக்குதல் என்பன அணியை எதிர்வரும் போட்டிக்கு சிறந்த முறையில் தயார் படுத்த மிகப் பெரிய ஆயுதமாய் இருக்கும்.

இறுதியாக

அனுபவம் வாய்ந்த அதிகளவாக சிரேஷ்ட வீரர்களைக் கொண்டு 111ஆவது வடக்கின் பெரும் சமரில் களங்காணவிருக்கும் சென் ஜோன்ஸ் கால்லூரி, ஏற்கனவே 35 முறை வெற்றியை சுவைத்துள்ள நிலையில், இவ்வருட போட்டியிலும் வெற்றி பெற்று கிண்ணத்தை வெல்லும் 36 ஆவது தடவை என்ற பெருமையை பதிவு செய்யவே உள்ளது.   

இந்தப் போட்டியை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணைய தளமான ThePapare.com ஊடாக நேரடியாகப் பார்வையிடலாம் என்பதையும் நினைவு படுத்துகின்றோம்.