இலங்கை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (14) ஆரம்பமாகியது.
இந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக குறித்த டெஸ்ட் தொடருக்கான செய்திகளை சேகரிப்பதற்கு இலங்கையில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல, குறித்த டெஸ்ட் தொடரை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
முதல்நாளில் பலம் பெற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
இதன்படி, ஊடகவியலாளர் சந்திப்புக்களை Zoom வாயிலாக நடத்தவும் டெஸ்ட் தொடரின் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்டவைகளை மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கவும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடகப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் சிரேஷ்ட விளையாட்டு ஊடகவியலாளரும், தி ஐலேண்ட் பத்திரிகையின் கிரிக்கெட் எழுத்தாளருமான ரெக்ஸ் கிளெமெண்டைன், நேற்று (14) ஆரம்பமாகிய இலங்கை மற்றும் இங்கிலாந்த அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாளை காலி கோட்டைக்கு மேல் இருந்து பார்வையிட்டுள்ளதுடன், அங்கிருந்தே தனது செய்தி சேகரிப்பினை முன்னெடுத்துள்ளார்.
ஒரு புறத்தில் கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊடகவியலாளர்ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், குறித்த ஊடகவியலாளர் தனது பணியை மேற்கொள்வதற்கான இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தனியாளாக காலி கோட்டைக்கு மேல் ஏறி போராடியதை இங்கு காணமுடிந்தது.
கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கெட் செய்தியாளராக வலம்வந்து கொண்டிருக்கின்ற ரெக்ஸ், 2000ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் போட்டியையும் தவறவிடவில்லை.
Video – “இங்கிலாந்து அணியை வீழ்த்துவதற்கான சாதகத்தன்மை அதிகம்” – டிக்வெல்ல
ஆனாலும், தனது 20 வருடகால செய்தி சேகரிப்பினை கைவிடுவதை விரும்பாத அவர், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை மைதானத்தின் அருகிலுள்ள காலி கோட்டை மேல் ஏறி பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த வருடம் இலங்கை அணியின் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது தனக்கு கிடைத்த தொப்பி தொடர்பில் ரெக்ஸ் கிளெமெண்டைன் டுவீட் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
Last year in Canberra, @CricketAus gave us this. Never used it, but today it became very handy. pic.twitter.com/LTMii7DIYa
— Rex Clementine (@RexClementine) January 14, 2021
”கடந்த வருடம் கென்பெர்ராவில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந்த தொப்பியை எங்களுக்கு வழங்கியது. நான் இதை ஒருபோதும் பயன்படுத்தவில்லை, ஆனால் இன்று அது எனக்கு பயனளித்தது” என்று அவர் ஒரு புகைப்படத்துடன் டுவீட் செய்துள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணி பங்கேற்று விளையாடுகின்ற பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இணைந்து கொள்கின்ற ரெக்ஸ் கிளெமெண்டைன், கொவிட் – 19 வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தையும் தவறவிட்டார்.
இதில் சிறப்பம்சம் என்னவெனில், 2003 இற்குப் பிறகு முதல்தடவையாக அவர் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை தவறவிட்டுள்ளார்.
இந்த நிலையில், ரெக்ஸ் கிளெமெண்டைன் AFP இற்கு வழங்கி செவ்வியில், ”ஊடகவியலாளர்களுக்கு மைதானத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும், ஒரு கிரிக்கெட் ஊடகவியலாளராக மைதானத்துக்கு வெளியே இருந்து எனது கடமையை முன்னெடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.
Video – சிரேஷ்ட வீரர்கள் இல்லாமல் சாதிக்குமா இலங்கை அணி? |Sports RoundUp – Epi 144
ஒரு புறத்தில் ரெக்ஸ் கிளெமெண்டைன் ஒரு கிரிக்கெட் ஊடகவியலாளராக தனது சாதனைப் பயணத்தை தக்கவைத்துக் கொள்ள காலி கோட்டைக்கு மேல் ஏறி போராடினாலும், இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக 135 ஓட்டங்களை எடுத்து காலி மைதானத்தில் மிகவும் குறைவான முதல் இன்னிங்ஸ் ஓட்டத்தைப் பதிவுசெய்து மோசமான சாதனையொன்றை பதிவுசெய்தது.
இதேவேளை, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியை காலி கோட்டையில் இருந்து கண்டுகளித்த ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அதேபோல, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை பார்வையிடுவதற்காக கடந்த 10 மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்த இங்கிலாந்து நாட்டவரான ரொப் லூவிஸ் என்பவரையும் காலி கோட்டையிலிருந்து வெளியேற்றுவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<