இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றி

521

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியடைந்தது.

ஐ.சி.சி மகளிர் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை அணி எதிர்கொண்டிருந்த இரண்டு தொடர்களிலும் தோல்வியடைந்திருந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 0-3 என இழந்திருந்ததுடன், பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான தொடரையும் 0-3 என இழந்திருந்தது. இதன்படி மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் எவ்வித புள்ளிகளும் இன்றி எட்டாவது இடத்தை பிடித்திருந்தது.

இந்த நிலையில் சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்கின்ற இலங்கை அணி, முதலாவது வெற்றியை நோக்கி களமிறங்கினாலும், இந்திய மகளிர் அணியின் பலமான பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம்  இலங்கை அணிக்கு மீண்டும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பெண்கள் அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம்

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அட்டபத்து, சிரிபாலி வீரகொடி மற்றும் டிலானி மனோதரா ஆகியோர் மாத்திரம் இரட்டை இலக்க ஓட்டங்களை பெற, ஏனைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினர்.

இதன் காரணமாக 35.1 ஓவர்களுக்கு மாத்திரம் முகங்கொடுத்த இலங்கை மகளிர் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக சமரி அட்டபத்து 33 ஓட்டங்களையும், சிரிபாலி வீரகொடி  26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மன்சி ஜோசி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜுலான் கோஸ்வாமி மற்றும் பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பின்னர், இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி, ஸ்ம்ரிட் மந்தனாவின் அதிரடி அரைச்சதத்தின் உதவியுடன் 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி சார்பில் ஸ்ம்ரிட் மந்தனா 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, பூனம் ரவூட் 24 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணியின் இனோகா ரணவீர 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்றைய முதல் போட்டியின் வெற்றியுடன் இந்திய மகளிர் அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளதுடன், ஐ.சி.சி சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை அணி இந்த பட்டியலில் எந்த ஒரு புள்ளியும் இன்றி எட்டாவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க