இலங்கை டி-20 மகளிர் அணியில் இரு புதுமுக வீராங்கனைகள்

113

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடன் நாளை (24) கொழும்பில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான 15 பேர் அடங்கிய இலங்கை மகளிர் குழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள இலங்கை மகளிர் அணியின் தலைவியாக ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான சமரி அட்டபத்து பெயரிடப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த இலங்கை மகளிர் அணி

இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் விளையாட்டு மைதானத்தில் இன்று (21) நடைபெற்ற மூன்றாவது

இதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த உதேஷிகா ப்ரபோதினி மற்றும் பிராசாதினி வீரக்கொடி ஆகியோர் நீக்கப்பட்டு உமேஷா திமாஷினி மற்றும் மதுஷிகா மெத்தானந்த ஆகிய இரண்டு புதுமுக வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்க இலங்கை மகளிர் தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இங்கிலாந்து மகளிர் அணியுடன் அம்பாந்தோட்டையில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பிராசாதினி வீரக்கொடி விளையாடியிருந்ததுடன், அம்பாந்தோட்டையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் மாத்திரம் உதேஷிகா பிரபோதினி விளையாடியிருந்தார். இவ்விரண்டு வீராங்கனைகளும் தலா 53 ஒருநாள் போட்டிகளிலும், முறையே 27 மற்றும் 66 டி-20 போட்டிகளிலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் அணியின் அனுபவமிக்க வீராங்கனைகளாக குறித்த இரண்டு பேரும் கருதப்பட்டாலும், முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற காரணத்தால் இங்கிலாந்து மகளிர் அணியுடனான டி-20 தொடரிலிருந்து நீக்குவதற்கு தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேநேரம், இலங்கை டி-20 அணிக்காக முதல் தடவையாக பெயரிடப்பட்டுள்ள 17 வயதான உமேஷா திமாஷினி, வலதுகை சுழல் பந்துவீச்சாளராகவும், துடுப்பாட்ட வீராங்கனையாகவும் திறமையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் கொண்டவராவார். இதனிடையே, 24 வயதான மதுஷிகா மெத்தானந்த, வலதுகை மித வேகப்பந்து வீச்சாளராவார். அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் ஆயத்தமாக சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த வீராங்கனைகளுக்கு இலங்கை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிருக்கான உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு இங்கிலாந்து மகளிர் அணியுடன் கடந்த வாரம் நடைபெற்ற 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை மகளிர் அணி 3-0 என படுதோல்வியை சந்தித்தது. எனினும், குறித்த போட்டித் தொடரில் இலங்கை அணிக்காக மத்திய வரிசையில் களமிறங்கிய ஹன்சிமா கருணாரத்ன மற்றும் ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகிய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடியிருந்ததுடன், இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களையும் குவித்தனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி நாளை (24) காலை 10.00 மணிக்கு கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்தில் விளையாடும் நோக்கில் ஐ.பி.எல் போட்டிகளை தவிர்க்கும் மாலிங்க

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில்

இலங்கை மகளிர் டி-20 குழாம் – சமரி அட்டபத்து (அணித்தலைவி), உமேஷா திமாஷினி, ஹன்சிமா கருணாரத்ன, ஹசினி பெரேரா, சுகன்திகா குமாரி, ஹர்ஷிதா சமரவிக்ரம, சசிகலா சிறிவர்தன, நிலக்‌ஷி டி சில்வா, இனோஷி பெர்னாண்டோ, இமல்கா மெண்டிஸ், அச்சினி குலசூரிய, மதுஷிகா மெத்தானந்த, இனோகா ரனவீர, ஓஷதி ரணசிங்க

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க