சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ட்ரினாடின் போர்ட் ஒப் ஸ்பெயின் மைதானத்தில் நேற்று (06) ஆரம்பமாகியிருந்தது.
சுமார் 10 வருடங்களின் பின்னர் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் மண்ணில் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார்.
பத்து வருடங்களின் பின்னர் மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை
பத்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் நாள் தோறும்..
இதுவரை மேற்கிந்திய தீவுகள் மண்ணில் எந்தவொரு டெஸ்ட் தொடர் வெற்றியையும் பதிவு செய்யாத நிலையில் இலங்கை அணி, இந்த தொடரில் புதிய வரலாற்றை பதிவு செய்ய எதிர்பார்த்து ஆறு துடுப்பாட்ட வீரர்கள், ஐந்து பந்துவீச்சாளர்கள் கொண்ட அணியினை முதல் டெஸ்ட் போட்டிக்காக களமிறக்கியிருந்தது.
இதன்படி துடுப்பாட்ட வீரர்களான குசல் பெரேரா, அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார ஆகியோர் இலங்கையின் டெஸ்ட் அணிக்குத் திரும்பியிருந்ததுடன், தனஞ்சய டி சில்வாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
மறுமுனையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பதிவுகளை காட்டியமைக்காக மூன்று வருடங்களின் பின்னர் இடதுகை துடுப்பாட்ட வீரரான டெவோன் ஸ்மித்திற்கு மேற்கிந்திய தீவுகள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது துடுப்பாட்டத்தினை கிரைக் ப்ராத்வைட் மற்றும் டெவோன் ஸ்மித் ஆகியோருடன் ஆரம்பித்திருந்தது.
போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் விக்கெட்டினை மூன்றாவது ஓவரினை வீசிய சுரங்க லக்மால் கைப்பற்ற இலங்கை அணிக்கு சிறந்ததொரு ஆரம்பம் கிடைத்திருந்தது. மேற்கிந்திய தீவுகளின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடந்த அனுபவமிக்க துடுப்பாட்ட வீரரான ப்ராத்வைட் வெறும் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.
இதன் பின்னர், நிரோஷன் திக்வெல்ல மற்றும் லஹிரு குமார ஆகியோரின் இணைந்த செயற்பாட்டினால் மேற்கொள்ளப்பட்ட ரன் அவுட் மூலம் ஏனைய ஆரம்ப வீரரான டெவோன் ஸ்மித்தும் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.
பின்னர், முதல் நாள் ஆட்டத்தின் மதிய போசனத்திற்கு சற்று முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது மூன்றாவது விக்கெட்டினையும் லஹிரு குமாரவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறிகொடுத்தது. போல்ட் செய்யப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் மூன்றாவது விக்கெட்டான கெய்ரன் போவெல் பெறுமதி தரும் 38 ஓட்டங்களினை அவரது அணித்தரப்பிற்காக பெற்றுத்தந்தமை குறிப்பிடத்தக்கது.
மதிய போசனத்திற்கு பின்னர், ரோஸ்டன் சேஸ் மற்றும் சாய் ஹோப் ஆகிய இரண்டு வீரர்களும் இணைந்து நான்காம் விக்கெட்டுக்காக நல்லதொரு இணைப்பாட்டத்தினை (54) பகிர்ந்தனர். எனினும், இந்த இருவரின் விக்கெட்டும் தேநீர் இடைவேளைக்கு முன்னர் துரித கதியில் லஹிரு குமார, ரங்கன ஹேரத் ஆகியோரின் சிறந்த பந்துவீச்சினால் கைப்பற்றப்பட்டிருந்தது. இதில் சாய் ஹோப் 44 ஓட்டங்களினையும் ரோஸ்டன் சேஸ் 38 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர்.
இந்த இருவரினதும் விக்கெட்டுக்கள் பறிபோயிருந்த காரணத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணியானது ஒரு கட்டத்தில் 147 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து சரிவு நிலையில் காணப்பட்டது. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் சேன் டொவ்ரிச் ஆகியோர் புதிய துடுப்பாட்ட வீரர்களாக களத்திற்கு வந்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பேச ஐ.சி.சிக்குச் சென்ற இலங்கை அதிகாரிகள்
ஐ.சி.சியின் அவைத் தலைவர் ஷஷhங் மனோகரை சந்தித்த..
தேநீர் இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்த முதலாம் நாளுக்கான போட்டியின் இறுதி இடைவெளிக்கான (Third Session) ஆட்டத்தில் ஜேசன் ஹோல்டர், சேன் டோவ்ரிச் ஆகியோர் மிகவும் நிதானமான முறையில் செயற்பட்டு இணைப்பாட்டம் ஒன்றினை மேற்கிந்திய தீவுகளுக்காக கட்டியெழுப்பியிருந்தனர்.
இவர்களின் விக்கெட்டுக்களை கைப்பற்ற தில்ருவான் பெரேரா, லஹிரு குமார போன்ற வீரர்களின் ஓவர்களில் இலங்கை அணிக்கு பிடியெடுப்பு வாய்ப்புக்கள் உருவாகியிருந்த போதிலும் அவை தவறவிடப்பட்டிருந்தன. இதனால், இரண்டு வீரர்களாலும் ஆறாவது விக்கெட்டுக்காக 90 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டிருந்தது. இந்த இணைப்பாட்டத்தின் உதவியினால் மேற்கிந்திய தீவுகளும் நல்ல நிலையொன்றுக்கு சென்றது.
பின்னர், முதல் நாள் ஆட்டத்தின் மூன்றாம் இடைவெளியில் இலங்கை அணிக்கு மிகவும் தேவையாக இருந்த விக்கெட்டினை லஹிரு குமார கைப்பற்றினார். மேற்கிந்திய தீவுகளின் ஆறாம் விக்கெட்டாக அவ்வணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் 40 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.
எனினும், இவர்களின் இணைப்பாட்டம் மேற்கிந்திய தீவுகளுக்கு கைகொடுக்க அவ்வணி முதல் நாள் நிறைவில், 86 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. களத்தில் ஜேசன் ஹோல்டருக்கு ஜோடியாக செயற்பட்ட சேன் டோவ்ரிச் 46 ஓட்டங்களுடனும், புதிய துடுப்பாட்ட வீரரான தேவேந்திர பிஸூ ஓட்டம் ஏதுமின்றியும் காணப்படுகின்றனர்.
இப்போட்டியின் முதல் நாளுக்கான இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
முதல் நாள் ஸ்கோர் சுருக்கம்






















