கேசவ் மஹராஜின் சுழலில் சிக்கிய இலங்கை

1176

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் நிறைவின் போது இலங்கை கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸ்க்காக 86 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்திருக்கின்றது.

இன்றைய நாளுக்கான இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, திமுத் கருணாரத்ன ஆகியோர் அரைச்சதம் விளாசியிருந்ததோடு தனஞ்சய டி சில்வாவும் பெறுமதியான ஆட்டத்தை வெளிக்காட்டி வந்திருந்தார். இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரரான கேசவ் மஹராஜ் அதிசிறப்பான முறையில் செயற்பட்டிருந்தார்.

காலி கிரிக்கெட் மைதானத்தின் எதிர்காலம் கேள்விக்குறி

முன்னதாக இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மால் காலி டெஸ்ட் போட்டியைப் போன்று இந்த டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணிக்காக மைதான நிலைமைகளை கருத்திற் கொண்டு முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.  

இப்போட்டியினை நடாத்தும் SSC சர்வதேச மைதானத்திற்கு இது 42ஆவது டெஸ்ட் போட்டி என்பதால், ஆசிய நாடுகளில் அதிக டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்ற கிரிக்கெட் மைதானமாக இந்த டெஸ்ட் போட்டி மூலம் SSC சர்வதேச மைதானம் மாறியிருந்தது.

காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியிடம் 278 ஓட்டங்களால் படுதோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி இந்தப் போட்டியில், வெற்றி பெற்றால் மாத்திரமே தொடரை சமநிலைப்படுத்த முடியும் என்ற காரணத்தினால் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இலங்கை வீரர்களை எதிர்கொண்டிருந்தது.

அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப்பந்து சகலதுறை வீரர் வெர்னோன் பிலாண்டர் மற்றும் சைனமன் சுழல் வீரர் தப்ரைஸ்  ஷம்சி ஆகியோருக்குப் பதிலாக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான தியோனிஸ் டி ப்ரெய்ன், வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ன்கிடி ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தென்னாபிரிக்கா  

டீன் எல்கார், அய்டன் மார்க்ரம், ஹஷிம் அம்லா, டெம்பா பவுமா, பாப் டு ப்ளேசிஸ் (அணித் தலைவர்), தியோனிஸ் டி ப்ரெய்ன், குயின்டன் டி கொக், லுங்கி ன்கிடி, கேசவ் மஹராஜ், ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன்

மறுமுனையில் அசத்தலான வெற்றியொன்றுடன்,தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணி சைனமன் சுழல் வீரரான லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அகில தனஞ்சயவுக்கு வாய்ப்பு தந்திருந்தது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க, தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால் (அணித்தலைவர்), அகில தனஞ்சய

திசர பெரேராவின் அதிரடி சதத்தால் இலங்கை A அணிக்கு வெற்றி

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.  

மிகவும் சிறந்த முறையில் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை முகம் கொடுத்த இரண்டு வீரர்களும் அரைச்சதங்களை விளாசி மிகவும் உறுதியான ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் ஒன்றினை தமது தரப்புக்கு வழங்கினர். அந்தவகையில்  இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 116 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட நிலையில் முதல் நாளின் மதிய போசண இடைவேளைக்கு பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக கேசவ் மஹராஜின் சுழலில் வீழ்ந்த திமுத் கருணாரத்ன தனது 16 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்த நிலையில்  53 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

கருணாரத்னவை அடுத்து, தனது கன்னி டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்த தனுஷ்க குணத்திலக்கவின் விக்கெட்டும் மீண்டும் சுழலில் அசத்திய கேசவ் மஹராஜினால் வீழ்ந்தது. ககிஸோ றபாடாவிடம் பிடியெடுப்பை வழங்கிய குணத்திலக்க 6 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 57 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன் பின்னர் கேசவ் மஹராஜ் தனது விக்கெட் வேட்டையை மீண்டும் தொடர்ந்தார். இம்முறை குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் மஹராஜின் இலக்குகளாக மாறியிருந்தனர். குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களுடனும், மெதிவ்ஸ் 10 ஓட்டங்களுடனும் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

எனினும், மெதிவ்ஸ் இப்போட்டியில் பெற்றுக் கொண்ட 10 ஓட்டங்கள் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடந்த ஒன்பதாவது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற மைல்கல்லை அடைய போதுமாக இருந்தது.

தொடர்ந்து, முதல் நாள் தேநீர் இடைவேளையை அடுத்து தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா ஜோடி பொறுமையான முறையில் துடுப்பாட ஐந்தாம் விக்கெட்டுக்காக அவர்களினால் அரைச்சத இணைப்பாட்டம் (54) ஒன்று பகிரப்பட்டிருந்தது.

பின்னர், இந்த இணைப்பாட்டத்தை ககிஸோ றபாடா தனது வேகத்தின் மூலம் தகர்த்தார்.  இதனால் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமத்தை காட்டி வரும் ரொஷேன் சில்வா 22 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு நடந்தார். இப்போட்டியோடு சேர்த்து தனது இறுதி ஒன்பது டெஸ்ட் இன்னிங்சுகளிலும் ஏழு தடவைகள் ரொஷேன் சில்வா வேகப்பந்து வீச்சாளர்களினாலேயே ஆட்டமிழக்க செய்யப்பட்டிருக்கின்றார்.

இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியாக அமைந்த கேசவ் மஹராஜ், தனது சுழலின் முழுப்பலத்தையும் வெளிப்படுத்தி இலங்கை அணியின் பின்வரிசை விக்கெட்டுக்களில் நான்கை மேலதிகமாக சரித்தார். இதில், அரைச்சதம் ஒன்றுடன் நம்பிக்கை  தரும் வீரராக செயற்பட்ட தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டும் அடங்கும். 109 பந்துகளை எதிர்கொண்டிருந்த தனஞ்சய டி சில்வா 8 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம், எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல வெறும் 5 ஓட்டங்களுடன் சோபிக்கத் தவறியிருந்தார்.

இதன்படி முதல் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி 86 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சிற்காக குவித்திருந்தது.

இன்னும் ஒரு விக்கெட் மீதமிருக்க இரண்டாம் நாளில் துடுப்பாட எதிர்பார்க்கும் இலங்கை அணிக்கு களத்தில் நிற்கும் அகில தனஞ்சய (16*) மற்றும் ரங்கன ஹேரத் (5*) ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.

இன்றைய நாளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அரைச்சதங்களோடு ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் காணப்பட்டிருந்த இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கேசவ் மஹராஜ் 116 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார். இதேநேரம், கேசவ் மஹராஜின் இந்த பந்துவீச்சு வெளிநாட்டு சுழல் வீரர் ஒருவரினால் இலங்கை அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வைத்து இன்னிங்ஸ் ஒன்றில் வெளிக்காட்டப்பட்ட சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது.

ஸ்கோர் விபரம் 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க