சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய (14) இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் தென்னாபிரிக்க அணி தமது வேகப்பந்து வீச்சாளர்களின் அபாரத்தோடு முன்னிலை பெற்றிருக்கின்றது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, தென்னாபிரிக்க வீரர்களுடன் தமது சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அந்தவகையில், இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று (13) டர்பன் நகரில் தொடங்கியது.
வேகப்பந்து வீச்சாளர்களால் முதல் நாளில் வலுப்பெற்றுள்ள இலங்கை அணி
நேற்று போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவினால் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த தென்னாபிரிக்க அணி, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களினால் முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்திருந்தது.
இதன் பின்னர், பதிலுக்கு தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய இலங்கை வீரர்கள் 16 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்த போது நேற்றைய போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருந்தது.
Photos: Sri Lanka tour of South Africa 2019 | 1st Test – Day 2
இலங்கை அணிக்காக திமுத் கருணாரத்ன 28 ஓட்டங்களுடனும், அறிமுக வீரர் ஓஷத பெர்னாந்து 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று நம்பிக்கை தந்திருந்தனர்.
இன்று (14) போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்காவை விட 186 ஓட்டங்களால் பின்தங்கியவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி நல்ல முன்னிலை ஒன்றினை எதிரணி வீரர்களுக்கு வழங்கும் எதிர்பார்ப்புடன் காணப்பட்டது.
எனினும், இரண்டாம் நாளுக்கான போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் LBW முறையில் அறிமுக துடுப்பாட்ட வீரர் ஓஷத பெர்னாந்துவின் விக்கெட்டினை கைப்பற்றினார். ஓஷத பெர்னாந்து இந்த ஆட்டமிழப்புக்கு மேன்முறையீடு செய்யாத நிலையில் தனது கன்னி டெஸ்ட் போட்டியின் துடுப்பாட்ட இன்னிங்ஸை 19 ஓட்டங்களுடன் நிறைவு செய்திருந்தார். எனினும், பெர்னாந்து மைதானத்தினை விட்டு வெளியேறிய பின்னர் தொழில்நுட்ப உதவிகளின் மூலம் அவர் ஆட்டமிழக்கவில்லை என்பது உறுதியாகியிருந்தது.
எனினும், ஓஷத பெர்னாந்துவின் விக்கெட்டினை அடுத்து இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவராக தென்னாபிரிக்க வீரர்களின் வேகத்திற்கு இடம் கொடுக்க முடியாமல் மைதானத்தினை விட்டு ஆட்டமிழந்து வெளியேறினர். இதில் முதலாவதாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன LBW விக்கெட்டாக வெர்னன் பிலாந்தரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 30 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
விஷ்வ, ராஜிதவின் பந்து வீச்சை புகழ்ந்த குயிண்டன் டி கொக்
திமுத் கருணாரத்னவை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரர்களாக வந்த குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரும் ஏமாற்றம் தந்தனர். இதில் குசல் மெண்டிஸ் திமுத் கருணாரத்னவின் விக்கெட்டினை கைப்பற்றிய அதே வெர்னன் பிலாந்தரின் பந்துவீச்சில் ஸ்லிப் களத்தடுப்பாளரான பாப் டூ பிளேசிஸிடம் பிடிகொடுத்து 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, நிரோஷன் திக்வெல்ல வெறும் 8 ஓட்டங்களுடன் ஏமாற்றம் தந்திருந்தார்.
இவர்களை அடுத்து தனன்ஞய டி சில்வா மற்றும் குசல் பெரேரா ஜோடி இலங்கையின் ஆறாம் விக்கெட்டுக்காக இணைப்பாட்டம் (43) ஒன்றை உருவாக்க முனைந்த போதிலும், போட்டியின் இரண்டாம் நாள் மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் அந்த இணைப்பாட்டம் தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டோடு தகர்க்கப்பட்டது. தனன்ஞய டி சில்வா 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
தனன்ஞய டி சில்வாவினை அடுத்து ஒரு கட்டத்தில் 133 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய இலங்கை அணி இன்னுமொரு விக்கெட்டினையும் பறிகொடுத்த நிலையில், குசல் பெரேரா தனது நான்காவது டெஸ்ட் அரைச்சதத்துடன் சிறிது ஆறுதல் தந்திருந்தார். எனினும், குசல் பெரேராவின் விக்கெட்டும் டேல் ஸ்டெயின் பந்துவீச்சினால் பறிபோனது. தென்னாபிரிக்க பதில் வீரர் சுபைய்ர் ஹம்சாவிடம் பிடிகொடுத்திருந்த குசல் பெரேரா 63 பந்துகளில் 7 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் கசுன் ராஜித – அறிமுக வீரர் லசித் எம்புல்தெனிய ஆகிய இருவரும் சேர்ந்து இலங்கை அணிக்கு பின்வரிசையில் சிறிய இணைப்பாட்டம் ஒன்றுடன் (32) ஓட்டங்கள் சேர்த்து உதவினர்.
இவர்களினது சிறிய துடுப்பாட்ட உதவியுடன் இலங்கை அணி 59.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தமது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் பின்வரிசையில் துடுப்பாடியிருந்த லசித் எம்புல்தெனிய 24 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், டேல் ஸ்டெய்ன் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் ககிஸோ றபாடா மற்றும் வெர்னன் பிலாந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இலங்கை அணியின் முதல் இன்னிங்சை அடுத்து போட்டியின் இரண்டாம் நாளுக்கான தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டிருந்தது. தேநீர் இடைவேளையின் பின்னர் 44 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 126 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவோடு இலங்கை அணியினை விட 170 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் தென்னாபிரிக்க அணிக்கு களத்தில் அதன் தலைவர் பாப் டு ப்ளெசிஸ் 25 ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றும் நம்பிக்கை தருகின்றனர்.
இதேநேரம் தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் விக்கெட்டுக்களாக பறிபோயிருந்த வீரர்களில் டீன் எல்கார் 35 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, எய்டன் மார்க்ரம் 28 ஓட்டங்களை பெற்றிருந்தார். எனினும், ஹஷிம் அம்லா மற்றும் டெம்பா பெவுமா ஆகிய இரண்டு வீரர்களும் இருபது ஓட்டங்களையேனும் கடந்திருக்கவில்லை.
ஜோ ரூட்டிடம் மன்னிப்பு கோரிய ஷெனோன் கேப்ரியல்
மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரரான லசித் எம்புல்தெனிய 2 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
ஸ்கோர் விபரம்
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<






















