போராட்டத்திற்கு மத்தியில் இந்தியாவுடனான டெஸ்டை சமப்படுத்திய இலங்கை

424
Sri Lanka v India

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (20) முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி  வெற்றி, தோல்வியின்றி சமநிலையில் முடிந்திருக்கின்றது.

போட்டியின் நான்காவது நாள் நிறைவில் தமது இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடியிருந்த இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து 171 ஓட்டங்களினைப் பெற்று காணப்பட்டிருந்தது. லோக்கேஷ் ராகுல் 73 ஓட்டங்களுடனும், செட்டெஸ்வர் புஜாரா 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.  

துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஹேரத்; நேர்த்தியான ஆரம்பத்துடன் இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில்..

தமது இரண்டாம் இன்னிங்சில் இலங்கையை விட 49 ஓட்டங்களால் முன்னிலை வகித்த இந்திய அணி போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றினை நிர்ணயிக்கும் நோக்கில் தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.  

இந்திய அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு இறுதி நாளின் ஆரம்பத்திலேயே சுரங்க லக்மால் மூன்று விக்கெட்டுக்களை விரைவாக கைப்பற்றி அதிர்ச்சியளித்தார். லக்மாலின் முதல் விக்கெட்டாக பறிபோன லோக்கேஷ் ராகுல் 5 ஓட்டங்களினை மாத்திரம் இன்றைய நாளில் பெற்று 125 பந்துகளில் 8 பெளண்டரிகளுடன் 79 ஓட்டங்களை சேர்த்திருந்தார். அதேபோன்று லக்மாலின் ஏனைய இரண்டு விக்கெட்டுக்களுமாக செட்டெஸ்வர் புஜாரா (22), அஜிங்கியா ரஹானே (0) ஆகியோர் மோசமான ஆட்டத்துடன் வெளியேறியிருந்தனர்.

எனினும் களத்தில் நின்ற விராத் கோலி இந்திய அணிக்காக சதூர்யமான முறையில் ஓட்டங்களை பெறத் தொடங்கினார். இந்திய அணித்தலைவரின் சிறந்த ஆட்டத்தினால் விக்கெட்டுக்களை ஒரு முனையில் பறிகொடுத்தாலும் போட்டியின் மதிய போசன இடைவேளையைத் தாண்டியும் இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் தொடர்ந்தது.

தொடர்ந்து கோலி சதம் கடக்க இந்திய அணி 88.4 ஓவர்களில் 352 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தனது 18ஆவது டெஸ்ட் சதத்தினை கடந்த விராத் கோலி 119 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 102 ஓட்டங்களினைப் பெற்று ஆட்டமிழக்காது நின்றிருந்தார். அதோடு கோலியின் இந்த 102 ஓட்டங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் பெற்ற 50 ஆவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் தசுன் சானக்க மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர். இந்திய அணியில் மேலதிகமாக பறிபோன இரண்டு விக்கெட்டுக்களையும் ஆளுக்கு ஒவ்வொன்றாக லஹிரு கமகே மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் பங்கிட்டிருந்தனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்கவுள்ள உசைன் போல்ட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன்..

இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்சினை அடுத்து போட்டியில் வெற்றி பெற இலங்கை அணிக்கு 231 ஓட்டங்கள் தேவைப்பட்டிருந்தது.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த இலங்கை அணியினர் முதல் ஓவரிலேயே ஆரம்ப வீரர்களில் ஒருவரான சதீர சமரவிக்ரமவை ஓட்டமேதுமின்றி புவ்னேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் பறிகொடுத்தனர்.

அடுத்து திமுத் கருணாரத்னவும் ஒரு ஓட்டத்தினைப் பெற்றிருந்த போது மொஹமட் சமியினால் போல்ட் செய்யப்பட்டிருந்தார். இதனால் இலங்கை அணி தேநீர் இடைவேளையின் போது 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியிருந்தது.

தேநீர் இடைவேளையினை அடுத்து தொடர்ந்த போட்டியின் இறுதி இடைவெளியில் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகிய துடுப்பாட்ட வீரர்களை இழந்தது. இரண்டு வீரர்களும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி மைதானத்தினை விட்டு வெளியேறிய நிலையில் இலங்கை 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலைக்கு உள்ளானது.

எனினும் ஜோடி சேர்ந்த இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் ஐந்தாம் விக்கெட்டுக்காக சிறிது போராட்டத்தினை வெளிப்படுத்தி போட்டியினை சமநிலைப்படுத்த முனைந்திருந்தனர். 47 ஓட்டங்களை இருவரும் இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த போது தினேஷ் சந்திமால் 20 ஓட்டங்களுடன் மொஹமட் சமியினால் போல்ட் செய்யப்பட போட்டியின் சாதகம் இந்திய அணியின் பக்கம் திரும்பியிருந்தது.

தொடர்ந்து நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா ஆகிய துடுப்பாட்ட வீரர்களும் இந்திய அணியினால் வீழ்த்தப்பட ஒரு கட்டத்தில் இலங்கை 7 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் நெருக்கடியான நிலையினை எதிர் கொண்டது. இந்நிலையில் போட்டிக்கான போதிய வெளிச்சம் இல்லை என நடுவர்கள் அறிவிக்க இந்திய அணிக்கு சாதகமான போட்டி சமநிலை அடைந்தது. போட்டி சமநிலை அடையும் போது இலங்கை தமது இரண்டாம் இன்னிங்சில் 26.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 75 ஓட்டங்களினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DRS சர்ச்சையை தில்ருவான் பெரேராவுக்காக தெளிவுபடுத்த விரும்பும் ஹேரத்

இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரரான ரங்கன ஹேரத்…

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நிரோஷன் திக்வெல்ல 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

அதேபோன்று இந்திய அணியின் பந்துவீச்சில் புவ்னேஸ்வர் குமார் வெறும் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் சமி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இப்போட்டியில் மொத்தமாக 8 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இந்தியாவின் புவ்னேஸ்வர் குமாருக்கு வழங்கப்பட்டது.

முதற்போட்டி சமநிலை அடைந்திருக்கும் இந்த தருணத்தில் இரண்டு அணிகளுக்குமான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாக்பூர் நகரில் ஆரம்பமாகவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 172 (59.3) செட்டெஸ்வர் புஜாரா 52(117), ரித்திமன் சஹா 29(83), சுரங்க லக்மால் 26/4(19), தில்ருவான் பெரேரா 19/2(7), தசுன் சானக்க 36/2 (12), லஹிரு கமகே 59/2 (17.3)

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 294 (83.4) ரங்கன ஹேரத் 67(105), அஞ்செலோ மெதிவ்ஸ்  52(94), லஹிரு திரிமான்ன 51(94), நிரோஷன் திக்வெல்ல 35(38), புவ்னேஸ்வர் குமார் 88/4(27), மொஹமட் சமி 100/4(26.3), உமேஷ் யாதவ் 79/2(20)

இந்தியா (இரண்டாம் இன்னிங்ஸ்) – 352/8d (88.4) விராத் கோலி 102(116)*, சிக்கர் தவான் 94(116), லோக்கேஷ் ராகுல் 79(125), தசுன் சானக்க 76/3 (22), சுரங்க லக்மால் 93/3(24.4)

இலங்கை (இரண்டாம் இன்னிங்ஸ்) – 75/7 (26.3) நிரோஷன் திக்வெல்ல 27(36), புவ்னேஸ்வர் குமார் 8/4(11), மொஹமட் சமி 34/2(9.3)

முடிவுபோட்டி சமநிலை அடைந்தது.