வெற்றியை நோக்கி முன்னேறுகின்றது இலங்கை அணி

1475

சுழல் வீரர்களின் சாகசம் மற்றும் திமுத் கருணாரத்னவின் சிறப்பாட்டம் என்பவற்றுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடும் இலங்கை அணியினர் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், தென்னாபிரிக்க அணியைவிட 272 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

இரண்டாம் இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடிய திமுத் கருணாரத்ன அரைச் சதம் கடக்க, இலங்கை வீரர்கள் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 111 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்க அணியினர் இலங்கையுடன் 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T-20 என்பவற்றில் விளையாட இலங்கை வந்துள்ளனர். தொடரின் ஆரம்ப மோதலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (12) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இதன் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணியினர் திமுத் கருணாரத்னவின் பெறுமதி மிக்க சதத்துடன் (158) தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றனர்.

சதமொன்றுடன் இலங்கை அணிக்காக தனித்து போராடிய கருணாரத்ன

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆடிய விருந்தினரான தென்னாபிரிக்க அணியினர் நேற்றைய நாள் ஆட்ட நிறைவின்போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

களத்தில் இருந்த டீன் எல்கார் 4 ஓட்டங்களுடனும், நைட் வொஷ்மனாக வந்த கேசவ் மகராஜ் ஓட்டமேதுமின்றியும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இலங்கை அணி நேற்றைய நாளைப் போன்றே இன்றும் சுழற்பந்து வீச்சாளர்களுடன் தமது பந்து வீச்சைத் தொடர்ந்தது.

அதற்குப் பலனாக இன்று வீசப்பட்ட மூன்றாவது ஓவரிலேயே ரங்கன ஹேரத் LBW முறையில் கேசவ் மகராஜை ஆட்டமிழக்கச் செய்தார். ஒன்பது ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தமது இரண்டாவது விக்கெட்டை இழந்த தென்னாபிரிக்க அணியினர், மேலும் 4 ஓட்டங்களைப் பெற்ற வேளை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டீன் எல்கரையும் டில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் இழந்தது. 8 ஓட்டங்களைப் பெற்றிருந்த எல்கரின் பிடியெடுப்பை ஸ்லிப் திசையில் இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் பெற்றார்.

முதல் 3 விக்கெட்டுக்களையும் மிக வேகமாக இழந்த தென்னாபிரிக்க அணிக்கு அனுபவ வீரர்களான ஹசிம் அம்லா மற்றும் தெம்பா பவுமா ஆகியோர் நம்பிக்கை தரும் வகையில் தமது நிதான ஆட்டத்தை தொடர்ந்தனர். எனினும் 27 ஓட்ட இணைப்பாட்டத்துடன் இவர்களது பங்களிப்பும் நிறைவுக்கு வந்தது.

டில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் அம்லாவின் பிடியெடுப்பை குசல் மெண்டிஸ் பெற்ற போதும் நடுவர் அதனை ஆட்டமிழப்பாக அறிவிக்கவில்லை. எனவே, மூன்றாவது நடுவரின் உதவியை நாடிய இலங்கை அணிக்கு அது சாதகமான முடிவைப் பெற்றுத்தந்தது. இதனால், இலங்கை எதிர்பார்த்திருந்த அம்லா 15 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

தொடர்ந்து, இலங்கை அணியின் சைனமன் சுழல் வீரர் லக்ஷான் சந்தகன் இந்தப் போட்டியில் வீசிய இரண்டாவது பந்தில் பவுமாவை போல்ட் (இன் சைட் எஜ்) முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

பவுமா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, தென்னாபிரிக்க அணி மேலும் 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த வேளை, புதிதாக ஆடுகளம் நுழைந்திருந்த விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் குயிண்டன் டி கொக் டில்ருவன் பெரேராவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து 3 ஓட்டங்களுடன் அரங்கிற்கு நடந்தார்.

தென்னாபிரிக்க அணி வெறும் 51 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த வேளை தமது 6 விக்கெட்டுக்களை இழந்திருந்த நிலையில், பந்து வீச்சாளர் வெர்ணன் பிலன்டருடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் டு ப்ளெசிஸ் மிகவும் நிதானமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினார்.

மறுமுனையில் அணித் தலைவர் சுரங்க லக்மால் இன்றைய மதிய போசண இடைவேளைக்கு முன்னைய ஓவரை தனது முதல் ஓவராக வீசினார். அதுவரை இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.   

இதன்படி, இரண்டாம் நாள் போட்டி மதிய போசண இடைவேளைக்காக நிறுத்தப்படும் பொழுது தென்னாபிரிக்க அணியினர் 37 ஓவர்களில் தமது 6 விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். களத்தில் டு ப்ளெசிஸ் 22 ஓட்டங்களுடனும், பிலெண்டர் 16 ஓட்டங்களுடனும் இருந்தனர்.

மதிய போசணத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆட்டத்தின்போது தென்னாபிரிக்க அணி 115 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை தில்ருவன் பெரேராவின் பந்தில் பிலெண்டர் LBW முறையில் ஆட்டமிழக்க, அதே ஓட்ட எண்ணிக்கையில் சுரங்க லக்மால் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டு ப்ளெசிஸை போல்ட் செய்தார்.

தென்னாபிரிக்க அணியின் சிறந்த இணைப்பாக 64 ஓட்டங்களை பகிர்ந்த இந்த ஜோடியில் டு ப்ளெசிஸ் ஒரு ஓட்டத்தினால் அரைத் சதத்தை தவறவிட, பிலெண்டர் 86 பந்துகளை எதிர்கொண்டு 18 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து வந்த பந்து வீச்சாளர்களும் வேகமாக ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 54.3 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், லக்மால் 21 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற, ஹேரத் 2 விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டார்.

Photos: Sri Lanka vs South Africa – 1st Test | Day 2

ThePapare.com | Viraj Kothalawala | 13/07/2018 | Editing and re-using images without permission of ThePapare.com will be considered an intended copyright infringement.

இதன்படி, இலங்கை வீரர்கள் 161 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்தனர். ஆரம்ப வீரர்களான தனுஷ்க குனத்திலக்க மற்றும் திமுத் தருணாரத்ன ஆகியோர் 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த வேளை, முதல் விக்கெட்டாக குனத்திலக்க ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த தனன்ஜய டி சில்வா, முதல் இன்னிங்ஸைப் போன்றே இந்த இன்னிங்ஸிலும் 9 ஓட்டங்களுடன் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்து வந்த குசல் மெண்டிசும் தான் சந்தித்த மூன்றாவது பந்தில் LBW முறையில் (ஓட்டமேதுமின்றி) ஆட்டமிழக்க, இலங்கை அணி 13 ஓட்ட இடைவெளியில் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

ஏற்கனவே குனத்திலக்கவின் விக்கெட்டை கைப்பற்றியிருந்த மஹராஜ் இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

எனினும் முதல் இன்னிங்சில் 157 ஓட்டங்களைப் பெற்ற திமுத் இந்த இன்னிங்ஸிலும் சற்று வேகமாக ஆடி, 67 பந்துகளில் தனது 16ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். எனினும், 60 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை திமுத் றபாடாவின் பந்துக்கு அம்லாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.   

இந்நிலையில், இன்றை நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் பொழுது இலங்கை அணி 37 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் அஞ்செலோ மெதிவ்ஸ் 14 ஓட்டங்களுடனும், முதல் இன்னிங்ஸில் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்த ரொஷேன் சில்வா 10 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

பந்து வீச்சில் மஹராஜ் 3 விக்கெட்டுக்களையும் றபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை அணியினர் மேலும் 6 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் தற்பொழுது 272 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க