இன்னிங்ஸ் தோல்வியுடன் டெஸ்ட் தொடரையும் இழந்த இலங்கை இளையோர் அணி

741

இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டாவதும் கடைசியுமான இளையோர் டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இரு அணிகளுக்கும் இடையிலான தொடரை 2-0 என இழந்துள்ளது.

இதன் மூலம் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இளையோர் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்ததோடு இளையோர் டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த அணிகள் வரிசையில் இலங்கை இளையோர் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி மோசமான சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் இலங்கை இளையோர் அணி

அம்பாந்தோட்டை, மஹிந்த ரஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளான இன்று (27) இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்க்கும் நெருக்கடியுடன்  இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தபோதும் பகல் போசண இடைவேளைக்கு பின்னர் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி இலங்கை பந்துவீச்சாளர்களை முழுமையாக துவம்சம் செய்து 613 ஓட்டங்களை பெற்றது. இதன்போது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களாக பவன் ஷாஹ் 282 ஓட்டங்களை பெற்றதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அதர்வா டயிட் 177 ஓட்டங்களை குவித்தார்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு பசிந்து சூரியமண்டார (115) சதம் ஒன்றை பெற்றபோதும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காத நிலையில் 316 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ-ஓன் (Follow-on) செய்ய வேண்டி ஏற்பட்டது.

இந்நிலையில் 47 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே இலங்கை இளையோர் அணி இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது.

எனினும் இரண்டாவது நாள் ஆட்டம் ஆரம்பித்து 6ஆவது ஓவரிலேயே இலங்கை அணி தனது நான்காவது விக்கெட்டையும் பறிகொடுத்தது. கல்ஹார சேனாரத்ன 3 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் பெற்ற சூரியபண்டார அடுத்து களமிறங்கியபோதும் அவரால் இந்த இன்னிங்ஸில் சோபிக்க முடியவில்லை. இடதுகை சுழல் வீரர் சித்தார்த் தெசாய்யின் பந்துக்கு 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் 2 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தை ஆரம்பித்த மொரட்டுவை, புனித செபஸ்டியன் கல்லூரியின் வலதுகை துடுப்பாட்ட வீரர் நுவனிது பெர்னாண்டோ தொடர்ந்து நிலைக்கவில்லை. தெசாய்யின் பந்துக்கு ஆட்டமிழக்க இலங்கை இளையோர் அணி 100 ஓட்டங்களை பெறுவதற்குள்ளேயே 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

தொடர்ந்து வந்த பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் நின்றுபிடிக்கவில்லை. இலங்கை தேசிய அணி ஒன்றுக்காக 36 ஆண்டுகளில் வட மாகாணத்தில் இருந்து தேர்வான யாழ் மத்திய கல்லூரி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் 32 பந்துகளுக்கு முகம்கொடுத்து 3 பௌண்டரிகளுடன் 16 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இலங்கை இளையோர் அணிக்கு சிறப்பு சுழல் வீரராக அவர் இணைக்கப்பட்டபோதும் துடுப்பாட்டத்திலும் திறமை வெளிக்காட்டக்கூடியவராவார்.

தனுஷ்க குணதிலக்கவிற்கு ஆறு போட்டிகளில் விளையாடத் தடை

இதன்படி இலங்கை இளையோர் அணி 62.2 ஓவர்களில் 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது இந்திய அணிக்காக தெசாய் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்த போட்டியில் இலங்கை இளையோர் அணி இன்னிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற தோல்வியானது அந்த அணி 26 ஆண்டுகளில் தனது மோசமான சாதனை ஒன்றை முறியடித்துள்ளது.

1992 ஆம் ஆண்டு வொர்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இளையோர் டெஸ்ட் போட்டியில் இலங்கை இளையோர் அணி இன்னிங்ஸ் மற்றும் 101 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்ததே இலங்கையின் மோசமான தோல்வியாக இருந்து வந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.   

அதேபோன்று இளையோர் டெஸ்ட் போட்டியில் அதிக தோல்விகளை சந்தித்த அணிகள் வரிசையில் இலங்கை இளையோர் அணி அவுஸ்திரேலிய 19 வயதுக்கு உட்பட்ட அணியை (15) பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இளையோர் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை இதுவரை 16 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 42 போட்டிகளில் தோற்று முதலிடத்தில் உள்ளது.

அடுத்து, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடன் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் சர்வதேச தொடரில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி கொழும்பு, பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  

ஸ்கோர் விபரம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<