இலங்கை பயிற்றுவிப்பு குழுவில் மேலுமொரு கொவிட் தொற்றாளர்

291

இலங்கை கிரிக்கெட் அணியின் தரவு ஆய்வாளர் (Data Analyst) ஷிரன்த நிரோஷனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் பிறகு நாடு திரும்பிய இலங்கை அணியில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது கொரோனா தொற்றாளர் இவராவார். 

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

முன்னதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதாக நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இருவரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுஇவ்வாறிருக்க, இங்கிலாந்து தொடரில் இடம்பெற்ற இலங்கை அணியின் 21 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தற்போது கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சமிந்த வாஸ், களத்தடுப்பு பயிற்சியாளர் மனோஜ் அபேவிக்ரம மற்றும் முகாமையாளர் மனுஜ காரியப்பெரும ஆகியோரும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனினும், இலங்கை அணியுடன் இங்கிலாந்து சென்ற இலங்கை கிரிக்கெட்டின் இயக்குனர் டொம் மூடி இன்னும் நாடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, வைத்திய ஆலோசனை கிடைக்கும் வரை அனைத்து வீரர்களையும் தத்தமது அறைகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து சென்ற எந்தவொரு இலங்கை வீரருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அனைத்தும் வீரர்களும் 12ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்டுப்படுத்தப்படுவார்கள் எனவும், அதற்குமுன் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படுகின்ற PCR பரிசோதனை முடிவுளுக்கு அமைய 13ஆம் திதி நடைபெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…