முத்தரப்பு தொடருக்காக இந்தியா செல்லும் இலங்கை கற்புலனற்றோர் கிரிக்கெட் அணி

119

இலங்கை, இந்தியா மற்றும் இங்கிலாந்து கற்புலனற்றோர் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கற்புலனற்றோர் கிரிக்கெட் குழாம் நாளை (04)இந்தியா நோக்கி புறப்படவுள்ளது.

உலக சாதனையுடன் தொடரை வென்ற இலங்கை

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிரான …

இதன்படி, நாளை புறப்படவுள்ள இலங்கை கற்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் ஊடக சந்திப்பு முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் சபையில், விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. இதுவரை காலமும் கற்புலனற்றோர் கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் சபையிலிருந்து தனித்து செயற்பட்டுவந்த நிலையில், அதனை இலங்கை கிரிக்கெட் சபைக்குள் உள்வாங்கும் முதற்கட்ட முயற்சியாக இந்த ஊடக சந்திப்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தியா செல்லவுள்ள இலங்கை கற்புலனற்றோர் கிரிக்கெட் அணி, நாளை மறுதினம் (05) ஆரம்பிக்கவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடரில் பங்கேற்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய கற்புலனற்றோர் அணிக்கு எதிரான 5 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி (40 ஓவர்கள்) விளையாடவுள்ளது.

இலங்கை கற்புலனற்றோர் அணியில், 2020 உலகக் கிண்ணத்தை இலக்காக வைத்து புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அணியின் புதிய தலைவராக பிரியந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கற்புலனற்றோர் அணி சர்வதேச தரப்படுத்தலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஹொங்கொங்கை தமது சுழல் மூலம் சிதைத்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

ஆசியக் கிரிக்கெட் பேரவை (ACC) ஆசிய நாடுகளின் 19 …

இறுதியாக இந்திய கற்புலனற்றோர் அணிக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என வெற்றிக்கொண்டிருந்ததுடன், T20 தொடரில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்தது. சர்வதேச தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் தோல்வியடையச் செய்து, இலங்கை அணி குறித்த ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை கற்புலனற்றோர் அணி தொடர்பில் அணி முகாமையாளர் சமிந்த புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில்,

வரலாற்றில் முதற்தடவையாக விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து ஊடக சந்திப்பொன்றில் நாம் பங்குகொள்கிறோம். மகிழ்ச்சியாக உள்ளது. இம்முறை கிரிக்கெட் சபையால் எமக்கு மைதானம், பயிற்சிக்கு தேவையான அனைத்து விடயங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

அத்துடன் எமக்கு தேவையான உதவிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் முன்வந்துள்ளனர். நாம் சர்வதேச தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளோம். இலங்கையில் வைத்து இந்திய அணிக்கு எதிராக 20 வருடங்களுக்கு பிறகு தொடரொன்றை கைப்பற்றினோம். 1998ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை நாம் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றிருந்தோம். ஆனால், 2012ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த ஆறு வருடங்களாக எமது வளர்ச்சி மிகப்பெரிது என்றார்.

சகல துறைகளிலும் சோபித்த இந்தியாவுக்கு தொடர் வெற்றி

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிராக நேற்று (24)…

தொடர்ந்து முத்தரப்பு தொடர் மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து இலங்கை அணியின் புதிய தலைவர் பிரியந்த குமார குறிப்பிடுகையில்,

அணியின் தெரிவுக்குழு மற்றும் முகாமைத்துவம் என்னை தலைவராக நியமித்தமை மகிழ்ச்சியளிக்கிறது. நாம் இவ்வருடம் பலம் வாய்ந்த இந்திய அணியை வீழ்த்தியுள்ளோம். இதனால் எமது நம்பிக்கை மட்டம் அதிகரித்துள்ளது. அத்துடன் கடந்த முறை இந்திய அணியுடன் மோதும் போது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் விளையாடினோம். இம்முறை வேகப்பந்து வீச்சாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் எமது குழாத்தில் முன்னைய அணித் தலைவர்களும் உள்ளனர். அவர்களுடைய அனுபவத்தின் ஊடாக அணியை மேலும் பலப்படுத்த முடியும் என எண்ணுகிறேன்என குறிப்பிட்டார்.

இதேவேளை கற்புலனற்றோர் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிடுகையில்,

கற்புலனற்றோர் அணிக்கு கௌரவமளிக்கும் வகையில் நான் இங்கு வருகை தந்தேன். இந்தியா செல்வதற்கான அனுசரணையாளர்களை தேடி கற்புலனற்றோர் கிரிக்கெட் சங்கம் அங்கும் இங்கும் தடுமாறிக்கொண்டிருந்தனர். நான் கிரி்க்கெட் சபைக்கு அழைப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவுமாறு குறிப்பிட்டேன்.

கற்புலனற்றோர் மற்றும் விசேட தேவையுடைய கிரிக்கெட் அணிகள் இலங்கை கிரிக்கெட் சபையின் ஒரு பகுதிதான். அதனால் இவர்களுக்கான உதவிகளை வழங்க வேண்டியது இலங்கை கிரிக்கெட் சபையின் கடமையாகும். இதன்படி எதிர்வரும் காலங்களில் கிரிக்கெட் சபையின் ஊடாக, கற்புலனற்றோர் அணிக்கு உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். எனினும், இதுதொடர்பில் கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, கிரிக்கெட் சபையின் நியதிகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும்என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை கற்புலனற்றோர் அணிக் குழாம்

பிரியந்த குமார (தலைவர்), சமன் குமார, சஹான் குமார, டி.ரவீந்ர, கே..சில்வா, டி.சமிந்த, கோசல ஹேரத், உபுல் சஞ்சீவ, ருவான் வசந்த, சமன் துஷார, என்.மதுகம, சி.பண்டார, சுரங்க சம்பத், சந்தன தேசப்பிரிய, கே.சூரியாராச்சி, தமித் சந்தருவன், தினேஷ் மதுவந்த,

மேலதிக வீரர்கள்நுவாந்த சுதேஷ், பிரதீப் சமீர, துஷார உதயங்க

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…