இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை இன்று வியாழக்கிழமை (16) வெளியிட்டுள்ள இரண்டாவது போட்டிக்கான குழாத்தில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
>> முதல் ஒருநாள் போட்டிக்கான இலங்கை A குழாம் அறிவிப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகும் முகமாக சாமிக்க கருணாரத்ன, பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வேகப்பந்துவீச்சாளர் மிலான் ரத்நாயக்க அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேற்குறித்த மூவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவுடன், இசித விஜேசுந்தர மற்றும் அம்ஷி டி சில்வா ஆகியோர் இரண்டாவது போட்டிக்கான A குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அதேநேரம் முதல் போட்டியில் விளையாடியிருந்த அனுபவ வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், சதீர சமரவிக்ரம அணியில் தலைவராக தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.
அதுமாத்திரமின்றி தேசிய அணி வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுசான் ஆகிய வீரர்களும் இரண்டாவது போட்டிக்கான குழாத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்ததுடன், இரண்டாவது போட்டி சனிக்கிழமை (18) நடைபெறவுள்ளது.
இலங்கை A குழாம்
அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, துனித் வெல்லாலகே, இசித விஜேசுந்தர, பிரமோத் மதுசான், துஷான் ஹேமன்த, அம்ஷி டி சில்வா, கவிஷ்க அஞ்சுல, லஹிரு உதார, நிபுன் தனன்ஜய, சுமிந்த லக்ஷான்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<