தென்னாபிரிக்க அணியின் இலங்கைப் பயணம் பிற்போட வாய்ப்பு

86

ஜூன் மாத ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்படலாம் எனக் கூறப்படுகின்றது.  

டக்வெத்-லூயிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம்

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில்………………..

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களுடன் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று T20 போட்டிகளிலும் விளையாடவிருக்கின்றது. எனினும், கொரோனா வைரஸ் தற்போது உலகிற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் நிலையிலேயே, இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.   

இந்த வைரஸ் காரணமாக முன்னர், இலங்கை – இங்கிலாந்து அணிகள் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக விளையாடவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் பிற்போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா Dialy News செய்திச் சேவையிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.  

”தென்னாபிரிக்காவுக்கு போதிய அளவு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை நாம் வழங்காது விடின் அவர்கள் (இலங்கை) வருவதற்கு விரும்பமாட்டார்கள். இங்கே, தென்னாபிரிக்கா வரவேண்டும் எனில், விடயங்கள் அனைத்தும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது ஏப்ரலின் இறுதிப் பகுதிக்கு முன்னரோ சரியாக வேண்டும். அதேநேரம், அவர்களுக்கு (தென்னாபிரிக்க அணிக்கு) குறைந்தது ஒரு மாதமாவது பயிற்சிக்காக கொடுக்க வேண்டும். ஆனால், இப்போதைய நிலைமைகளைப் பார்க்கும் போது அவை நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.”    

கடைசியாக கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்த தென்னாபிரிக்க அணி, குறித்த சுற்றுப்பயணத்தினை பாதியிலேயே நிறைவு செய்ததுடன், நாடு திரும்பிய தமது வீரர்களையும் சுய தனிப்படுத்துகைக்கு உள்ளாகுமாறும் அறிவித்திருந்தது. அதோடு, ஏனைய நாடுகள் போன்று தென்னாபிரிக்காவும் தற்போது 21 நாட்களுக்கு பூரணமாக முடங்கியிருப்பது (Lockdown) குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தற்காலிக இயக்குனராக செயற்பட்டுவருகின்ற கிரேம் ஸ்மித் பிரச்சினைகள் சீரானதன் பின்னர் தமது வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்காக தயாராக குறைந்தது ஆறு வாரங்களேனும் தேவைப்படும் எனக் குறிப்பிட்டு, சில தீர்மானங்களை எடுக்க இன்னும் கால அவகாசம் தேவையாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.  

கொரோனா வைரஸினால் இலங்கை-தென்னாபிரிக்க அணிகள் இடையிலான தொடர்கள் மட்டுமில்லாது இலங்கை இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் பங்கெடுக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளும் பிற்போடப்பட வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.  

கொரோனாவுக்காக மொட்டை அடித்த டேவிட் வோர்னர்

கொரோனா வைரஸுக்காக தங்களை…………….

எனினும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தொடர், அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத் தொடர் ஆகியவற்றை ஒத்திவைப்பது தொடர்பில் இன்னும் முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இலங்கை அணி பங்குபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாவிடின் இலங்கை கிரிக்கெட் சபைக்கு (SLC) மிகப் பெரும் நிதி நெருக்கடி உருவாகும் என்பதோடு, இந்தியா போன்ற நாடுகளுடனான போட்டிகளை மீள ஒழுங்குபடுத்துவதிலும் பாரிய சிக்கல்கள் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<