இலங்கையின் முன்ணி கழகங்களில் ஒன்றான SSC விளையாட்டுக் கழகத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொழும்பு மலே கிரிக்கெட் கழக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக Tier ‘B’ கழகங்களுக்கிடையிலான T20 தொடரின் சம்பியனாகத் தெரிவாகியது.
கடந்த ஆண்டும் தற்போதைய தலைவர் சுதார தக்ஷிதவின் தலைமையிலான மலே கிரிக்கெட் கழகம் Tier ‘B’ கழகங்களுக்கிடையிலான T20 தொடரின் சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மலே கிரிக்கெட் கழகத்துடனான இறுதிப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவிய எஸ்எஸ்சி SSC கழகத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக ஆடி வருகின்ற சரித் அசலங்க, தசுன் ஷானக, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ உள்ளிட்ட ஏழு முன்னணி வீரர்கள் விளையாடியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் நேற்று (09) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய SSC அணி 19.4 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணிக்காக ஆடிய சமிந்து விக்ரமசிங்க (05), தசுன் ஷானக (16), தினுர கலுபஹன (19), அவிஷ்க பெர்னாண்டோ (35), சரித் அசலங்க (2), நுவனிந்து பெர்னாண்டோ (6) மற்றும் பிரமோத் மதுஷான் (0) போன்ற முன்னணி வீரர்கள் SSC அணிக்காக விளையாடிய போதிலும், அந்த அணியால் 100 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
- 2025ஆம் ஆண்டிற்கான Tier ‘B’ கழக T20 தொடர் இவ்வாரம் ஆரம்பம்
- அனைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைப்பு
- வளர்ந்து வரும் மகளிர் ஆசிய கிண்ணத் தொடர் ஒத்திவைப்பு
இந்நிலையில், 101 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலே அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. காவிந்த ஈஷ்வர 25 ஓட்டங்களையும், புத்திக ஹசரங்க ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சரித் அசலங்க, கவிந்து நதிஷான் மற்றும் தசுன் ஷானக ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதன் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையின் Tier ‘B’ கழகங்களுக்கிடையிலான T20 தொடரில் வலுவான SSC அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி மலே கிரிக்கெட் கழகம் தொடர்ச்சியாக 2ஆவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், துடுப்பாட்டத்தில் 18 பந்துகளில் 26 ஓட்டங்களையும் எடுத்த கொழும்பு மலே கழக வீரர் காவிந்த ஈஸ்வர் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டும் இவர் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேபோல, இந்தப் போட்டித் தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை கோல் கிரிக்கெட் கழகத்தின் அமித கௌசல்ய பெற்றுக்கொள்ள, தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை யுனைடெட் சதெர்ன் கிரிக்கெட் கழகத்தின் தேனுவன் ராஜகருணா பெற்றார். இது தவிர, தொடரின் சிறப்பாட்டக்காரருக்கான விருதை SSC கழகத்தின் அவிஷ்க பெர்னாண்டோ தனதாக்கிக் கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
SSC விளையாட்டுக் கழகம் – 100 (19.4) – தசுன் ஷானக 16, தினுர கலுபஹன 19, அவிஷ்க பெர்னாண்டோ 35, திமிர மல்ஷான் 21/3, காவிந்த ஈஸ்வர 21/2, சானக தேவிந்த 14/2)
மலே கிரிக்கெட் கழகம் – 101/4 (18.2) – ஹிரந்த ஜயசிங்க 19, காவிந்த ஈஸ்வர 26, புத்திக ஹசரங்க 25*, கெவின் சாமுவேல் 18
முடிவு – மலே கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<