உலகிற்கு மறைந்திருந்த சனத் மற்றும் டில்ஷான் 

97
Sanath and Dilshan
Sanath and Dilshan

பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி பின்னர் கிரிகெட் உலகின் துடுப்பாட்ட ஜாம்பவான்கள் என பெயர்பெற்ற ஒரு சில கிரிகெட் வீரர்கள் இருக்கின்றனர். கேரி சோபர்ஸ் முதல் ரவிந்திர ஜடேஜா வரை பந்துவீச்சாளராக இருந்து துடுப்பாட்ட வீரராக மாற்றம் பெற்றவர்களுள் துடுப்பாட்ட ஜாம்பவான்களானது ஒரு சிலர் மட்டுமே! இதற்கு தற்காலத்தில் இருக்கும் சிறந்த உதாரணம் ஸ்டீவ் ஸ்மித்!    

கடந்த 1996 உலக கிண்ணத்திற்கு முன்னரான காலப்பகுதியில் இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி இருக்கவில்லை. மஹாநாம மாத்திரம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து செயற்பட, மறுமுனையில் வீரர்கள் மாற்றமடைந்து கொண்டே இருந்தார்கள்.  உலகக் கிண்ணத்திற்கு முன்னர் சிறந்த ஒரு ஜோடியை உருவாக்கி விட வேண்டும் என்ற கட்டாயத்தில் இலங்கை கிரிகெட் சபை இருந்தது. பதினைந்து வருடங்களின் பின்னர் இதே போன்றதொரு நிலை மறுபடியும் ஏற்பட்டது. இம்முறை 2011 உலக கிண்ணத்திற்கு தயாராக வேண்டும்.   

அயன் மேன் திசர பெரேரா!

கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற T20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனான…

இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை அணி எடுத்துகொண்ட தீர்மானமானது அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்டிருக்கும். அவ்வாறான இரு தீர்மானங்களை மிக தைரியமாக எடுத்துகொண்டு அதில் வெற்றியும் கண்டது. 

1989 இல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிற்குள் நுழைந்து ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களில் 38 இன்னிங்ஸ்களில்  ஆடி 515 ஓட்டங்களை 13.2 எனும் சராசரியில் பெற்ற ஒரு பந்துவீச்சாளரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறக்கி ஒரு பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபட்டது இலங்கை.  

 இந்த 38 இன்னிங்ஸ்களில் அவர் இடையிடையே மூன்றாம் இடத்திலும் ஆடியது குறிப்பிடத்தக்கது. அந்த பந்துவீச்சாளர் அதன் பின்னர் செய்து காட்டியதெல்லாம் சரித்திரம்.  

Left arm Orthodox பந்துவீச்சாளராக அணியில் இணைந்த சனத் ஜெயசூரிய ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அவதாரம் எடுத்து பந்துவீச்சாளர்களை ஓட விட்டார் என்பது உலகறிந்த சாதனை சரித்திரம்.  தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆட ஆரம்பித்த முதல் 11 இன்னிங்ஸ்களில் சனத் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. எனினும் சனத் மீது கொண்ட நம்பிக்கையை அணி தலைவரும் சரி அணி நிர்வாகமும் சரி கைவிடவில்லை. ஆனால், 12 ஆவது இன்னிங்ஸில் இருந்து பல தரமான சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன. இந்த சம்பவங்களில் மிக முக்கியமான ஒன்று 1996 உலக கிண்ணத்தில் ஆடிய ஆட்டம். 

சனத் ஜெயசூரிய, தான் பெற்ற ஓட்டங்களில் 71.36 வீதமான ஓட்டங்களை இலங்கைக்கு வெளியே பெற்றார். இலங்கைக்கு வெளியே பெற்ற ஓட்டங்களை இரண்டாக பிரித்து நோக்க வேண்டும். அதாவது, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆடுவதற்கு முன் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆட ஆரம்பித்ததன் பின்.  

சனத் ஏழாம், எட்டாம் இடங்களில் ஆடும்போது 28 இன்னிங்ஸ்களில் 399 ஓட்டங்களை 14.25 எனும் சராசரியில் பெற்றார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஆட ஆரம்பித்ததன் பின் 290 இன்னிங்ஸ்களில்  9,184 ஓட்டங்களை 32.8 எனும் சராசரியில் குவித்தார். இதில் 21 சதங்களும் 42 அரை சதங்களும் அடங்கும். இந்த 9184 ஓட்டங்களுள் 35.59 வீதமான ஓட்டங்களை SENA நாடுகளில் குவித்தார் என்பது கூடுதல் தகவல்.  

சனத் சதங்கள் அல்லது அரை சதங்கள் பெற்ற 71 போட்டிகளில் 55 போட்டிகளை இலங்கை அணி வெற்றிபெற்றது. அதாவது, சனத் சதங்கள், அரை சதங்களை அடித்தாடிய போட்டிகளில் 77.46% போட்டிகளை இலங்கை அணி வெற்றிகொண்டுள்ளது. இவை அனைத்தும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இலங்கைக்கு வெளியே பெற்ற சாதனைகள். ஆனால், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பின் ஒட்டுமொத்தமாக சனத் 12,440 ஓட்டங்களை Away/Home என இரண்டிலும் பெற்றார்.  

44 இன்னிங்ஸ்களில் மத்திய வரிசை அல்லது பின் வரிசையில் ஆடிவிட்டு 390 இன்னிங்ஸ்களில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடினார். இவற்றுள் 71.46 இன்னிங்ஸ்கள் இலங்கைக்கு வெளியே ஆடப்பட்டவை.  

இதேபோன்று, ஒரு வருடம் கழித்து டெஸ்ட்டிலும் சனத் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறக்கப்பட்டார். டெஸ்ட்டிலும் அவர் தன்னை நிருபிக்க தவறவில்லை. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக 152 இன்னிங்ஸ்களில் 41.88 என்ற சராசரியில் 5,932 ஓட்டங்களை தனக்காகவும் அணிக்காகவும் குவித்தார். 

இந்த 5,932 ஓட்டங்களில் 2,355 ஓட்டங்கள் இலங்கைக்கு வெளியில் பெறப்பட்டவை. இலங்கைக்கு வெளியில் பெறப்பட்ட இவ் ஓட்டங்களுள் 43.95 வீதமான ஓட்டங்கள் (1035) SENA நாடுகளின் மைதானங்களில் பெறப்பட்டவை. ஆரம்ப துடுப்பாட்ட வீரராகும் முன் 840 ஓட்டங்களை 26 இன்னிங்ஸ்களில் அவர் பெற்றார். 

இலங்கை வீரர்களின் உடற்தகுதி பேணப்படுகிறதா?

உலகளாவிய ரீதியில் தீவிரம் காட்டிவரும் கொவிட்-19 (கொரோனா வைரஸ்) காரணமாக, விளையாட்டுத்துறை மாத்திரமின்றி உலகம்…

T20 இல் இலங்கைக்கு வெளியே 565 ஓட்டங்களை 26 இன்னிங்ஸ்களில் பெற்றார். சனத் 30க்கு அதிகமான ஓட்டங்களை பெற்றபோது இலங்கை அணி 75 வீதமான போட்டிகளில் வெற்றிபெற்றது. 

இவ்வாறு சனத் ஜயசூரிய தன்னை நம்பி இவ்வாறான ஓர் பரீட்சார்த்த முயற்சியில் இறங்கிய கிரிகெட் சபை மற்றும் அணி தலைவர் ஆகியோரை  திருப்தி படுத்தினார்.   

சனத் ஜயசூரிய ஒரு புறம் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்க இலங்கை அணி 1993 இல் எதிர்கொண்ட நிலமைக்கு மீண்டும் 15 வருடங்களின் பின்னர் தள்ளப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரை மறுபடியும் தெரிவு செய்ய வேண்டும். இரண்டு வருடங்களில் உலகக் கிண்ணம் இடம்பெறவுள்ளதால் உடனடியாக தேர்வு செய்யவேண்டி இருந்தது. அதற்குமுன் கிட்டத்தட்ட 20 போட்டிகளில் சனத்துடன் இணைந்து சங்கா போட்டியை ஆரம்பித்தார். உடனடி தேவை என்பதால் 1993 இல் செய்த அதே பரீட்சார்த்த முயற்சியை மீண்டும் செய்து பார்த்தது இலங்கை அணி. இம்முறையும் இலங்கை அணி 10 வருடம் மத்திய மற்றும் பின்வரிசையில் ஆடிய ஒரு சகலதுறை வீரர் மீது இம்முயற்சியை மேற்கொண்டது.    

1999 இல் Off spin பந்துவீச்சாளராக  அறிமுகமாகி பந்துவீச்சு, துடுப்பாட்டம் என இரண்டிலும் இலங்கை அணிக்கு கை கொடுத்த ஒரு வீரர். 2009 ஆம் ஆண்டு சனத்துடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களம் இறங்க அழைக்கப்படுகிறார். இத்தனை நாள் low order இல் ஆடிய ஒரு வீரரை இவ்வாறு புது பந்தினை எதிர்கொண்டு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறக்கும் முயற்சி  எவ்வாறான எதிர்வலைகளை உருவாக்கி இருக்கும்? விமர்சனங்களால் இலங்கை கிரிகெட் சபை சல்லடையாக்கப்பட்டிருக்கும் அல்லவா? ஆனால் அவை அனைத்திற்கும் தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடிய முதலாவது போட்டியிலேயே பதிலளித்தார் திலகரத்ன டில்ஷான்!  

ஆம் டில்ஷான் பாகிஸ்தானிற்கு எதிராக 33 பந்துகளில் 42 ஓட்டங்களை பெற்று தான் இந்த இடதிற்கு தகுதியானவன் எனும் முத்திரையை பதித்தார். அதன் பின் இரண்டாவது போட்டியில் 76, மூன்றாவது போட்டியில் 137* என தான் தேர்வு செய்யபட்டதற்கான நியாயத்தை உலகறிய செய்தார். அதன்பின் டில்ஷான் தொட்டது எல்லாம் பொன்னாக மாறியது. 

அறிமுகமாகி 10 ஆண்டுகளின் பின்னர் தான் டில்ஷான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆனார். இந்த பத்து ஆண்டுகளில் பின் வரிசை மற்றும் மத்திய வரிசையில் 127 இன்னிங்ஸ்களில் 2,923 ஓட்டங்களை குவித்தார். இவற்றுள் 2,182 ஓட்டங்கள் இலங்கைக்கு வெளியில் 29.09 எனும் சராசரியில் பெறப்பட்டவை. டெஸ்ட்டிலும் இந்த பத்து ஆண்டுகளில் 89 இன்னிங்ஸ்களில் 3,273 ஓட்டங்களை 37.02 எனும் சராசரியில் பெற்றார். 

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அறிமுகமான பின்னர் 46.04 எனும் சராசரியில் 176 இன்னிங்ஸ்களில் 7,367 ஓட்டங்கள் டில்ஷானின் பெயரின் பின்னால் எழுதப்பட்டன. இவற்றுள் 53.6 வீதமான ஓட்டங்கள் இலங்கைக்கு வெளியில் டில்ஷானினால் பெறப்பட்டவை. இலங்கைக்கு வெளியே பெறப்பட்ட ஓட்டங்களுள் 58 வீதமான ஓட்டங்கள் SENA நாடுகளில் பெறப்பட்டன. டில்ஷான் சதம் அல்லது அரை சதம் பெற்ற போட்டிகளில் 70 வீதமான போட்டிகளை இலங்கை அணி வெற்றி கொண்டது. 

ஆரம்ப துடுப்பாட வீரர் ஆனபின் இவர் டெஸ்ட் போட்டிகளில் 2170 ஓட்டங்களை குவித்தார். இவற்றுள் 73 வீதமான ஓட்டங்கள் இலங்கைக்கு வெளியே பெறப்பட்டன. இலங்கைக்கு வெளியே பெறப்பட்ட ஓட்டங்களுள் 62 வீதமானவை SENA மைதானங்களில் பெறப்பட்டவை என்பது மற்றுமொரு விஷேட அம்சமாகும். 

T20 போட்டிகளில் 1191 ஓட்டங்களை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வெளிநாடுகளில் டில்ஷான் பெற்றுகொண்டார். 30இற்கு அதிகமான ஓட்டங்களை குவித்த போட்டிகளில் 80 வீதமான போட்டிகளில் இலங்கை வெற்றியை தனதாக்கியது.  

மொத்தமாக 152 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 55 டெஸ்ட் போட்டிகளின் பின்னர் தான் டில்ஷான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரானமை குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயம். ஆனால் அவ்வாறு ஒரு அவதாரம் எடுத்த பின் டில்ஷானின் வரைபு செங்குத்தாக செல்ல ஆரம்பித்து. ஒரு புறம் சனத் மறுபுறம் டில்ஷான் என ஒரு தரமான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி இலங்கைக்கு கிடைத்து. இலங்கை அணிக்கு கிடைத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் இவர்கள் இரண்டு பேரிற்கும் முக்கியமான இடமுண்டு! 

கொரோனாவினால் தள்ளிப்போன ஆஸி. வீரர்களின் திருமணங்கள்

கொரோனா வைரஸ் கிரிக்கெட் போட்டிகளை மட்டும் ஒத்திவைக்கவில்லை. மாறாக அவுஸ்திரேலிய வீரர்கள் பெரும்பாலானோரின்…

டில்ஷான் – சனத் ஜொடி ஒன்றாக ஆடி 1,112 ஓட்டங்களை இணைப்பாட்ட ஓட்டங்களாக பெற்றுள்ளது. இவற்றுள் சதம் அல்லது அரை சதம் பெற்ற போட்டிகளில் 42 வீதமான போட்டிகளை இலங்கை அணி வெற்றிகொண்டது! 

சனத் , டில்ஷான் இரண்டு பேரும் இருவேறு காலப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரே பரீட்சார்த்த முயற்சியின் விளைவுகள். இந்த இரண்டு பேரும் பல போட்டிகளில் ஒன்றாக ஆடி இலங்கை அணிக்கு  வெற்றிகளை பெற்று தந்தவர்கள். இவர்கள் தற்போது இலங்கை ரசிகர்கள் மற்றுமன்றி கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார்கள்!  

ஒரு சிறு பரீட்சார்த்த முயற்சி இலங்கை அணிக்கு பல வெற்றிகளை பெற காரணமாக அமைந்தது. 1996 உலக கிண்ண வெற்றி, 2011 உலக கிண்ணத்தில் இறுதிப் போட்டி வரையிலான முன்னேற்றம், 2014 T20 உலக கிண்ணம் என கிரிகெட்டின் பல கௌரவங்களையும் பெற காரணமாக அமைந்தது. 

சுருக்கமாக சொல்வதென்றால்  இவர்கள் இருவரும் பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக  கிரிக்கெட் உலகில் அசத்தியவர்கள் என கூறலாம்.  

இவ்வாறான ஒரு ஒரு பரீட்சார்த்த முயற்சியை 10 வருடங்களின் பின் மீண்டும் செய்யவேண்டிய ஒரு நிலை இலங்கை அணிக்கு இப்போது உள்ளதா? உங்கள் கருத்துக்களை கீழே பதிவிடுங்கள் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<