இலங்கை சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க

World Athletics Championship 2025

2
Rumesh Tharanga

தியகம மஹிந்த ராஜபக்ஷ மெய்வல்லுநர் விளையாட்டுத் தொகுதியில் நடைபெற்ற சம்பியன்ஸ் ட்ராக் அன்ட் ஃபீல்ட்’ மெய்வல்லுநர் தொடரில், இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க புதிய தேசிய சாதனைப் படைத்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், அவர் 89.37 மீற்றர் தூரத்தை எறிந்து இப்புதிய சாதனையை நிலைநாட்டினார். உலக மெய்வல்லுநர் சம்மேளனத்தின் புள்ளி வழங்கும் முறைமையின்படி, இவரது இந்தச் சாதனைக்கு 1235 புள்ளிகள் கிடைக்கின்றன. இது இலங்கை மெய்வல்லுநர் வரலாற்றில் வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் ஈட்டிய அதிகூடிய புள்ளிகளாகக் கருதப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மெய்வல்லுநர் ‘F’ பிரிவு தொடரில், தனது இறுதி முயற்சியிலேயே ருமேஷ் இந்த அபார திறமையை வெளிப்படுத்தினார். இதன்மூலம் 2025 ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஷ்வர் நகரில் அவர் நிலைநாட்டியிருந்த 86.50 மீற்றர் தேசிய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

அதேபோல, கடந்த பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவின் ‘பேர்த் ட்ராக் கிளாசிக்’ தொடரில் அவர் எறிந்த 83.07 மீற்றர் தூரத்தையும் விஞ்சியுள்ளார்.

இதனிடையே, கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் தடவையாக ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ருமேஷ் தரங்க, 84.38 மீட்டர் எறிந்து 7 ஆவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெறும் 23 வயதேயான ருமேஷ் தரங்கவின் இந்தச் சாதனை, ஈட்டி எறிதல் வரலாற்றில் ஆசிய வீரர் ஒருவர் எட்டிய 4 ஆவது சிறந்த தூரமாகவும், உலக வரலாற்றில் 30 ஆவது சிறந்த தூரமாகவும் பதிவாகியுள்ளது. மேலும், புள்ளிவிபரங்களின்படி இவரது இந்த 89.37 மீற்றர் தூரமானது, 2000 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை நடைபெற்ற அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வெல்லக்கூடிய ஒரு பெறுமதியாகும்.

2000 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 13 உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர்களில் 12 தொடர்களில் பதக்கத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு பெறுமதியாகும்.

இதேவேளை, இந்த ஆண்டு ருமேஷ் தரங்கவிற்கு மிகவும் சவாலான மற்றும் முக்கியமான ஆண்டாக அமையவுள்ளது. இதில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா, செப்டெம்பர் 11 – 13 வரை ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் முதன்முறையாக அறிமுகமாகும் உலக மெய்வல்லுநர் அல்டிமேட் சம்பியன்ஷிப் (World Athletics Ultimate Championship) மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் அவர் பங்கேற்கவுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வெல்லக்கூடிய ஒரு தூரத்தை (89.37 மீ) தற்போது எட்டியுள்ளதன் மூலம், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இலங்கைக்கு பதக்கத்தைப் பெற்றுத்தரக்கூடிய மிகச்சிறந்த நம்பிக்கையாக ருமேஷ் தரங்க தற்சமயம் பார்க்கப்படுகிறார்.

சர்வதேச தரவரிசையில் ஆசிய அளவில் 4 ஆவது இடத்தையும், உலக வரலாற்றில் 30 ஆவது இடத்தையும் பிடித்துள்ள இவரது வளர்ச்சி, இலங்கையின் விளையாட்டுத் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, இலங்கை மெய்வல்லுநர் துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள ருமேஷ் தரங்கவின் இந்தச் சாதனை, உலக அரங்கில் இலங்கையின் பெயரை மீண்டும் ஒருமுறை ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளது.

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<