தென் கொரியாவை சமாளிக்குமா இலங்கை?  

121

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் தமது முதல் இரண்டு மோதல்களையும் கடும் போராட்டத்தின் பின்னர் தோற்ற இலங்கை கால்பந்து அணி, தமது அடுத்த மோதலில் தென் கொரியா மற்றும் லெபனான் அணிகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. 

இதில், ஆசியாவின் கால்பந்து ஜாம்பவான்களில் ஒன்றாக இருக்கின்ற தென் கொரியா அணிக்கு எதிராக, அவர்களது சொந்த மைதானத்தில் இம்மாதம் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள மோதலானது இலங்கை அணிக்கு இந்த தகுதிகாண் சுற்றில் உள்ள மிகப் பெரிய சவாலான போட்டியாகவே உள்ளது. 

இலங்கைக்கு எதிரான தென் கொரிய அணியில் சொன்

பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் AFC தகுதிகாண் போட்டிகளில்….

இந்தப் போட்டி ஹ்வாசியோங்கில் உள்ள ஹ்வாசியோங் அரங்கில் இம்மாதம் 10ஆம் திகதி (வியாழக்கிழமை) இலங்கை நேரப்படி பி.ப. 4.30 மணிக்கு ஆரம்பமாகும். 

எனினும், அதற்கு அடுத்த வாரம், அதாவது 15ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள லெபனான் அணிக்கு எதிரான போட்டியை இலங்கை அணி, முன்னர் இடம்பெற்ற போட்டிகள் போன்றே எதிர்கொள்ளும். 

இலங்கை எதிர் தென் கொரியா மோதல் 

இலங்கை மற்றும் தென் கொரிய அணிகள் இதுவரை இரண்டு முறை ஒன்றை ஒன்று மோதியுள்ளன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை வீரர்கள் தோல்வியையே சந்தித்துள்ளனர்.  

1979 – ஜனாதிபதிக் கிண்ணம் 

போட்டி முடிவு: தென் கொரியா 6 – 0 இலங்கை 

1986 – குவேடி அசாம் கிண்ணம்  

போட்டி முடிவு: தென் கொரியா 4 – 0 இலங்கை

எவ்வாறிருப்பினும், இரு அணிகளினதும் தற்போதைய நிலையைப் பார்க்கும்பொழுது தென் கொரிய மிகப் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது. பிஃபாவின் அணிகளுக்கான தரவரிசையில் தென் கொரியா அணி 37ஆவது இடத்திலும் இலங்கை அணி 202 ஆவது இடத்திலும் உள்ளன.  

அதுபோன்றே, இலங்கை அணி தமது கடந்த போட்டிகளில் மோசமான பதிவுகளைப் பெற்றிருந்தாலும், தென் கொரியா பலம் மிக்க அணிகளுடன் ஆடி, திருப்திகரமான முடிவுகளைப் பெற்றிருந்தது. இதில் குறிப்பாக, இலங்கை அணி தமது உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில் துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிராக 2-0 எனவும், வட கொரிய அணிக்கு எதிராக 1-0 எனவும், இறுதியாக மலேசிய அணிக்கு எதிரான நட்புரீதியிலான மோதலில் 6-0 எனவும் தொடர் தோல்விகளை சந்தித்திருந்தது. 

இலங்கை அணிக்கு எதிராக மலேசியா கோல் மழை

மலேசிய அணிக்கு எதிராக கோலாலம்பூர் நகரின் தேசிய….

எனினும், வட கொரிய அணி உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில் துர்க்மெனிஸ்தான் அணியை 2-0 என வீழ்த்தியிருந்தது. அதற்கு முன்னர் இடம்பெற்ற நட்பு ரீதியிலான போட்டிகளில் பலம் மிக்க அணிகளான ஜோர்ஜியாவை 2-2 எனவும், ஈரானை 1-1 எனவும் சமன் செய்திருந்ததுடன், அவுஸ்திரேலியா மற்றும் கொலம்பியா அணிகளுக்கு எதிரான மோதல்களை முறையே 1-0, 2-1 என வெற்றி கொண்டிருந்தது. 

இலங்கை அணி இறுதியாக ஆடிய போட்டி முடிவுகள்
தென் கொரிய அணி இறுதியாக ஆடிய போட்டி முடிவுகள்

இலங்கை அணி, துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தற்காப்பு ஆட்டம் ஒன்றையே மேற்கொண்டிருந்தது. எனினும், அதில் சிறந்த பலன் (2-0) கிடைக்கவில்லை. எனினும், வட கொரிய அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் கோலுக்கான முயற்சிகளையும் இலங்கை வீரர்கள் மேற்கொண்டிருந்தனர். 

இவ்வாறான ஒரு நிலையில், அடுத்து இடம்பெறவுள்ள தென் கொரிய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை வீரர்கள் கட்டாயம் ஒரு தற்காப்பு ஆட்டத்தையே விளையாட வேண்டும். 

குறிப்பாக, உலகின் முன்னணி கழக மட்ட தொடர்களில் ஆடும் வீரர்களைக் கொண்ட தென் கொரிய அணியினர், உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் மாத்திரம் ஆடும் வீரர்களைக் கொண்ட (சுஜான் பெரேரா தவிர்ந்த) இலங்கை அணிக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான கோல்களைப் பெறுவதையே குறிக்கோலாகக் கொண்டிருக்கும். 

ஹெங் மின் சொன்

இதற்கு மேலதிகமாக, தென் கொரிய குழாத்தில், அவ்வணியின் தலைவரும் இங்கிலாந்தின் டொட்டன்ஹம் ஹொட்ஸ்பர் அணிக்காக ஆடும் முன்னணி வீரருமான சொன் ஹுயிங் மின் உள்வாங்கப்பட்டுள்ளமை இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். 

Photos : Sri Lanka v North Korea | 2022 FIFA World Cup Qualifiers

ThePapare.com | Viraj Kothalawala | 10/09/2019 | Editing….

அதேபோன்று, அவ்வணியின் மற்றொரு முன்னணி வீரரான அவுஸ்திரியாவின் ரெட் புல் செல்ஸ்பேர்க் அணியின் ஹ்வாங் ஹுசானும் இந்த அணியில் இடம்பிடித்திருக்கின்றார். ஹ்வாங் ஹுசான், அண்மையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரின் லிவர்பூல் அணிக்கு எதிரான மோதலில் ரெட் புல் அணிக்காக கோல் அடித்த வீரராவார். 

ஹ்வாங் ஹுசான்

மறு முனையில் இலங்கை அணிக்கு எப்பொழுதும்போல மிகப் பெரிய துணையாகவும் தூணாகவும் இருக்கக் கூடிய வீரர் அணியின் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா. வட கொரிய அணிக்கு எதிரான போட்டியில் மொத்தமாக 6 கோல்களை சிறந்த முறையில் தடுத்த இவரது பெறுமதி, மலேசிய அணிக்கு எதிரான போட்டியில் தெளிவாக தென்பட்டது. 

தனது விசா பிரச்சினை காரணமாக மலேசியாவுக்கு செல்லாத சுஜான் தற்பொழுது தென் கொரியாவில் இலங்கை அணியுடன் இணைந்துள்ளார். அணியின் பின்களத்தை பலப்படுத்தி, எதிரணியின் அதிக எண்ணிக்கையிலான கோல்களை கட்டுப்படுத்தும் பணி அவரிடம் உள்ளது. 

சுஜான் பெரேரா

இலங்கை அணிக்கு இந்தப் போட்டியில் கோல்களைப் பெறுவது என்பது எதிர்பார்ப்பு குறைந்த ஒரு விடயமாக இருந்தாலும், முன்கள வீரர் திலிப் பீரிஸ் மூலம் ஏதோ ஒரு வகையிலான பங்களிப்பை எதிர்பார்க்கலாம். மத்திய களத்தில் அனுபவ வீரர் பசால், கவிந்து போன்றவர்கள் மூலம் சிறந்த வாய்ப்புகள் உறுவாக்கப்படும் பட்சத்தில் திலிப் அணிக்கு ஆறுதல் தரக்கூடும்.  

பசால் முன்னைய போட்டிகளிலும் சிறந்த பந்துப் பரிமாற்றங்களை முன்கள வீரர்களுக்கு வழங்கிய ஒரு வீரர். 

திலிப் பீரிஸ்

எவ்வாறு இருப்பினும், கடந்த அனைத்து போட்டிகளிலும் 5 பின்கள வீரர்களுடன் ஆடிய இலங்கை அணி, இந்தப் போட்டியில் அதனைவிட அதிகமாக தமது பாதியைப் பாதுகாக்க திட்டமிட வேண்டும். 

2020 SAFF சம்பியன்ஷிப் பங்களாதேஷில்: தொடர்ந்து புறக்கணிக்கும் இலங்கை

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய….

இறுதியாக

இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை அணி ஒரு கத்துக்குட்டி அணியாகவே களம் கண்டுள்ளது. எனினும், கடந்த 2 ஆட்டங்களிலும் சற்று திருப்தியடையக்கூடிய முடிவுகளைப் பெற்றிருந்தாலும் இந்தப் போட்டி, தொடரில் இலங்கை அணிக்கு உள்ள அபாயகரமான மோதலாகும். 

தென் கொரியா பலமான அணியாக இருக்கும் அதேவேளை, போட்டி இடம்பெறும் ஹ்வாசியோங்கில் உள்ள குளிர் காலநிலை இலங்கைக்கு மேலும் நெருக்கடியாக அமையும்.  

இந்தப் போட்டியின் முடிவு எவ்வாறு அமைந்தாலும் இலங்கை வீரர்களுக்கு இந்த வருடத்தில் கிடைக்கும் மிகப் பெரிய அனுபவமாக இந்த மோதல் மாற இருக்கின்றது. உலகின் முன்னணி வீரர்கள் ஆடும் போட்டிகளையே கண்டு வந்த இலங்கை வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இலங்கை – தென் கொரிய அணிகளுக்கு இடையிலான போட்டியானது வரலாற்றில் மறக்கப்படாத ஒரு ஆட்டமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.