குதிரை பாய மறுத்ததால் மெடில்டா கார்ல்சனுக்கு ஒலிம்பிக்கில் ஏமாற்றம்

Tokyo Olympics - 2020

956

டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பாக அமைந்த மெடில்டா கார்ல்சன், இன்று மாலை நடைபெற்ற குதிரைச் சவாரி தகுதிச்சுற்றுடன் வெளியேறினார்.

மெடில்டா கார்ல்சனின் சொப்பின் வா என்ற பெயரிலான குதிரை எட்டாவது தடை தாண்டலை பாய மறுத்ததால் அவர் தோல்வியுற்று வெளியேறினார்.

இதன்படி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குகொண்ட இலங்கையின் ஒன்பது வீரர்களும் முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்துடன் நாடு திரும்புகின்றனர்

Video – குதிரைச் சவாரியில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் Mathilda Karlsson..!| Tokyo Olympic 2020

2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்க நேரடி தகுதியைப் பெற்றுக்கொண்ட முதலாவது இலங்கை வீராங்கனையான மெடில்டா கார்ல்சன், இம்முறை ஒலிம்பிக்கில் இலங்கையின் கடைசி எதிர்ப்பாக இன்று மாலை நடைபெற்ற குதிரைச் சவாரி (Jumping Individual) என்றழைக்கப்படும் தனிநபர்களுக்கான பாய்தல் போட்டியில் களமிறங்கினார்.

இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆண், பெண் இருபாலாருமாக மொத்தம் 73 பேர் போட்டியிட்டனர். இதில் அதிசிறந்த 30 இடங்களைப் பெறுவோர் அடுத்த சுற்றில் பங்குபற்ற தகுதிபெறுவர்

மேலும் 30ஆவது இடத்தை சம புள்ளிகளுடன் பகிரும் சகலரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவர்.

இதன்படி, இலங்கைக்கு பதக்கம் ஒன்றை வென்று கொடுக்கும் எதிர்பார்ப்புடன் 142 கோடி ரூபா பெறுமதியைக் கொண்ட புதிதாக வாங்கிய சொப்பின் வா (CHOPIN VA) என்ற பெயரிலான குதிரையுடன் பாய்தல் போட்டியில் மெடில்டா கார்ல்சன் களமிறங்கினார்

Photos: Mathilda Karlsson | 2020 Tokyo Olympics Equestrian

ஒவ்வொருவராக பங்குபற்றும் இந்த குதிரையேற்ற பாய்தல் போட்டியில் மெடில்டா, 13ஆவது போட்டியாளராக தனது குதிரையுடன் போட்டியை ஆரம்பித்தார்.

கார்ல்சனின் உத்தரவின்படி ஆரம்பத்தில் பாய்ந்த குதிரை, எட்டாவது தடை தாண்டலின் போது குதிரை பாய மறுத்ததுஇதனால் மெடில்டா கார்ல்சன் தோல்வியைத் தழுவிக்கொண்டு களத்திலிருந்து வெளியேறினார்

இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கில் இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பும் ஏமாற்றத்துடன் முடிவடைந்தது.

Video – ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்..! 2020 Tokyo Olympics

எதுஎவ்வாறாயினும், ஒலிம்பிக் வரலாற்றில் குதிரைச் சவாரி போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றும் முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட மெடில்டா கார்ல்சன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் உலக குதிரைச் சவாரி சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட தயாராக இருப்பதாகவும், அதில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் எனவும் போட்டியின் பிறகு தெரிவித்திருந்தார்.

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<