இலங்கைக்கு எதிரான தொடரில் சகிப், முஷ்தபிசூர் விளையாடுவதில் சிக்கல்?

Sri Lanka tour of Bangladesh 2021

130

பங்களாதேஷ் அணியின் சகிப் அல் ஹசன் மற்றும் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

சகிப் அல் ஹசன் மற்றும் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் இந்தியாவில் நடைபெற்றுவந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடிவந்தனர். எனினும், கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் இடைநிறுத்தப்பட்டன.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் திசர பெரேரா

இந்தநிலையில், இவர்கள் இருவரும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பங்களாதேஷுக்கு திரும்பவுள்ள நிலையில், அவர்கள் அரசாங்கம் விதித்துள்ள 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பங்களாதேஷ் அணியின் பயிற்சிகளில் முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகிப் அல் ஹசன் பங்கேற்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் எதிர்வரும் 19ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு, 3 நாட்கள் தனிமைப்படுத்தலுடன் பங்களாதேஷ் அணியுடன் இணைந்துக்கொள்வர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ஐ.பி.எல். தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் உடனடியாக நாடு திரும்பவுள்ளனர்.  பங்களாதேஷ் அரசாங்கத்திடம் இவர்கள் இருவருக்குமான தனிமைப்படுத்தல் நாட்களை குறைக்குமாறு  பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள பங்களாதேஷ் அரசாங்கம், அவர்கள் முழுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைறையை, அரசாங்க தனிமைப்படுத்தல் மையங்களில் பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தியாவிலிருந்து தற்போது விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகிப் அல் ஹசன் பங்களாதேஷை வந்தடைய வேறு ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாமுதீன் சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தலை முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோரால் நிறைவுசெய்ய முடியும். ஆனால், அணியின் பயிற்சிகளில் ஈடுபட்டு தயார்படுத்தல்களை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…