இலங்கை டெஸ்ட் குழாமில் இணையும் ஜெப்ரி வெண்டர்சே

919

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ThePapare.com இற்கு அறியக்கிடைக்கின்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தலா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T- 20 தொடர்களில் இந்தியாவுடன் ஆடவுள்ளது. இதன் முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்த நிலையில், நாக்பூரில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, தமது வரலாற்றில் மிக மோசமான தோல்வியை (இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள்) சந்தித்தது.

இலங்கையுடனான ஒரு நாள் தொடரில் கோஹ்லி இல்லை : அணிக்கு புதிய தலைவர்

இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் மூன்று..

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை அணியின் பந்து வீச்சுத் துறையை மேலும் பலப்படுத்தும் நோக்குடனேயே இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் அணிக்கு வெண்டர்சேயை இணைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்றிருந்த மற்றொரு இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான லக்ஷான் சந்தகன் குறித்த குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 11 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 7 T-20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெப்ரி வண்டர்சே எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணிக்காக விளையாடியதில்லை. எனவே, இவர் தனது 27ஆவது வயதில் இலங்கை டெஸ்ட் அணிக்காக இணையவுள்ளார். இவர் இதுவரை 36 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 24.87 என்ற சராசரியுடன் 168 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண T-20 தொடரில் விளையாடிய ஜெப்ரி வெண்டர்சே, பின்னர் கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக பல மாதங்கள் அவதிப்பட்டார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தி, தேசிய அணியில் இழந்த இடத்தைப் பெறுவதற்கான முயற்சியில் வெண்டர்சே தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.   

இந்தியாவில் கன்னித் தொடரை தோல்வியுடன் ஆரம்பித்த இலங்கை இளம் வீரர்கள்

இந்தியாவில் இடம்பெறும் 19 வயதுக்கு…

முதல் போட்டியில் காலநிலை கை கொடுக்க போட்டியை சமப்படுத்திய இலங்கை வீரர்கள், இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து தொடரில் 0-1 என பின்னிலை அடைந்துள்ளனர். எனவே, மூன்றாவது போட்டியில் வென்று தொடரை சமப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது.

இதேவேளை, சொந்தக் காரணங்களுக்காக இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாது ஓய்வு பெற்றிருந்த இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

வெண்டர்சே இலங்கை குழாத்திற்கு இணைக்கப்பட்ட விடயம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.