கிரிக்கெட்டில் ஆண் – பெண் இருபாலருக்கும் சமமான பரிசுத் தொகை

206

ICC சார்பில் நடத்தப்படும் உலகக் கிண்ணம் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ICC அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நேற்று (13) நடைபெற்ற ICC இன் வருடாந்த பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ICC தலைவர் கிரெக் பார்க்ளே கருத்து தெரிவிக்கையில், கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் ICC சார்பில் நடத்தப்படும் தொடர்களில் போட்டியிடும் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு தற்போது சமமாக பரிசுத் தொகை அளிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

2017ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் போட்டிகளில் பரிசுத் தொகையை அதிகரித்துள்ளோம். ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லும் அணி ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு சமமான பரிசுத் தொகையை பெறும். இது T20 உலகக் கிண்ணத் தொடர் மற்றும் 19 வயதின் உலகக் கிண்ணத் தொடர்களுக்கும் பொருந்தும். கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு என தெரிவித்துள்ளார்.

2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ICC மகளிர் T20 உலகக் கிண்ணங்களில் சம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2ஆவது இடத்தைப் பிடித்த அணிக்கு 500,000 டொலர்களும் பணப்பரிசாக வழங்கப்பட்டது. இது 2018இல் வழங்கப்பட்ட தொகையை விட 5 மடங்கு அதிகமாகும் என்று ICC அறிக்கை மேலும் கூறுகிறது.

  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<