கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் கோஹ்லியின் நிலைப்பாடு

748

கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டால் அதற்கு பிறகு துடுப்பாட்ட மட்டையை கையில் எடுக்கவே மாட்டேன் என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாஇந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு முன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், அவுஸ்திரேலியாவில் பிக் பேஷ் டி-20 லீக் தொடர் நடைபெறுகிறது. ஒருவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இந்திய வீரர்களுக்கான தடையை தளர்த்தினாலோ அல்லது ஓய்விற்குப் பிறகோ பிக் பேஷ் தொடரில் விளையாடுவீர்களா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு விராட் கோஹ்லி பதிலளிக்கையில் எதிர்காலத்தில் என்னுடைய வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னால் முடியும் அளவிற்கு போதுமான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். உண்மையிலேயே எதிர்காலம் குறித்து நான் சிந்திக்கவே இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். எனது ஓய்வு குறித்து கருத்து கூற முடியாது. ஏனென்றால், திரும்பவும் துடுப்பாட்ட மட்டையை எடுப்பது குறித்து சிந்திக்கவில்லை.

முதலாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச தொடர் இன்று (12)…

என்னுடைய கிரிக்கெட் காலம் ஒருநாள் முடியும் என்றால், அதற்குள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் விளையாடியிருப்பேன். காரணம், அப்போது நான் முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பேன். ஆகவே, திரும்பவும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்புவதை நான் பார்க்கவில்லை. ஒருமுறை கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டால், அது முடிந்ததாகத்தான் இருக்கும். மீண்டும் அதே சூழ்நிலையை விரும்பமாட்டேன் என்றார்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான முன்னணி கிரிக்கெட் வீரர்கள், டி-20 போட்டிகள் எளிதாக இருப்பதால், தேசிய அணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வெளிநாடுகளில் நடைபெறுகின்ற டி-20 தொடர்களில் பங்கேற்று விளையாடி வருவதுடன், பயிற்சியாளராகவும் செயற்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பணமும் வழங்கப்படுகின்றன. ஆனால், கிரிக்கெட் உலகில் சாதனைக்கு மேல் சாதனைகளை நிலைநாட்டி வருகின்ற கோஹ்லிக்கு, ஓய்வு பெற்ற பிறகும் பணத்துக்காகவும், புகழுக்காகவும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாகும்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர டி20 சகலதுறை தரவரிசையில் ஐந்தாமிடத்தில்

ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ள புதிய டி20 தரவரிசை பட்டியலின் பிரகாரம் இலங்கை அணி வீரர்களான லசித்…

அதேபோல, 72 ஆண்டுகள் இந்தியஅவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக அங்கு சென்று சாதனை வெற்றியைப் பெற்று இந்திய கொடியை நாட்டிய முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட விராட் கோஹ்லி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைகளில் முதலிடத்தைப் பெற்று, டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியை முதலிடத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

எனவே, கோஹ்லி மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்தான். ஆனால், மிகவும் சுமாரான தலைவர். அவரின் தலைமைப் பண்பில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இன்று கிரிக்கெட் உலகில் நட்சத்திர வீரராக வலம்வந்து கொண்டிருப்பதோடு மாத்திரமல்லாது, இந்தியாவை உலகளவில் முன்னணி கிரிக்கெட் அணியாகவும் கொண்டு வருவதற்கும் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்றால் மிகையாகது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<