நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து கேரி ஸ்டெட் விலகவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அவரது ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் முடிவடைந்தவுடன் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை இன்று (04) வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேரி ஸ்டெட்டின் 7 ஆண்டுகால பயிற்சியாளர் பதவி நிறைவுக்கு வரவுள்ளது.
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். அதன் பின், அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டெட் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான (T20 மற்றும் ஒருநாள்) பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் விலகியதுடன், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
இது இவ்வாறிருக்க, நியூசிலாந்து அணிக்கு அனைத்து வடிவங்களிலும் ஒரே தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க அந்த நாட்டு கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளதால், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய கிரிக்கெட் அணி களத்தடுப்பு பயிற்சியாளருக்கு பதவி நீடிப்பு
- இலங்கை கிரிக்கெட் வீர, வீராங்கனைகளுக்கு இந்திய பயிற்சியாளர் பயிற்சி
- இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதி நியமனம்
ஸ்டெட் நியூசிலாந்தின் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக கருதப்படுகிறார். கேரி ஸ்டீட்டின் பயிற்சியின் கீழ் நியூசிலாந்து அணி 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணம், 2022ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் மற்றும் இந்த ஆண்டில் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது. அதேசமயம் 2021ஆம் ஆண்டு முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
மறுபுறத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து வரலாற்று டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. அவரது காலகட்டத்தில்தான் நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசைகளில் முதலிடத்தைப் பிடித்;தது.
பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து கேரி ஸ்டெட் கருத்து தெரிவிக்கையில்,’கடந்த ஏழு ஆண்டுகளில் சில அற்புதமான நினைவுகள் உருவாகியுள்ளன. அந்த நினைவுகள் தங்கள் நாட்டிற்காகவும், ஒருவருக்கொருவரும், ரசிகர்களுக்காகவும் தங்கள் சிறந்ததை அளிக்க முயன்ற அற்புதமான மற்றும் திறமையான மக்களைச் சுற்றியே அமைந்துள்ளன. பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் மைக் ஹெஸன் வலுவான விழுமியங்களுடனும், விளையாட்டு பாணியுடனும் அணியை விட்டுச் சென்றனர். நான் அதை மேலும் உருவாக்கி, எங்களின் நிலைத்தன்மையை அனைத்திலும் வளர்க்க முயன்றுள்ளேன். மூன்று வடிவங்களிலும் போட்டியிடக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முடிவுகள் எப்படி இருந்தாலும், எதிரணிக்கு ப்ளெக் என்பது எளிதில் சரணடையாத, உறுதியுடனும் தீர்மானத்துடனும் போட்டியிடும் அணி என்பதை அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்தார்.
இதனிடையே, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் வெற்றி மற்றும் இந்தியாவில் சமீபத்திய டெஸ்ட் தொடர் வெற்றியை தனது பதவிக்காலத்தின் முக்கிய தருணங்களாக ஸ்டெட் குறிப்பிட்டார்.
‘ஐந்து மில்லியன் மக்கள்தொகை மற்றும் குறைந்த வளங்களைக் கொண்ட ஒரு நாட்டிற்கு, விளையாட்டின் மற்ற வல்லரசுகளுடன் ஒப்பிடும்போது நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறோம். எனக்கு உதவியும் ஆதரவளித்தும் வந்த அனைவருக்கும், குறிப்பாக எனது மனைவி ரேச்சல் மற்றும் குழந்தைகள் அலெக்ஸ் மற்றும் லிப்பி ஆகியோருக்கு நன்றி. அவர்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர். நியூசிலாந்து கிரிக்கெட் சபைக்கும், குறிப்பாக நான் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்’ என்றார்.
53 வயதாகும் கேரி ஸ்டெட் நியூசிலாந்து அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<