சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் பிரிட்டோரியர்ஸ்!

South Africa Cricket

154

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிரிட்டோரியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும் உள்ளூர் மற்றும் சர்வதேச T20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக உள்ளதாக ஓய்வை அறிவித்துள்ள பிரிட்டோரியர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

>> அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜஸ்ப்ரிட் பும்ரா!

தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடுவது தன்னுடைய குறிக்கோளாக இருந்தாலும், அதற்கான வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்த பின்னரே ஓய்வை அறிவித்துள்ளதாக டுவைன் பிரிட்டோரியர்ஸ் குறிப்பிட்டார்.

“கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவேண்டும் என்ற எனது வாழ்வின் கடினமான முடிவொன்றை எடுத்துள்ளேன்.  தென்னாபிரிக்க அணிக்காக விளையாடுவது என்னுடைய குறிக்கோளாகும். அனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. வெற்றிக்கொள்வதற்கான திறமையை கடவுள் கொடுத்துள்ளார். ஏனைய அனைத்து விடயங்களும் அவரின் கையில்தான் இருக்கிறது.

நான் T20 கிரிக்கெட்டில் அதிகமான கவனத்தை செலுத்த உள்ளேன். குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சிறந்த வீரராக இருக்க விரும்புகிறேன். இதன்மூலம் விளையாட்டு மற்றும் குடும்பத்துக்கான விடயங்களை சரியாக செய்யமுடியும் என எண்ணுகிறேன்” என்றார்.

டுவைன் பிரிட்டோரியர்ஸ் கடந்த 2016ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்காக அறிமுகமாகியிருந்த நிலையில், 30 T20i, 27 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமாத்திரமின்றி இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<