தென்னாபிரிக்காவின் இரண்டு சோகமான உலகக் கிண்ணங்கள்

237
AFP

நீங்கள் திறமையான கிரிக்கெட் அணி ஒன்றுக்கு ஆதரவு வழங்கினாலும் அவ்வணி உலகக் கிண்ணம் ஒன்றை வெல்லவில்லை என்றால் அது உங்களுக்கு மிகப் பெரிய கவலையினை தரும்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் இரசிகர்களுக்கும் இதே நிலைமைதான். தாம் மிகத் திறமையான கிரிக்கெட் அணி ஒன்றுக்கு ஆதரவு தருகின்ற போதிலும் உலகக் கிண்ணத்தை ஒரு தடவையேனும் வெல்ல முடியவில்லையே என்கிற கவலையுடன் அவர்கள் காணப்படுகின்றனர்.

இலங்கை இரண்டாம் நிலை அணிகள் முக்கிய போட்டிகளில் பங்கேற்பு

இலங்கை கிரிக்கெட் A அணி மற்றும் ………

தென்னாபிரிக்க அணிக்கு உலகக் கிண்ணத்தை வெற்றிபெறவில்லை என்பது ஏமாற்றம் தருகின்ற அதேவேளை கடந்த காலங்களில் நடைபெற்ற இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களின் அரையிறுதிப் போட்டிகள் அவர்களுக்கு மறக்க முடியாத விதத்திலும் அமைந்திருக்கின்றன.

1999 – உலகக் கிண்ணம்

கிரிக்கெட் விளையாட்டுக்கு 1992ஆம் ஆண்டிலேயே மறுபிரவேசம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணி, 1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணம் மூலம் மூன்றாவது தடவையாக உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் பங்கேற்றிருந்தது.   

இங்கிலாந்தில் இடம்பெற்ற இந்த உலகக் கிண்ணத்தில் நடப்புச் சம்பியன் இலங்கை அணியுடன் சேர்ந்து குழு A இல் தென்னாபிரிக்கா போட்டியிட்டது.

கத்துக்குட்டியாக இருந்த இலங்கை அணி, 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தை சுவீகரித்த காரணத்தினால் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் இலங்கை மீதே அனைத்து எதிர்பார்ப்புக்களும் இருந்தன.

ஆனால், இலங்கை அணிக்கு 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயற்பட முடியவில்லை. உலகக் கிண்ணத்தில் தாம் விளையாடிய முதல் போட்டியில் இங்கிலாந்துடன் தோல்வியினை தழுவிய இலங்கை அணி, தமது இரண்டாவது போட்டியில் ஹேன்சி குரோன்சே தலைமையிலான தென்னாபிரிக்க அணியுடன் மோசமான தோல்வி ஒன்றை மீண்டும் பதிவு செய்தது.

அப்போதைய நடப்புச் சம்பியன்களான இலங்கை அணியுடன் பெற்ற வெற்றியுடன் குழு A இல் மொத்தமாக நான்கு வெற்றிகளை பதிவு செய்த தென்னாபிரிக்கா 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் சுபர் சிக்ஸ் சுற்றுக்கு தெரிவாகியிருந்தது.

சுபர் சிக்ஸ் சுற்றில் சிறப்பாக செயற்படும் முதல் நான்கு அணிகளுக்கே அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாக முடியும் என்பதால் அதையும் செய்த தென்னாபிரிக்க அணி 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணியுடன் மோதும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டது.

உலகக் கிண்ண குழாத்திலிருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்

இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட …..

முன்னதாக, 1992ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்க அணி தெரிவாகியதால், உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் தென்னாபிரிக்கா மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியாக அவுஸ்திரேலிய அணியுடனான போட்டி அமைந்தது.

இந்நிலையில் பர்மிங்கம் நகரில் 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியாக தென்னாபிரிக்க – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ஆட்டம் ஆரம்பமாகியது.

மறுமுனையில் இந்த உலகக் கிண்ணத் தொடரின் மற்றைய அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது. எனவே, இந்த அரையிறுதிப் போட்டி பாகிஸ்தானுடன் மோதி உலகக் கிண்ணத்தை யார் வெல்லப் போகின்றார்கள் என்பதை தீர்மானிக்கும் ஆட்டமாகவும் அமைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித் தலைவர் ஹேன்சி குரோன்சே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கினார்.

முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியினர், தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களான ஷேன் பொல்லொக், அலன் டொனால்ட் போன்றோரின் அதிரடி பந்துவீச்சினை முகம் கொடுக்க முடியாமல் வெறும் 213 ஓட்டங்களுடன் சுருண்டனர்.

அவுஸ்திரேலிய அணி குறைவான ஓட்டங்களுக்குள் சுருண்ட காரணத்தினால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை முதல் தடவையாக பெறும் வாய்ப்பு ஒன்று உருவாகியிருந்தது.

தொடர்ந்து வெற்றி இலக்கினை எட்டும் பயணத்தை தென்னாபிரிக்க அணி ஆரம்பம் செய்கின்றது. தென்னாபிரிக்காவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் வந்த கெரி கிஸ்டன், ஹேர்சல் கிப்ஸ் ஆகியோர் எதிர்பார்த்த ஆரம்பத்தை தராவிட்டாலும் மத்தியவரிசையில் ஆடிய ஜேக் கல்லிஸ், ஜொன்டி ரொட்ஸ் போன்றோர் தங்களது பெறுமதியான ஓட்டங்கள் மூலம் நம்பிக்கை தந்தனர். இதில் கல்லிஸ் அரைச்சதம் ஒன்றுடன் 53 ஓட்டங்களை பெற்றிருக்க, ஜொன்டி ரொட்ஸ் 43 ஓட்டங்களை குவித்தார்.

வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

இலங்கை அணியும், இந்திய அணியும் 1996ஆம் ஆண்டின் கிரிக்கெட் …….

தொடர்ந்து இரண்டு வீரர்களினதும் விக்கெட்டுக்கள் பறிபோக தென்னாபிரிக்க அணி, வெற்றி இலக்கினை எட்டும் பயணத்தில் தடுமாற்றம் ஒன்றை காட்டியது. இந்த தடுமாற்றத்தில் இருந்து மீளாத  தென்னாபிரிக்க அணி, தொடர்ந்தும் விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து பாரிய இன்னலுக்கு முகம் கொடுத்தது.

இத்தருணத்தில் தென்னாபிரிக்க அணியின் நிலை அறிந்த லேன்ஸ் கிளஸ்னர், சாதுர்யமான முறையில் ஓட்டங்கள் சேர்த்து வெற்றி இலக்கினை நெருங்கச் செய்தார். லேன்ஸின் நிதான ஆட்டத்தினால் போட்டியின் இறுதி ஓவரில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 9 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது.

தொடர்ந்து இறுதி ஓவரினை அவுஸ்திரேலிய அணி சார்பில் டேமியன் பிளமிங் வீச தயராகினார். பிளமிங் வீசிய முதல் இரண்டு பந்துகளிலும் கிளஸ்னர் இரண்டு அட்டகாசமான பெளண்டரிகளை பெற்றார். இதனால், இரு அணிகளும் பெற்ற ஓட்டங்கள் சமமாகி, போட்டி சமநிலை அடைந்தது.  

பின்னர் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு இன்னும் ஒரு ஓட்டம் மாத்திரமே தேவைப்பட நான்கு பந்துகள் மீதமாக இருந்தது. கிளஸ்னரிற்கு தென்னாபிரிக்க அணியினை முதல்தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு  அழைத்துச் சென்று வரலாறு படைக்க ஒரு வாய்ப்பு.

இறுதி ஓவரின் மூன்றாவது பந்தில் அந்த வெற்றி ஓட்டத்தினை கிளஸ்னர் பெற முயற்சி செய்தார். ஆனால், அது கைகூடவில்லை. பின்னர், நான்காவது பந்தில் ஓட்டம் ஒன்றினை பெறும் முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த ஓட்டத்தினை பெறுவதற்கு முயன்ற கிளஸ்னரின் கணிப்பு தவறாக தென்னாபிரிக்க அணியின் கடைசி விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்த்தப்படுகின்றது. இதனால் கிளஸ்னர் மூலம் அந்த வெற்றி ஓட்டத்தினை பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும் இந்த ரன் அவுட்டினால் தென்னாபிரிக்காவின் உலகக் கிண்ண கனவும் கலைகின்றது.

ஏனெனில், தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியினை சமநிலை செய்த போதிலும் சுபர் சிக்ஸ் சுற்றில் சிறந்த நிகர ஓட்ட வித்தியாசத்தை காட்டத் தவறி 1999ஆம் ஆண்டின் உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கின்றது.

உலகக் கிண்ணத்திற்கான பலமான தென்னாபிரிக்க குழாம்

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CA), கிரிக்கெட்……….

இதேநேரம் தென்னாபிரிக்காவை தோற்கடித்த அவுஸ்திரேலியா 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணம் ஒன்றை சுவீகரித்துக் கொண்டது.

ஆனால், தென்னாபிரிக்கா உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தோற்காமலே 1999ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தை இழந்தது அவர்களுக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியது.

2015 – உலகக் கிண்ணம்

தென்னாபிரிக்க அணி 1999ஆம் ஆண்டிற்கு பின்னர், 2007ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய போதிலும் குறித்த அரையிறுதிப் போட்டியிலும் தோல்வியினை தழுவியது. தென்னாபிரிக்க அணிக்கு இந்த தோல்வி பெரிதாக வலி தரவில்லை.  

எனினும், 2015ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தின் போது தென்னாபிரிக்க அணிக்கு கிடைத்த வலி மறக்க முடியாதது. இந்த உலகக் கிண்ணத்திலும் தென்னாபிரிக்கா இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை துரதிஷ்டவசமாக இழக்கின்றது.  

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில்  2015ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடர் நடைபெற்றிருந்தது. மொத்தம் 14 அணிகள் இரண்டு குழுக்களாக பங்குபற்றிய இந்த உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணி, குழு B இல் போட்டியிட்டது.

இந்த உலகக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியினை ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றியுடன் ஆரம்பித்த தென்னாபிரிக்கா, மொத்தமாக நான்கு வெற்றிகளை பெற்று காலிறுதி சுற்றுக்கு தெரிவானது.

காலிறுதிச் சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக இலகு வெற்றி ஒன்றினை பெற்ற தென்னாபிரிக்கா,  அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டது.

பின்னர் இரண்டு அணிகளும் மோதிய அரையிறுதிப் போட்டி நியூசிலாந்தின் ஓக் லேன்ட் நகரில் ஆரம்பமானது. போட்டியில் காலநிலை குளறுபடி இருந்த காரணத்தினால் இரு அணிகளுக்கும் 43 ஓவர்களே விளையாட முடியுமாக இருந்தது. பின்னர், போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் ஏபி.டி. வில்லியர்ஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்து கொண்டார்.

வில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூர் அணிக்கு வெற்றி

ஐ.பி.எல். தொடரில் ப்ளே-ஓஃப் சுற்றுக்கு ……..

அதன்படி, முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணிக்கு பாப் டூ ப்ளேசிஸ் (82), ஏபி.டி. வில்லியர்ஸ் (65) ஆகியோர் அரைச்சதங்கள் பெற்று உதவினர். இவர்களின் அரைச்சதங்களோடு டேவிட் மில்லர் தனது அதிரடி மூலம் தென்னாபிரிக்க அணிக்கு இன்னும் வலுச்சேர்த்தார். வெறும் 18 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட டேவிட் மில்லர் 49 ஓட்டங்களை பெற்றார்.

இவர்களின் துடுப்பாட்ட பங்களிப்போடு தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 43 ஓவர்களில் கடினம் வாய்ந்த 298 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.

மிகவும் சவாலாக அமைந்த இந்த வெற்றி இலக்கினை அடைய தமது பதில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரன்டன் மெக்கலமின் அட்டகாச துடுப்பாட்டத்தோடு நல்ல தொடக்கம் கிடைத்தது. மெக்கலம் 26 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

மெக்கலமின் விக்கெட்டுக்கு பின்னர் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை  பறிகொடுத்து தடுமாறியது. இந்நிலையில் கிரன்ட் எலியட், கோரி அன்டர்சன் ஜோடி சவாலான வெற்றி இலக்கு ஒன்றை நோக்கும் பயணத்தில் நியூசிலாந்து அணிக்கு கைகொடுத்தனர்.

பின்னர் அன்டர்சன் அரைச்சதம் (58) ஒன்றினை கடந்த நிலையில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். அன்டர்சனை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த லூக் ரோன்ச்சியும் ஆட்டமிழந்தார்.

இப்படியாக இரண்டு அடுத்தடுத்த விக்கெட்டுகளால் போட்டியின் ஆதிக்கத்தை தென்னாபிரிக்க அணி எடுத்துக் கொண்டது. எனினும், எலியட் தனது அதிரடி ஆட்டம் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு தொடர்ந்து சவால் விடுத்தார்.

பின்னர் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மிகவும் திறமைமிக்க பந்துவீச்சாளர்களை கொண்டிருந்த தென்னாபிரிக்க அணி கடைசி ஓவரினை வீச அனுபவம் கொண்ட டேல் ஸ்டெய்னை அழைத்தது.

டேல் ஸ்டெய்ன் தன்னால் தென்னாபிரிக்க அணியினை தடுக்க என்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்தார். அவரின் சிறந்த பந்துவீச்சினால் கடைசி இரண்டு பந்துகளிலும் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்கள் பெற வேண்டிய இக்கட்டான நிலை உருவானது.

எனினும் ஸ்டெய்ன் வீசிய ஓவரின் ஐந்தாவது பந்து எலியட்டினால் ஆறு ஓட்டங்களாக மாற்றப்படுகின்றது. இதனால் தென்னாபிரிக்க அணியின் உலகக் கிண்ண கனவு மீண்டும் ஒரு தடவை கலைகின்றது.

பங்களாதேஷ் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு: சகீபுக்கு அவசர அழைப்பு

தொடர்ந்து ஒரு பந்து மாத்திரமே மீதமிருக்க 2015ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து தென்னாபிரிக்க அணியினை வீழ்த்தி இறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டது.

போட்டியின் ஆட்டநாயகனாக, தென்னாபிரிக்க வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த கிரன்ட் எலியட் தெரிவாகினார். இப்போட்டியின் தோல்வியினை அடுத்து மைதானத்திற்குள் இருந்த தென்னாபிரிக்க வீரர்கள் அழுதது இரசிகர்களின் கண்களையும் குளமாக்கியிருந்தது.

Getty Images

பல திறமையான வீரர்கள் இருந்தும், பலமான அணிக்குழாம் இருந்தும் உலகக் கிண்ணம் போன்ற முக்கிய தொடர்களில் தீர்க்கமான போட்டிகளில் வெற்றி பெறாமல், இறுதிப் போட்டிகளுக்கும் தெரிவாகாத காரணத்தினாலேயே தென்னாபிரிக்க அணியினர் ஆங்கிலத்தில் சோக்கர்ஸ் (Chokers) என அழைக்கப்படுகின்றனர்.   

கடந்த காலப் பதிவுகள் மாறக்கூடும் என்பதால் சோக்கர்ஸ்களாக இருக்கும்  தென்னாபிரிக்க அணி, இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் சாதிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்த உலகக் கிண்ணத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<