நாங்கள் முன்னேறியே வந்திருக்கின்றோம்: சந்திக ஹதுருசிங்க

1822

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை  கிரிக்கெட் அணி, தமது சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக அந்நாட்டு அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.  

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய செயற்பாடுகள் குறித்து தனது கருத்துக்களை இலங்கை அணியின்  தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க cricinfo ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில்  பகிர்ந்திருந்தார்.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இலங்கையின் தோல்வி ஓட்டம் முடிவுக்கு வருமா?

சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் தடுமாறி வந்த இலங்கை அணி மட்டுப்படுத்தப்பட்ட

இந்த நேர்காணலில் இலங்கை அணியின் அண்மைய டெஸ்ட் தொடர் தோல்விகள் பற்றி கதைத்த சந்திக ஹதுருசிங்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ (இத்தோல்விகள்) அனைவர் மீதும் அழுத்தங்களை உருவாக்கியிருக்கின்றது. இங்கிலாந்து சுற்றுத் தொடர் எங்களுக்கு சற்று துரதிஷ்டவசமாக அமைந்திருந்தது. அத்தொடரில் குறைந்தது இரண்டு டெஸ்ட் போட்டிகளிலாவது நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதோடு, நாங்கள் எதிர்பார்க்காத விடயங்கள் சிலவும் நடந்து விட்டன. எங்களுக்கு ரங்கன ஹேரத் ஓய்வு பெறப்போகின்றார் என்பது தெரியும். ஆனால், அகில தனன்ஞயவின் பந்துவீச்சு சந்தேகத்திற்கு இடமாக மாறும் என்பது தெரியாது. இது மாதிரி வேறு விடயங்களும் நாங்கள் எதிர்பார்த்தது போல் இடம்பெறவில்லை. நாங்களும் இதற்கு ஒரு வகையில் பொறுப்புதாரிகள். நாங்கள் சரியாக களத்தடுப்பில் ஈடுபடவில்லை. சில முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்டிருந்தோம். “

நியூசிலாந்தில், நாம் முதல் (டெஸ்ட்) போட்டியில் சிறப்பான போராட்டத்தை காட்டியதாக நம்புகின்றேன். இரண்டாவது (டெஸ்ட்) போட்டியில் நாங்கள் நல்ல பந்துவீச்சினை காட்டிய போதிலும், (நியூசிலாந்து வீரர்) ட்ரென்ட் போல்ட்டின் அதீத திறமை எங்களிடம் இருந்து போட்டியின் வெற்றியை பறித்து விட்டது. “

அவுஸதிரேலியாவுக்கு சென்று அங்கு இளம் சிவப்பு பந்து பயன்படும் (பகலிரவு) டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது இலங்கைக்கு மட்டுமல்லாது உலகின் வேறு எந்த அணிக்கும் பெரிய சவால் தான். இதனை அடுத்து கென்பரா டெஸ்ட் போட்டியில் எமது வீரர்களின் துரதிஷ்டவசமான காயங்களை சந்தித்தோம். இதனால், எங்களால் எதிர்பார்த்த ஆட்டத்தை வழங்க முடியவில்லை. இவையே (எமது தொடர் தோல்விகளுக்கு) காரணங்கள். எல்லாவற்றிற்கும் மேலதிகமாக நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்திருக்கின்றோம். “ என்றார்.

டெஸ்ட் தொடர்கள் ஒருபுறமிருக்க இலங்கை கிரிக்கெட் அணி கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தில் இருந்து எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் போராட்டத்தை காண்பித்த போதிலும், அதனை அடுத்து வந்த டெஸ்ட் போட்டிகளில் சோபிக்கத் தவறியிருந்தனர். இலங்கை அணி வீரர்கள் இவ்வாறாக அண்மைய டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் ஜொலிக்காதது பற்றி பேசிய ஹதுருசிங்க அதற்கான காரணங்களை விளக்கினார்.

எங்களது துடுப்பாட்ட வீரர்கள் நியூசிலாந்தில் (முதல் டெஸ்ட் போட்டியில்) நல்லமுறையிலேயே செயற்பட்டிருந்தனர். இரண்டாவது போட்டியில் அந்தளவிற்கு இருக்கவில்லை என்றாலும் எமது வீரர்கள் போராடினர். எமது அணி ஒரு குழுவாக இணைந்து போராடவில்லை என்பதை ஏற்கின்றேன். ஆனால், பிரிஸ்பேனில் இடம்பெற்ற இளம்சிவப்பு பந்து டெஸ்ட் போட்டியில் நிலைமைகளும், எதிரணியும் இலகுவாக அமைந்திருக்கவில்லை.

இந்த உலகில் இடம்பெற்ற ஏனைய பகலிரவு டெஸ்ட் போட்டிகளை எடுத்துப்பார்த்தீர்கள் எனில் அவை மூன்று நாட்களுக்குள்ளேயே முடிந்திருக்கும். இப்படியான ஒரு நிலையில் வெற்றி சாத்தியம் குறைந்த ஒன்று.  இதேநேரம், எங்களிடம் உலகின் தலைசிறந்த வீரர்களாக கருதப்படும் சங்கக்காரக்கள், முரளிகள் மற்றும் ரங்க ஹேரத்கள் இருந்தபோதுகூட எம்மால் அவுஸ்திரேலியாவில் வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது சில சிக்கல்களை ஏற்கனவே எதிர்கொண்ட எங்களிடம் வெற்றியை எதிர்பார்த்தது சரியற்ற எதிர்பார்ப்பாகும். “

தோல்விக் கதைகள் ஒரு புறமிருக்க இலங்கையின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்று ஒரு வருடம் கழிந்திருக்கும் நிலையில் இலங்கை அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் ஹதுருசிங்க பேசியிருந்தார்.

போட்டிகள் நிறைவடையும் போது அதில் கிடைக்கும் முடிவுகளுக்கு நானே பொறுப்பாக இருக்கின்றேன். இதனால், எனக்கு (அணிப்பயிற்சியாளர் என்பதை விட) ஒரு பெரிய பொறுப்பு இருக்கின்றது. (நான் பயிற்சியாளராக வந்த பின்னர்) உங்களுக்கு எமது பதிவுகளை எடுத்துப்பார்க்கும் போது, நாங்கள் முன்னேறி வந்திருப்பது தெரியும். அதோடு, நாங்கள் நம்பிக்கை ஒன்றினை உருவாக்குவதையும் உங்களுக்கு பார்க்க முடியுமாக இருக்கும். நாங்கள் தொடர்ச்சியாக ஜொலிக்க எது தேவையோ அதனை உருவாக்க முயற்சிக்கின்றோம். “

“இலங்கையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்போம்” – கேஷவ் மஹாராஜ்

இலங்கை அணிக்கு எதிராக நாளை (13) ஆரம்பமாகவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முற்றுமுழுதாக தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்த

இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்த போதிலும் சந்திக ஹதுருசிங்க இலங்கை வீரர்களுக்கு எப்போதும் ஊக்கம் தந்து அவர்களை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

நான் எப்போதும் அவர்களுக்கு நம்பிக்கை தர முயற்சி செய்கின்றேன். மேலும், என்னால் முடிந்தவரை அவர்களுக்கு போட்டித் திட்டங்களையும் விளக்க முயற்சி செய்கின்றேன்.”

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்கள் சிறந்த முறையில் செயற்பட எப்படி தயாராகி உள்ளார்கள் என்பது பற்றியும் ஹதுருசிங்கவிடம் கேட்கப்பட்டது. இதற்கு ஹதுருசிங்க இவ்வாறு பதில் அளித்திருந்தார்.

எனக்கு என்ன வளங்கள் தரப்பட்டிருக்கின்றதோ அவை அனைத்தையும் அவர்களுக்கு வழங்கியிருக்கின்றேன். எனது அதிகபட்ச முயற்சி எதுவோ அதனையும் மேற்கொண்டிருக்கின்றேன். உண்மையாக எங்களது வீரர்கள் இங்கே விளையாட தகுதியுடையவர்கள், போட்டியிடக்கூடியவர்கள் எனின் அவர்களிடம் இருந்து அதுவே எம்மால் எதிர்பார்க்கப்படுகின்றது. எங்களது முன்வரிசை வேகப்பந்து வீச்சாளர்கள் மூவர் இங்கே விளையாடி இருக்க வேண்டும். எனினும், காயம் காரணமாக அது நடைபெறவில்லை. எமது கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறாத மாற்றங்களும் தற்போது இடம்பெற்றிருக்கின்றன. எனவே, நாங்கள் அனுபவம் குறைந்தவர்களாகவே உள்ளோம். “

இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுடன் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (13) டர்பன் நகரில் ஆரம்பமாகின்றது.

முதல் டெஸ்ட் போட்டியினை அடுத்து, தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இம்மாதம் 21ஆம் திகதி போர்ட் எலிசபெத் நகரில் இடம்பெறுகின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க