யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது பேஸ் போல்

138

அமெரிக்க மற்றும் கிழக்காசிய கண்டங்களில் மிகவும் பிரசித்திபெற்ற விளையாட்டான பேஸ் போல் (Baseball) இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த அறிமுக நிகழ்வில், வேம்படி மகளிர்  உயர்தர பாடசாலை, திருக்குடும்ப கன்னியர்மடம், யாழ் இந்து மகளிர் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி  மற்றும் ஹாட்லி கல்லூரி ஆகிய 7 பாடசாலைகளிலிருந்து 230 இற்கும் அதிகமான மாணவர்கள் பங்கு பற்றியிருந்தனர். இவர்களுடன் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள்  ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

தேசிய வீரர்களை உள்ளடக்கிய கடற்படை விளையாட்டுக் கழகம் மற்றும் இராணுப்படை விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கிடையிலான காட்சிப் போட்டியொன்று நிகழ்வின் ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்திய கட்புலனற்றோர் அணியிடம் வைட்-வொஷ் தோல்வியடைந்த இலங்கை கட்புலனற்றோர் அணி

இந்த அறிமுக நிகழ்வினை மலிந்து ஹேவகே, அமில பத்திராஜ மற்றும் லக்ஷ்மன் ஆகியோர் வழிநடத்தியிருந்தனர். அதேவேளை, விஷேட வளவாளர்களாக ஜப்பான் நாட்டிலிருந்து வருகை தந்திருக்கக்கூடிய பயிற்றுவிப்பாளர்களான மக்கற்றோ ஹறடா மற்றும் கோய்ச்ஷி ரக்கனோ ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

பேஸ் போல் விளையாட்டில், எல்லே விளையாட்டை ஒத்த சில அம்சங்களினை அவதானித்த மாணவர்கள் ஆர்வமாக விளையாட்டினை கற்றுக்கொண்டனர்.

முதல் கட்டமாக மாணவர்களது விளையாட்டின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கும் முகமாக, பேஸ் போல் துடுப்பு மற்றும் பந்து ஆகியன பங்கெடுத்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.  

”சகலருக்கும் பேஸ் போல்” (Baseball for all)

உலகம் முழுவதிலும் பரவலாக விளையாடப்பட்டு வருகின்ற களக்கோட்டுப் பந்தாட்டம் அமெரிக்க கண்டத்தில் மிகப்பிரபலமான விளையாட்டாகும்.

அணிக்கு தலா 9 பேர் கொண்டு பந்து மற்றும் துடுப்பினை பயன்படுத்தி விளையாடப்படும் இந்த விளையாட்டு இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்பட்டாலும், குடியேறிகள் மூலமாக அமெரிக்க கண்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நவீன பேஸ் போல் விளையாட்டு அமெரிக்காவிலேயே வளர்ச்சியுற்றது.  

இலங்கையில் 1985 ஆம் ஆண்டு முதல் தேசிய ரீதியிலான சுற்றுப்போட்டி வருடாவருடம் இடம்பெற்று வருகின்றது. பேஸ் போல் முக்கோண வலயம் என அறியப்படும் கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பரவலாக இந்த விளையாட்டு விளையாடப்பட்டு வருகின்றது. இலங்கை பேஸ் போல் சங்கம் இந்த விளையாட்டை நாடு பூராகவும் பிரபல்யப்படுத்தும் நோக்கிலேயே “சகலரிற்கும் களக்கோட்டுப் பந்தாட்டம்” என்ற இந்த களக்கோட்டுப் பந்தாட்டத்தினை பிரபல்யப்படுத்தும் செயற்திட்டத்தினை  ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் தேசிய ரீதியிலான திறந்த போட்டி, பல்கலைகழகங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டி என பல தரப்பட்ட சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது. இலங்கை தேசிய அணி ஆசிய சம்மேளன சுற்றுத்தொடர்களில் பங்கெடுப்பதுடன் பதக்கங்களையும் வென்று வருகின்றது.

“சகலருக்கும் பேஸ் போல்” வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக பயிற்றுவிப்பாளர்கள் பயிற்றுவிக்கப்படவிருக்கின்றனர், எதிர்கால வீரர்களை உருவாக்குவதனை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

பேஸ் போல் அறிமுக செயற்திட்டம் நாளைய தினம் காலை முதல் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<