அணித்தலைவராக இறுதி ஒருநாள் தொடரில் ஆடவுள்ள மொர்தஸா

60

சுற்றுலா ஜிம்பாப்வே அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான 15 பேர் அடங்கிய பங்காளாதேஷ் அணியின் குழாம் நேற்று (23) அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் மின்ஹாஜுல் அபிதீனினால் வெளியிடப்பட்டது.

டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின்…..

இருதரப்பு தொடரில் ஆடுவதற்காக பங்களாதேஷ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரு போட்டி கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் என மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடுகிறது.  

முதல் தொடரான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் (22) முதல் நடைபெற்று வருகின்ற நிலையில், அடுத்த தொடராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மார்ச் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

இந்நிலையில், வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் படி பங்களாதேஷ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மஷ்ரபி மொர்தஸா ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடியதன் பின்னர் உபாதைக்குள்ள நிலையில் தற்போது உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் குழாமிற்கு திரும்பியுள்ளார்.  எனவே, அவர் பங்களாதேஷ் ஒருநாள் அணித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளார். 

இதேவேளை, 2001ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்று இதுவரையில் 217 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவத்தை கொண்ட மொர்தஸா அணித்தலைவராக விளையாடும் இறுதி ஒருநாள் சர்வதேச தொடர் இதுவென பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். 

இலங்கையிடம் வீழ்ந்த மேற்கிந்திய தீவுகளுக்கு ஐ.சி.சி அபராதம் விதிப்பு

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ……

குறித்த குழாத்தில் இரண்டு வீரர்கள் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை அணியுடனான  போட்டியில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்று இதுவரையில் 10 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 20 வயதுடைய சகலதுறை வீரர் அபிப் ஹுஸைன் மற்றும் கடந்த வருட இறுதியில் டி20 சர்வதேச அறிமுகம் பெற்ற 20 வயதுடைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் நயிம் ஆகியோர் இவ்வாறு அறிமுக வீரர்களாக குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 

பங்களாதேஷ் அணி இறுதியாக கடந்த 2019 ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடியிருந்தது. இதன் பின்னர் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ஒருநாள் சர்வதேச தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.  

இலங்கை அணியுடனான குறித்த தொடரில் விளையாடிய அணியிலிருந்து தற்போது ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்காக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சௌமியா சர்கார் தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வில் சென்றுள்ளதன் அடிப்படையில் ஒருநாள் குழாமில் இடம்பெற தவறியுள்ளார். 

மேலும், துடுப்பாட்ட வீரர்களான அனாமுல் ஹக், சபீர் ரஹ்மான் சகலதுறை வீரர்களான மொஸாதீக் ஹுஸைன், பர்ஹாத் ரீஸா, வேகப் பந்துவீச்சாளர்களான ரூபல் ஹுஸைன் மற்றும் தஸ்கின் அஹமட் ஆகிய ஏழு வீரர்கள் இவ்வாறு பங்களாதேஷ் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இலங்கை அணியுடனான தொடருக்கான குழாமில் நீக்கப்பட்டிருந்த வேகப் பந்துவீச்சாளர் மஷ்ரபி மொர்தஸா உள்ளிட்ட நஜ்முல் ஹுஸைன் சான்டோ, லிட்டன் தாஸ், அல் அமீன் ஹுஸைன், மொஹமட் சைபுதீன் மற்றும் சபியுல் இஸ்லாம் ஆகியோர் இவ்வாறு புதிதாக குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 

முதலிரண்டு போட்டிகளுக்குமான பங்களாதேஷ் குழாம்

மஷ்ரபி மொர்தஸா (அணித்தலைவர்), தமீம் இக்பால், நஜ்முல் ஹுஸைன் சான்டோ, மஹ்மதுல்லாஹ் ரியாத், முஷ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன், லிட்டன் தாஸ், தைஜூல் இஸ்லாம், அபிப் ஹுஸைன், மொஹமட் நயிம், அல் அமீன் ஹுஸைன், மொஹமட் சைபுதீன், சபியுல் இஸ்லாம், மெஹிதி ஹஸன் மிராஸ், முஸ்தபீசுர் ரஹ்மான் 

இலங்கையுடனான டி20 சர்வதேச குழாமுக்கு திரும்பிய அண்ட்ரூ ரசல்

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள டி20 …..

ஒருநாள் சர்வதேச தொடர் அட்டவணை. (அனைத்து போட்டிகளும் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளன.)

  • 1 மார்ச் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி 
  • 3 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி 
  • 6 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி 

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<