மூன்றாவது ஒருநாள் போட்டியில் மாற்றம் மேற்கொள்ளும் பங்களாதேஷ்

60

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முக்கிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதிரடி வெற்றியோடு ஒருநாள் தொடரினை சமப்படுத்திய இலங்கை

அந்தவகையில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பிரகாசிக்கத் தவறியிருந்த ஆரம்பத் துடுப்பாட்டவீரரான லிடன் தாஸ் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டிக்கான பங்களாதேஷ் ஒருநாள் குழாத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார். லிடன் தாஸ் இலங்கை அணியுடன் நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஓட்டங்கள் பெறாது ஆட்டமிழந்திருந்தமை இதற்கு காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.   

அதேநேரம் லிடன் தாஸ் இல்லாத நிலையில், விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ஜேகர் அலி பங்களாதேஷ் ஒருநாள் குழாத்தினுள் இணைக்கப்பட்டிருக்கின்றார். ஜேகர் அலி இலங்கை அணியுடன் நடைபெற்ற T20I தொடரின் முதல் போட்டியில் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அதோடு இதுவரை ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அறிமுகம் பெறாத ஜேகர் அலி, மொத்தமாக 84 List-A போட்டிகளில் ஆடி 34.87 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு 1918 ஓட்டங்கள் வரை குவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலை அடைந்திருக்கும் நிலையில், தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி திங்கட்கிழமை (18) நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<