ஆசியக் கிண்ணத் தொடரின், 14 ஆவது அத்தியாயம் இன்று (15) ஐக்கிய
ஐக்கிய அரபு இராச்சியத்தில் 14 ஆவது முறையாக நடைபெறும் ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியை 137 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கும் பங்களாதேஷ் அணி அதிரடியான வெற்றியொன்றுடன் தொடரை ஆரம்பித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஹொங்கொங் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக (A, B என) பிரிக்கப்பட்டு மோதல்கள் நடைபெறும் இம்முறைக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி குழு B இன் முதல் லீக் போட்டியாக அமைந்திருந்தது.
கடந்த கால ஆசியக் கிண்ணத் தொடர்களின் சிறந்த பதிவுகள் – ஒரு மீள்பார்வை
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14 ஆவது அத்தியாயம், இன்று சனிக்கிழமை ஐக்கிய…
டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று (15) ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
நாணய சுழற்சியின் படி போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட தயராகிய இலங்கை அணியில் 16 மாதங்களின் பின்னர் வேகப்புயலான லசித் மாலிங்க திரும்பியிருந்ததோடு சுழல் வீரரான தில்ருவான் பெரேராவுக்கும் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இலங்கை ஒரு நாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இதேநேரம், தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரில் ஆடிய நிரோஷன் திக்வெல்ல அணியில் இணைக்கப்படவில்லை.
மறுமுனையில் பங்களாதேஷ் அணியில் உபாதை ஆபத்துகள் இருந்த நிலையில் தமிம் இக்பால், சகீப் அல் ஹஸன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து பங்களாதேஷ் அணி தமது துடுப்பாட்டத்தை லிடன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகியோருடன் ஆரம்பித்தது. எனினும், போட்டியின் முதல் ஓவரை வீசிய லசித் மாலிங்க முதல் ஓவரின் இறுதி இரண்டு பந்துகளிலும் ஆரம்ப வீரர் லிடன் தாஸ், புதிய வீரராக வந்த சகீப் அல் ஹஸன் ஆகியோரின் விக்கெட்டுக்களை கைப்பற்றி அதிரடியான ஆரம்பம் ஒன்றினை இலங்கை அணிக்கு வழங்கி தனது மீள்வருகையின் முக்கியத்துவத்தையும் காட்டினார்.
இதனை அடுத்து, போட்டியின் இரண்டாவது ஓவரில் சுரங்க லக்மாலின் பந்துபட்டு தமிம் இக்பாலுக்கு மணிக்கட்டு உபாதை ஏற்பட அவர் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானது. இப்படியாக தொடர்ச்சியாக முக்கிய வீரர்களின் வெளியேற்றத்தினால் பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பத்திலேயே ஒரு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், புதிய துடுப்பாட்ட வீரர்களாக களத்தில் இருந்த முஸ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன் ஆகியோருக்கு அணியை கட்டமைக்க வேண்டிய முக்கிய பொறுப்பு இருந்தது.
தொடர்ந்து, இலங்கை அணி களத்தடுப்பில் சில தவறுகளை விட்டது. இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மிதுன் – ரஹீம் ஜோடி பங்களாதேஷ் அணிக்காக மெதுவான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்ப முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டனர். இந்த இணைப்பாட்டத்திற்குள் அனுபவம் குறைந்த மொஹமட் மிதுன் அவரது கன்னி அரைச்சதத்தை பூர்த்தி செய்ததோடு, முஸ்பிகுர் ரஹீமும் அவரது 30 ஆவது ஒரு நாள் அரைச்சதத்தை தனது கிரிக்கெட் புத்தகத்தில் பதிந்து கொண்டார்.
தமது கடைசி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வீரர்கள்
கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் ஜாம்பவான் யார்? என்பதை அடையாளம் காணவும்…
இரண்டு வீரர்களும் தங்களது அரைச்சதங்களுடன் ஒரு கட்டத்தில் சரிவிலிருந்த பங்களாதேஷ் அணியை மீட்டதுடன், 131 ஓட்டங்களை இணைப்பாட்டமாகவும் பகிர்ந்தனர். இலங்கை அணிக்கு மிகவும் சவாலாக அமைந்த இந்த இணைப்பாட்டம் மாலிங்கவின் அதிரடி பந்துவீச்சினால் மொஹமட் மிதுனின் விக்கெட்டோடு தகர்க்கப்பட்டது. பங்களாதேஷ் அணியின் மூன்றாம் விக்கெட்டான மிதுன் 68 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மிதுனின் விக்கெட்டினை அடுத்து பங்களாதேஷ் அணி லசித் மாலிங்க, தனன்ஞய டி சில்வா ஆகியோரின் பந்துவீச்சினால் மீண்டும் சரிவினை சந்திக்க தொடங்கியது. மத்தியவரிசையில் வந்த மஹமதுல்லாஹ், மொசாதிக் ஹொசைன் போன்றோர் பங்களாதேஷ் அணிக்காக பிரகாசிக்கவில்லை. எனினும், மிகவும் பொறுமையாக ஆடிய முஸ்பிகுர் ரஹீம் தனது 6 ஆவது ஒரு நாள் சதத்தினை பூர்த்தி செய்தார். முஸ்பிகுர் ரஹீமின் சத உதவியோடு பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 261 ஓட்டங்களை குவித்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் இறுதிவரை போராடிய முஸ்பிகுர் ரஹீம், 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 150 பந்துகளுக்கு 144 ஓட்டங்களை குவித்து ஒரு நாள் போட்டியொன்றில் தான் பெற்ற தனது சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார்.
இதேவேளை, இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக லசித் மாலிங்க வெறும் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தனது சிறந்த பந்துவீச்சு பெறுமதியை பதிவு செய்ததோடு, தனன்ஞய டி சில்வா 2 விக்கெட்டுக்களை கைப்பபற்றியிருந்தார்.
பின்னர் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 262 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாட ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர்களாக உபுல் தரங்கவும், குசல் மெண்டிஸும் வந்தனர். உபுல் தரங்க இலங்கை அணிக்கு அதிரடி ஆரம்பத்தை தந்த போதிலும் குசல் மெண்டிஸ் இரண்டாவது ஓவரிலேயே ஓட்டமேதுமின்றி ஓய்வறை நடந்தார்.
மெண்டிஸின் விக்கெட்டை அடுத்து இலங்கை அணியின் அஸ்தமனம் ஆரம்பமாகியது. புதிய வீரராக குசல் பெரேரா களம் வர அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த உபுல் தரங்க பங்களாதேஷ் அணியின் தலைவர் மஸ்ரபி மொர்தஸாவினால் போல்ட் செய்யப்பட்டு 27 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். தரங்கவை அடுத்து புதிய வீரராக களமிறங்கிய தனஞ்சய டி சில்வாவும் பிரகாசிக்கவில்லை. இவர்கள் இருவரையும் அடுத்து நம்பிக்கை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட குசல் பெரேராவின் விக்கெட்டும் வெறும் 11 ஓட்டங்களுடன் பறிபோனது.
தொடர்ந்து இலங்கை அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், தசுன் சானக்க ஜோடி இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்க முயற்சித்திருந்த போதிலும் பங்களாதேஷ் அணியின் திறமையான பந்துவீச்சினால் அதுவும் கைகூடியிருக்கவில்லை. தசுன் சானக்க ரன் அவுட் செய்யப்பட அணித்தலைவர் மெதிவ்ஸ் LBW முறையில் ஆட்டமிழந்திருந்தார். இருவரும் மிகவும் குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தனர்.
இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பு உரிமம் மோசடி அம்பலம்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு பிரதானி ஒருவரினால் ஒளிபரப்பு உரிமம் தொடர்பில் மேற்கொள்ளவிருந்த மோசடி தொடர்பிலான…
இதன் பின்னர் இறுதி எதிர்பார்ப்பாக இருந்த திசர பெரேராவின் விக்கெட்டும் வெறும் 6 ஓட்டங்களுடன் விழ கடைசியில், 35.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து இலங்கை அணி 124 ஓட்டங்களுடன் படுதோல்வி அடைந்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தில்ருவான் பெரேரா 29 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம், அசத்தலான பந்துவீச்சை வெளிக்காட்டிய பங்களாதேஷ் அணியின் மசரபி மொர்தஸா, முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்திருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகன் விருது பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீமுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அணி ஆசியக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த போட்டியில் திங்கட்கிழமை (17) ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கின்றதுடன் குறித்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையிலும் காணப்படுகின்றது.
ஸ்கோர் விபரம்
போட்டி முடிவு – பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<





















