அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா சம்பியனாக மேல்மாகாணம்

243

எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் இவ்வருடமும் நடைபெற்ற 34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான தேசிய ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகளில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக குருநாகல் மலியதேவ கல்லூரியைச் சேர்ந்த பசிந்து கொடிக்கார தெரிவானார்.

இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் 47.54 செக்கன்களைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை வென்ற பசிந்து கொடிக்கார, இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேலி ஓட்டத்தில் புதிய போட்டிச் சாதனையொன்றை நிலைநாட்டினார். இவர் போட்டித் தூரத்தை 52.53 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளின் நான்காவது நாளில் 10 புதிய போட்டிச் சாதனைகள்

அத்துடன், இம்முறை அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனரில் சுவட்டு நிகழ்ச்சிகளுக்கான அதிசிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பசிந்து, கடந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை 4 x 400 அஞ்சலோட்ட அணியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 12.74 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப்பதக்கத்தை வென்ற ராஜகிரிய கேட்வே சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஆர். ரந்தி குரே தெரிவானதுடன், பாய்தல் போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருந்து சுமார் 6000 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த முதலாம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

29 போட்டி நிகழ்ச்சிகளுக்காக 12, 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய 5 வயதுப் பிரிவுகளின் கீழ் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற இம்முறை விளையாட்டு விழாவில், ஆண்கள் பிரிவில் 25 போட்டிச் சாதனைகளும், பெண்கள் பிரிவில் 21 போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. 33 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிலைநாட்டப்பட்ட அதிக போட்டிச் சாதனையாகவும் இது பதிவாகியது.

தனிநபர் விருதுகள்

எறிதல் நிகழ்ச்சிகளில் அதிசிறந்த வீரருக்கான விருதை பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க பெற்றுக்கொண்டார். 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 55.58 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றார்.

துல்ஷான், நுவனிது ஆகியோர் அசத்த இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேலி ஓட்டப் போட்டியை 14.21 செக்கன்களில் நிறைவுசெய்த மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் திலூஷ காரியவசம், தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் சட்டவேலி ஓட்டப் போட்டிகளுக்கான அதி சிறந்த வீரராக தெரிவானார்.

இதேநேரம், ஆண்களுக்கான அஞ்சலோட்ட போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலள ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

ஒட்டுமொத்த சம்பியனாகியது மேல் மாகாணம்

34 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 1440 புள்ளிகளைக் குவித்த மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. 505 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 376 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வடமேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கடந்த வருடத்தைப் போல இம்முறை போட்டித் தொடரிலும் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட கிழக்கு மாகாண அணி வெறும் 28 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்தையும், 135 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட வட மாகாண அணி 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு மாகாணங்களும் கடந்த வருடமும் இதே இடங்களைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மாகாணம் புள்ளிகள்
மேல் மாகாணம் 1440
மத்திய மாகாணம் 505
வடமேல் மாகாணம் 376
சப்ரகமுவ மாகாணம் 286
தென் மாகாணம் 276
வட மாகாணம் 135
வட மத்திய மாகாணம் 115
ஊவா மாகாணம் 101
கிழக்கு மாகாணம் 28

ஒட்டுமொத்த சம்பியன்கள்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கடந்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட 12 வயதுப் பிரிவில் ஆண்கள் சம்பியனாக கொழும்பு றோயல் கல்லூரியும், பெண்கள் பிரிவில் சம்பியனாக கொழும்பு மியூசியஸ் கல்லூரியும் தெரிவாகின.

14 வயதுப் பிரிவில் ஆண்கள் சம்பியனாக அம்பலாங்கொடை வித்யாவர்தன வித்தியாலயமும், நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலையும் சம்பியனாகத் தெரிவாகின.

அத்துடன், 16 வயதுப் பிரிவின் ஆண்கள் சம்பியனாக பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியும், பெண்கள் பிரிவில் கொழும்பு பிஷொப் கல்லூரியும் தெரிவாகின.

வடக்கின் கில்லாடி யார்? பெனால்டியில் றோயலை வென்ற பாடும்மீன் இறுதிப்போட்டிக்கு

இதேவேளை, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளில் ஆண்கள் சம்பியன்களாக பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியும், பெண்கள் பிரிவில் வலள ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரியும் சம்பியன்களாகத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், 34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், 16, 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகள் அடங்கலாக ஆண்கள் பிரிவில் 165 புள்ளிகளைப் பெற்ற பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி ஒட்டுமொத்த சம்பியனானது.

அதேபோன்று, பெண்கள் பிரிவில் 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளில் 187 புள்ளிகளைப் பெற்ற வலள ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி, தொடர்ச்சியாக 15ஆவது தடவையாக ஒட்டுமொத்த சம்பியனாக முடிசூடிக் கொண்டது.

இதேநேரம், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் குழுநிலைப் போட்டிகளில் 145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட கொழும்பு விசாகா வித்தியாலயம் சம்பியனாகத் தெரிவாகியதுடன், கொழும்பு றோயல் கல்லூரி (140 புள்ளிகள்), கொழும்பு ஆனந்த கல்லூரி (75 புள்ளிகள்) முறையே 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டன.

இறுதி நாளில் 5 போட்டிச் சாதனைகள்

போட்டியின் ஐந்தாவதும், இறுதியுமான நாளான இன்று 27 நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் 5 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

இன்று காலை நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ஹென்தொட்ட விஜயவர்தன மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அயேஷ் மிஹிரங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 9.81 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார். எனினும், நேற்று  நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அந்த மாணவனால் நிகழ்த்தப்பட்ட சாதனை (9.86 செக்.) இன்று மீண்டும் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குருநாகல் மலியதேவ கல்லூரியைச் சேர்ந்த பசிந்து கொடிக்கார, 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சட்டவேலி ஓட்டத்தில் புதிய போட்டிச் சாதனையொன்றை நிலைநாட்டினார். இவர் போட்டித் தூரத்தை 52.53 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

இதேநேரம், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான 4 x 50 அஞ்சலோட்டத்தில் கொழும்பு மியூசியஸ் கல்லூரி, 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டத்தில் கொழும்பு றோயல் கல்லூரி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4 x  400 அஞ்சலோட்டத்தில் வலள ஏ ரத்னாயக்க கல்லூரி ஆகியன புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தன.

இதில் 2005ஆம் ஆண்டு மாதம்பே டி.எஸ் சேனநாயக்க கல்லூரி அணி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 4 x  400 அஞ்சலோட்டத்தில் நிலைநாட்டிய சாதனையை 13 வருடங்களுக்குப் பிறகு வலள ஏ ரத்னாயக்க கல்லூரி முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குக்கு 2 வெண்கலப் பதக்கம்

அண்மைக்காலமாக தேசிய மட்டத்தில் பல நட்சத்திர மெய்வல்லுனர் வீரர்களை உருவாக்கிய கிழக்கு மாகாணம், இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது.

பாடசாலை மெய்வல்லுனரில் தங்கம் வென்று சாதனை படைத்த ரஸ்னி அஹமட்

இதில் இன்று காலை நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 60 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையைச் சேர்ந்த அப்ஷித் அஹமட், வெண்கலப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 8.64 செக்கன்களில் கடந்தார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட மர்ஹும் நுஸ்கி, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அப்பாடசாலைக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார். அதன்பிறகு சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு அப்பாடசாலை பதக்கமொன்றினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கபடிப் போட்டியில் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலை அணி வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது பதக்கத்தினை நேற்று முன்தினம் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச்.எம் ரிஹான் பெற்றுக்கொடுத்தார். குறித்த போட்டியில் அவர் 59.98 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.

வட மாகாணத்துக்கு 13 பதக்கங்கள்

கடந்த காலங்களைப் போன்று இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் மைதான நிகழ்ச்சிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் 2 தங்கம், 7 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 13 பதக்கங்களை வென்றனர். எனினும், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் வட மாகாண அணி, 14 பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் போட்டிகளின் முதல் நாளன்று 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் 4.55 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த எஸ். திசாந்த், 4.35 மீற்றர் உயரத்தைத் தாவி வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேவேளை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஸ்ரீ அருணவி வெண்கலப் பதக்கத்தையும், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மன்னார் கொண்டச்சி அ.மு.ம பாடசாலையைச் சேர்ந்த ஜெனுசன் பீரிஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தனர்.

முதலாவது பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

இது இவ்வாறிருக்க, யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி 2 வெள்ளிப் பதக்கங்களையும் இம்முறை பாடசாலை மெய்வல்லுனரில் கைப்பற்றின. இதில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் எஸ். மிதுன்ராஜ் மற்றும், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் டி. அபிஷாந்த், ஆகிய வீரர்கள் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

இதன்படி, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 5 பதக்கங்களை வென்றது.

அத்துடன், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி ஒரு தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கத்தினையும், யாழ். தெல்லிப்பளை மகாஜன கல்லூரி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டன.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க