உபாதைகள், உடல் அவஸ்தைகளால் பாதிப்படையும் இலங்கை அணி

3539

டெல்லியில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் ஹீரோவாக மாறியிருந்த தனன்ஞய டி சில்வா, இந்தியாவுடன் நாளை (10) நடைபெறவிருக்கும் ஒரு நாள் போட்டியில் இருந்து விலகியிருப்பதோடு, சுரங்க லக்மால் மற்றும் இலங்கையின் துடுப்பாட்ட பயிற்சியாளர் திலான் சமரவீர ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள தொடர் வாந்தி காரணமாக இன்று நடைபெற்ற பயிற்சிகளில் அவர்களுக்கு கலந்துகொள்ள முடியாமல் போயுள்ளது.

டெல்லி காற்றுமாசினால் மைதானத்திலிருந்து வெளியேறிய இலங்கை வீரர்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான… கடந்த ஞாயிற்றுக்கிழமையும்…

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் ஒன்றினைப் பெற்று போட்டியின் சமநிலைக்கு உதவிய தனன்ஞய அப்போட்டியின் போது தொடைக்கு மேலான தசைப்பகுதியில் வலியினை உணர்ந்திருந்தார். இதனால், அப்போதே அவர் மருத்துவ அவதானத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று, (8) போட்டி நடைபெறும் மைதானத்துக்கு பயிற்சிகளுக்கு வந்த தனன்ஞய டி சில்வாவுக்கு சுயாதீனமான முறையில் அசைய சிரமமாக இருந்த காரணத்தினால் இந்திய அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை அவர் தற்போது இழந்திருக்கின்றார்.

டெல்லியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் மைதானத்திலேயே வாந்தி எடுத்த லக்மாலுக்கும், தொடர் வாந்தி காரணமாக இன்று (9) சனிக்கிழமை  நடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவாகியிருந்தது. எனினும், சுரங்க லக்மால் நாளைய ஒரு நாள் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை தொடர் வாந்திகள் மூலம் அவஸ்தைக்கு உள்ளான இலங்கையின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான திலான் சமரவீரவுக்கும், சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சிகளில் தனது சேவைகளை இலங்கை அணிக்கு வழங்க முடியாமல் போயிருக்கின்றது. சமரவீர தற்போது மருத்துவ உதவிகளை பெற்று வருகின்றார்.

டெல்லி டெஸ்ட்டின்போதான நச்சுத்தன்மை கலந்த வளி இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களான லக்மால், லஹிரு கமகே ஆகியோருடன் இந்திய அணியின் மொஹமட் சமியினையும் பாதித்திருந்தது. அதோடு இவ்வளியினால் இன்னும் சில வீரர்கள் சுவாசிப்பதில் பிரச்சினையை எதிர்கொண்டு தமது சுவாசப் பிரச்சினையை சரிசெய்வதற்கு செயற்கையான முறையில் ஒக்சிஜன் வாயு எடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டிருந்தனர்.

இலங்கை அணியின் போராட்டம் ஒரு நாள் தொடரில் எவ்வாறு அமையும்?

ஒருவரின் உண்மையான தோல்வி என்பது, அவர் விருப்பம் கொண்ட விடயத்தில் எந்த வித முயற்சிகளையும்…

இன்னும் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் அனைத்து வீரர்களுக்கும் மூக்குக் கவசம் அணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்ததுடன், வீரர்களுக்கு ஏற்பட்ட  சிரமங்களுக்கு மருத்துவ உதவி வழங்க போட்டி 22 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தது.

நாளை நடைபெறவுள்ள இந்திய அணியுடனான ஒரு நாள் போட்டியில் தனுஷ்க குணத்திலக்க, இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் உபுல் தரங்கவுடன் இணைந்து  ஆரம்ப வீரராக களமிறங்க எதிர்பார்க்கப்படுகிறது. தரங்க மிகவும் சிறப்பான ஆட்டத்தினை அண்மைய நாட்களில் வெளிப்படுத்தி வருகின்றார்.

இலங்கையின் மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரருக்கான இடத்தினை சதீர சமரவிக்ரம அல்லது லஹிரு திரிமான்ன ஆகிய இருவரில் ஒருவர் எடுக்க, நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் களமிறங்குவார். மெதிவ்சினை அடுத்து நிரோஷன் திக்வெல்ல இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை முன்னெடுப்பார்.

உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவுப் பாதையில் பயணிக்கின்றமை…

தனது இடது கட்டை விரலில் ஏற்பட்ட உபாதை ஒன்றின் காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாடாது போயிருந்த அசேல குணரத்ன ஆறாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக நாளை வர எதிர்பார்க்கப்படுகிறது.

சுரங்க லக்மால், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட நுவான் பிரதீப்புடன் சேர்ந்து இலங்கையின் வேகப்பந்துவீச்சுத் துறையினை முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டி நடைபெறவிருக்கும் தர்மசாலா மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், அணித்தலைவர் திசர பெரேரா மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் இருப்பது இலங்கை அணிக்கு இன்னும் வலுச்சேர்க்கும் விடயமாகும்.

இலங்கை அணியானது இறுதியாக தாம் விளையாடிய 12 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியினை சந்தித்திருப்பதோடு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் 5-0 என வைட் வொஷ் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.