இலங்கை அணிக்கு எதிராக ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
>>இலங்கை டெஸ்ட் தொடரில் வொஷிங்டன் சுந்தர் சந்தேகம்<<
அறிவிக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் குழாத்தில் இதுவரை சர்வதேச அறிமுகம் பெறாத சுழல்பந்துவீச்சு சகலதுறைவீரர் சாரன்ஷ் ஜெயின் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழல் சகலதுறைவீரர் வொஷிங்டன் சுந்தர் இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து சாரன்ஷிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
உள்ளூர் போட்டிகள் மற்றும் இந்தியா A அணிக்காகத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 33 வயதான சாரன்ஷ், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றதனை தொடர்ந்து இலங்கை தொடரில் அறிமுகமும் பெறுவார் என நம்பப்படுகின்றது.
>>LPL அணிகளில் மாற்றம்; தம்புள்ள அணியில் இணையும் சிக்கண்டர் ரஷா!<<
சாரன்ஷ் ஜெயின் 54 முதல்தரப் போட்டிகளில் இதுவரை விளையாடி 188 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளதோடு, 2 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கலாக 31.75 என்கிற துடுப்பாட்ட சராசரியில் 2223 ஒட்டங்களையும் குவித்துள்ளார். சாரன்ஷ் 2025-26 பருவத்திற்கான ரஞ்சி தொடரில் 57.55 என்கிற துடுப்பாட்ட சராசரியில் 518 ஓட்டங்களையும், 30 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஆப்கான் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். 15 பேர் கொண்ட இந்த அணியில் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் இடம்பெற்ற போதும் அவர்களின் உடற்தகுதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அணியில் நீடிப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதேவேளை நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷ் தூபே ஆகியோர் இந்திய டெஸ்ட் குழாத்தில் இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மானவ் சுதர் தொடர்ந்து இந்திய அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதேநேரம் வேகப்பந்துவீச்சில் பும்ராவுடன் மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அணியின் துடுப்பாட்ட வரிசையை நோக்கும் போது டேவ்தத் படிக்கல் மற்றும் ரிஷப் பாண்ட் இற்கு அடுத்தபடியாக விக்கெட்காப்பு வீரர் துருவ் ஜூரெலிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆப்கான் தொடரைப் போலவே, சுப்மன் கில் தலைமையிலான இந்த இந்திய டெஸ்ட் குழாத்தில் KL ராகுல் பிரதி தலைவராகத் தொடர்கின்றார்.
ஒகஸ்ட் 15 இல் தொடங்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் சுமார் 9 ஆண்டுகள் கழித்து இந்தியா இலங்கைக்குச் செல்லும் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணமாகும். முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் ஒகஸ்ட் 23 தொடக்கம் கொழும்பு SSC மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
>>சாமிக்க அபாரம்; புள்ளிப்பட்டியலில் கோல் அணி தொடர்ந்து முதலிடம்<<
இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஒகஸ்ட் 7 முதல் கொழும்பில் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆடுகின்றது.
இந்திய டெஸ்ட் குழாம்:
சுப்மன் கில் (தலைவர்), K.L. ராகுல் (பிரதி தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பாண்ட், சாய் சுதர்ஷன், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், டேவ்தத் படிக்கல், சாரன்ஷ் ஜெயின்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















