பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (23) ஆரம்பமாகவுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருநாள் குழாத்தில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் காவ்யா காவிந்தி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக 25 வயது வேகப்பந்து வீச்சாளரான மல்கி மதாரா 15 பேர் கொண்ட இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை காலை 10.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
>>இலங்கைத் தொடருக்கான பாகிஸ்தான் மகளிர் ஒருநாள், T20I குழாம் அறிவிப்பு<<
இத்தொடரானது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) 2025 – 2029 மகளிர் சம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.
இச்சம்கியன்ஷிப் சுற்றில் இதுவரை இரண்டு தொடர்களில் பங்கேற்றுள்ள இலங்கை மகளிர் அணி, விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் காணப்படுகிறது. 4 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 8 புள்ளிகளைப் பெற்றுள்ள இலங்கை அணி, +0.226 என்ற நிகர ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் தற்போது 3ஆவது இடத்தில் உள்ளது.
இப்புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் தகுதிச்சுற்றுப் போட்டிகளின் மூலம் மேலும் இரண்டு அணிகள் 2029 உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை மகளிர் அணி விவரம்:
சமரி அத்தபத்து (தலைவி), விஷ்மி குணரத்ன, ஹசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹன்சிமா கருணாரத்ன, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சேதனா விமுக்தி, இனோகா ரணவீர, நிமாஷா மீபகே, இமேஷா துலானி, தெவ்மி விஹங்கா, ரஷ்மிகா செவ்வந்தி, மல்கி மதாரா (காவ்யா காவிந்திக்கு பதிலாக)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















