ஜப்னா கிங்ஸ் அணியில் களமிறங்கும் பானுக, துனித் வெல்லாலகே

Lanka Premier League 2026

3
Lanka Premier League 2026

லங்கா பிறீமியர் லீக் (LPL) தொடரின் 6 ஆவது அத்தியாயம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, ஜப்னா கிங்ஸ் அணியானது மன்ஜோத் கல்ரா (Manjot Kalra) மற்றும் மயங்க் கோயல் (Mayank Goel) ஆகிய இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு தொழில்முனைவோரின் தலைமையிலான ‘ஸ்போர்ட்ஸ் கம்யூன்’ (Sports Commune) நிறுவனத்தின் புதிய உரிமையின் கீழ் களமிறங்கும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உரிமையானது கிரிக்கெட் அனுபவம், தொழில்முனைவு, இளைஞர் அபிவிருத்தி, டிஜிட்டல் ஊடகம் மற்றும் அடிமட்ட அளவிலான விளையாட்டு ஈடுபாடு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. ஸ்போர்ட்ஸ் கம்யூன் நிறுவனத்தின் ஊடாக, தெற்காசியா முழுவதிலும் உள்ள வீரர்கள், ரசிகர்கள், இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வர்த்தக பங்காளர்களை இணைக்கும் ஒரு பரந்த விளையாட்டு தளத்தை உருவாக்குவதுடன், லங்கா பிறீமியர் லீக்கில் நான்கு தடவைகள் சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணியை ஒரு வலுவான போட்டித்திறன் மிக்க கிரிக்கெட் அணியாக பலப்படுத்துவதையும் புதிய உரிமையாளர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

அதேவேளை, வரவிருக்கும் புதிய பருவகாலத்திற்கு தயாராகும் வகையில், ஜப்னா கிங்ஸ் அணி இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ மற்றும் இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே ஆகியோரை முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துள்ளது. இது அணிக்கு ஒரு வலுவான உள்ளூர் அடித்தளத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்போர்ட்ஸ் கம்யூன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மன்ஜோத் கல்ரா, டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு முன்னாள் தொழில்முறை கிரிக்கெட் வீரரும், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநரும் (Digital creator), போட்காஸ்ட் (Podcast) தொகுப்பாளரும் ஆவார். அவர் தனது ‘செக்கண்ட் இன்னிங்ஸ் வித் மன்ஜோத் கல்ரா’ (Second Innings with Manjot Kalra) நிகழ்ச்சி ஊடாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆளுமைகளை இணைத்து, விளையாட்டு உலகக் கதைகளையும் நுண்ணறிவுகளையும் வளர்ந்து வரும் டிஜிட்டல் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார். மற்றொரு இணை நிறுவனரான மயங்க் கோயல், டிஜிட்டல் பாதுகாப்பு, காப்புறுதி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைகளில் வணிக நிறுவனங்களை நடத்தும் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆவார்.

இந்த புதிய உரிமையாளர்களை வரவேற்றுப் பேசிய லங்கா பிறீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல, லங்கா பிறீமியர் லீக் 6ஆவது அத்தியாயத்தில் ஜப்னா கிங்ஸ் அணியின் புதிய உரிமையாளர்களாக இணைந்துள்ளஸ்போர்ட்ஸ் கம்யூன்குழுமத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அன்போடு வரவேற்கிறது. கிரிக்கெட், இளையோர் ஈடுபாடு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி ஆகியவற்றில் அவர்களது அர்ப்பணிப்பு இந்த லீக் தொடருக்கு மேலும் வலு சேர்க்கிறது.” என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, ஐபிஜி குளோபல் (IPG Global) நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான அனில் மோகன் கருத்துத் தெரிவிக்கையில், ஸ்போர்ட்ஸ் கம்யூன் நிறுவனம் கிரிக்கெட் அறிவு, வணிக அனுபவம் மற்றும் டிஜிட்டல் ஈடுபாடு ஆகியவற்றை ஜப்னா கிங்ஸ் அணிக்குக் கொண்டு வருகிறது. கடுமையான போட்டி, ரசிகர்களின் ஈடுபாடு மற்றும் வணிக வாய்ப்புகளை மையமாகக் கொண்ட இப்புதிய பருவகாலத்தில், இந்த அணிக்கு ஆதரவளிக்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.” என்றார்.

ஐந்து அணிகள் பங்குபற்றுகின்ற 6ஆவது லங்கா பிறீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 17ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<