மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை (20) நடைபெற்று முடிந்திருக்கும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை 10 ஓட்டங்களால் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
>>ஜிம்பாப்வேயிடம் வரலாற்று தோல்வியடைந்த இலங்கை கிரிக்கெட் அணி<<
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே தலா மூன்று போட்டிகள் வீதம் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் ஆடுகின்றது.
இந்த நிலையில் ஒருநாள் தொடர் முதலாவதாக நடைபெற ஒருநாள் தொடரின் முதல் போட்டி கிரெனடாவில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஹர்ஷிதா சமரவிக்ரம 66 ஓட்டங்களையும், ஹாசினி பெரேரா 61 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். மேற்கிந்திய தீவுகள் மகளிர் பந்துவீச்சில் அதன் தலைவி ஹேலி மெதிவ்ஸ் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.
தொடர்ந்து 241 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, இலங்கை வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி 49.4 ஓவர்களில் 230 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து போட்டியில் தோல்வி அடைந்தது.
>>T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் மதீஷ பதிரண<<
மேற்கிந்திய தீவுகள் துடுப்பாட்டத்தில் ஸ்டெபனி டெய்லர் 66 ஓட்டங்களையும், ஜன்னிலியா கிளாஸ்கோ 50 ஓட்டங்களையும் பெற்று ஓரளவு போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் அசத்திய அனுபவ வீராங்கனை இனோக்கா ரணவீர தனது அசத்தல் சுழல் மூலம் 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார். அத்துடன் கவிஷா டில்ஹாரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை மகளிர் அணிக்கு பக்கபலமாக காணப்பட்டிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை அடைந்துள்ளது. போட்டியின் ஆட்டநாயகியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இனோக்கா ரணவீர தெரிவு செய்யப்பட்டார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















